

வீட்டிற்குள் செருப்பு அணிந்து நடப்பதுதான் இன்றைய கால நவநாகரீகம் என்றாகிவிட்டது. ஆனால், செருப்பு என்பது வீட்டிற்கு வெளியே விடப்பட வேண்டிய ஒரு பொருள். அதை வீட்டிற்குள் அணிவது கால்களை பராமரிக்க என்றாலும், அந்த செருப்பு வீடு முழுக்க கிருமிகளை பரப்பும் தன்மைகொண்டது. வீட்டிற்குள் கூடம் மட்டுமல்லாமல் சமையலறையின் உள்ளேயும் செருப்பு நுழைந்து விட்டது.
ஹிந்து வாழ்வியல் முறைப்படி, சமையலறை என்பது மஹாலக்ஷ்மி அன்னப்பூரணியாக வசிக்கும் இடமாகும். அங்கு செருப்புடன் உலாவுதல் மகாலட்சுமியை அவமதிக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது. சமையலறை நெருப்பில் அக்னிதேவன் இருக்கிறார். அவருக்கு உரிய மரியாதையை அளிக்கவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் வீட்டில் நேர்மறை சக்திகள் மறைந்து நிதிப் பற்றாக்குறை, உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, வறுமை, உடல்நல பாதிப்பு ஆகியவற்றை கொண்டு வரும்.
வாஸ்துப்படி சமையலறையில் செருப்பு அணிவது பெரும் தவறு:
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் அக்னி தேவன் உறையும் இடமாக சமையலறை உள்ளது. மனிதனின் பாதம் மற்றும் காலணிகள் ராகு கேது ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. காலணியுடன் சமையலறையின் உள்ளே நுழையும்போது, ராகுவின் எதிர்மறை ஆற்றல் சமையலறையின் மங்களகரமான சூழலைச் கெடுக்க தொடங்குகிறது. இதனால், சமையலறையின் பாதுகாப்பும், வளமையும் குறைந்து வறுமை பீடிக்க தொடங்குகிறது. உணவுப் பொருட்கள் குறையத்தொடங்கி சமையலறையின் வேலை நேரம் பெருமளவில் குறையத் தொடங்கிறது. இது மோசமான வறுமையின் அடையாளமாக இருக்கிறது.
நிதி நெருக்கடி:
சமையலறையில் காலணி அணிந்து மஹாலக்ஷ்மியை அவமதித்ததன் மூலம், அவளது ஆசி கிடைக்காமல் போகலாம். இதனால், வீட்டில் பொருள் வளம் குறையத் தொடங்கும். உணவுக்கான தேவை அதிகரித்தாலும் அதற்கேற்ற வரவுகள் இருக்காது. எவ்வளவு பணம் வந்தாலும் தங்காமல் செலவாகிக் கொண்டே இருக்கும். நிதி நெருக்கடி அதிகரிக்க தொடங்கினால், வீட்டில் கணவன்– மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் சச்சரவுகள் வரத் தொடங்கும். குடும்ப நிம்மதியும் கெடும்.
ஒருவரின் செருப்பில் மில்லியன் கணக்கில் பாக்டீரியாக்களும் கிருமிகளும் உள்ளன. அந்த செருப்பை வீட்டுக்குள் அணிந்து நடக்கும்போது நோய் பரப்பும் மையமாகத்தான் அது இருக்கும். வீட்டில் ஈரம் மிகுந்த இடத்திலோ, வெப்பமான இடத்திலோ பாக்டீரியாக்கள் செழித்து வளர்கின்றன. இவை சமயலறையில் தயாராகும் உணவு, பானங்கள் ஆகியவற்றிலும் பரவ தொடங்குகின்றன. இதனால், உணவு நஞ்சாகி வயிற்றுவலி, வயிறு உபாதைகள் ஏற்படுகின்றன. இவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
காலையில் சுத்தமாகக் குளித்துவிட்டு சமையலறைக்குள் நுழையுங்கள். நல்ல தூய்மையான ஆடைகளை சமையல் செய்யும் போது உடுத்தியிருங்கள். உடைந்த மற்றும் அழுக்கான பத்திரங்களை அப்புறப்படுத்தி வையுங்கள். எப்போதும் சமையலறையை சுத்தமாக வைத்திருங்கள். அடுப்பு இருக்கும் மேடையின் அருகே சிறிய அளவில் கோலம் ஒன்றை இடுங்கள்.
பளிச்சென்ற வெளிச்சம் இருக்கும் வகையில் மின்சார விளக்கினை அமைத்துக்கொள்ளுங்கள். சமைக்கத் தொடங்கும் முன்னர் அன்னபூரணியை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். இந்த செயல்கள் மகாலட்சுமியை திருப்திப்படுத்தி உங்கள் சமையலறையில் அவரது நிரந்தர வாசத்தை ஏற்படுத்தும்.
சமையலறை என்பது இன்னொரு பூஜையறை என்பதை மனதில் நிறுத்துங்கள். அந்த இடத்தில் சுத்தம், சுகாதாரம், பக்தி, அர்ப்பணிப்பு ஆகிய உணர்வுகள் மிகவும் அவசியம். அங்கு அர்ப்பணிப்பு உணர்வோடு நீங்கள் இருந்தால் உங்களுக்கு தேவையான ஆசிகளை அன்னபூரணி தருவார். அதனுடன் வளமான வாழ்வும் கிடைக்கும்.