
நான்கு சக்கர வாகனங்களை விட இருசக்கர வாகனங்கள் சற்று ஆபத்தானவையே. பெரும்பாலான விபத்துகள் இருசக்கர வாகனங்களை ஓட்டும்போதே நிகழ்கின்றன. இத்தகைய இருசக்கர வாகன விபத்துக்களில் எழுபத்தி ஐந்து சதவிகிதம் ஓட்டுபவரின் அஜாக்கிரதையாலும் நாய்கள் போன்ற பிராணிகளாலும் ஏற்படுபவை. இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டும்போது திடீரென்று குறுக்கே வரும் நாய்களால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து கைகால் எலும்பு முறிவு ஏற்படுவதை நாம் அவ்வப்போது கேள்விப்பட நேருகிறது.
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது எதிரே நாய் போன்ற பிராணிகள் வந்தால் உடனே வேகத்தைக் குறைத்து விடவேண்டும். பொதுவாக, நாய்கள் குறுக்கே பாய்ந்து செல்லும். வாகன ஓட்டிகள் அது சென்று விட்டது என்று நம்பி வாகனத்தை வழக்கமான வேத்திலேயே ஓட்டுவார்கள். ஆனால், பாய்ந்து சென்ற நாய் எதிர்பாராதவிதமாக போன வேகத்திலேயே திரும்பி ஓடிவரும். இது அதன் இயல்பு. இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகிறார்கள்.
எனவே, நாய்கள் குறுக்கே வந்தால் வேகத்தை மிகவும் குறைத்து விடுங்கள். நாய் மீண்டும் நமது பாதையில் குறுக்கிடும் என்பதை மனதில் வைத்து மெதுவாக அந்த இடத்தைக் கடந்து செல்லுங்கள். இதன் மூலம் நீங்கள் விபத்தைத் தவிர்த்து பாதுகாப்பாக, நிம்மதியாக போக வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரலாம்.
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது சிலர் இடது பக்க சாலையில் திரும்ப வேண்டிய சூழ்நிலையில் முன்னே செல்லும் வாகனத்தை முந்திச் சென்று சற்றும் ஆபத்தை உணராமல் உடனே சட்டென இடது பக்கம் திரும்பி விடுகிறார்கள். இதன் மூலமும் விபத்துகள் நிகழ்வதை நாம் பார்க்கிறோம். முந்திச் செல்லும் வாகனம் சட்டென இடது பக்கம் திரும்ப இருப்பதை அறியாத வாகன ஓட்டி அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகிறார்.
எனவே, இடது பக்கம் திரும்பிச் செல்ல நினைப்பவர்கள் தனது வாகனத்தை இடதுபக்கச் சாலையில் செலுத்தி பின்னர் நிதானமாக முன்னே ஏதும் வாகனம் செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நிதானமாகத் திரும்பினால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
பலர் இரவு நேரங்களில் முன்பக்க லைட்டை அதாவது ஹெட்லைட்டை போடாமலேயே ஓட்டுபவர்களாக இருக்கிறார்கள். இதனால் எதிரில் வாகனம் வருகிறது என்பதை அறியாமலே வாகனத்தை ஓட்டி விபத்துக்குள்ளாகிறார்கள். ஹெட்லைட் எரியாமல் வாகனம் வந்தால் பாதையில் நடந்து செல்பவர்கள் பாதையைக் கடக்கும்போது எதிரில் வாகனம் வந்து கொண்டிருப்பதை அறியாமல் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் நேரிடுகிறது. எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் கட்டாயமாக ஹெட்லைட்டை எரிய விட்டே வாகனத்தை ஓட்டுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பொதுவாக, இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் இயல்பான வேகத்திலேயே தமது வாகனங்களை ஓட்டப் பழக வேண்டும். இயல்பான, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை ஓட்டும்போது வாகனம் நமது கட்டுப்பாட்டில் இருக்கும். தேவையில்லாத விபத்துகளும் தவிர்க்கப்படும்.
விபத்து என்பது இருதரப்பினருக்கும் துயரத்தையும் பொருள் இழப்பையும் ஏற்படுத்தக் கூடியது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டும்போது ஓட்டுபவரும் பின்னால் அமர்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியப் பழக வேண்டும். விபத்தில்லா சூழ்நிலையை உருவாக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து நாம் இருசக்கர வாகனங்களை இயக்க வேண்டும்.