எல்லோரும் அமாவாசை அன்று முதலில் பிள்ளையார் பொம்மை, கலசம் (வழக்கம் இருப்பவர்கள்), மரப்பாச்சி பொம்மைகள் இவற்றை எடுத்து வைத்துவிடுவார்கள். பிறகுதான் ஒவ்வொரு படியிலும் பொம்மைகளை அடுக்கி வைப்பார்கள். சாதாரணமாக ஒன்பது படிகள் அமைப்பார்கள். எதனால் ஒன்பது என்கிற கணக்கு வந்தது?
உயிர்களின் பரிணாம வளர்ச்சி படிப்படியாக எப்படி முன்னேறியது என்பதை அறிந்துகொள்ளும் விதமாக படிகள் அமைக்கப்படுகின்றன. கீழ் நிலையில் இருப்பது முதல் படி என்று கணக்கு கொண்டால் மேல் நிலையில் இருப்பது ஒன்பதாவது படியாக அமையும்.
உடம்பால் உணரக்கூடிய ஓரறிவு உயிரினங்களான மரம், செடி, கொடி, புல், பூண்டு போன்ற தாவர இன பொம்மைகளை முதல் படியில் வைத்து, முழுமுதற் கடவுள் கணபதியும், கலசமும் ஒன்பதாவது படியான மேல்படியில் வைக்கப்படும்.
சரி, மரப்பாச்சி பொம்மைகள் வைக்கும் பழக்கம் எப்படி வந்தது?
முன் காலங்களில், வீட்டிலிருந்து ஒரு பெண் மணம் ஆகி கணவன் வீட்டுக்குப் போகிறாள் என்றால் அவளுடன் ஜோடி மரப்பாச்சி பொம்மைகளை கொடுத்தனுப்புவது வழக்கமாக இருந்தது. காரணம், மரப்பாச்சி பொம்மைகளை கருங்காலி மரத்தில் மட்டுமே செய்து வந்தார்கள். அந்த மரம் மருத்துவ சக்தி வாய்ந்தது. இக்காலத்தில் வேப்பமரம், சந்தன மரம் ஆகியவைகளாலும் மரப்பாச்சி பொம்மைகள் செய்கிறார்கள். மணமாகி செல்லும் பெண் தனக்கு உடல் நலம் சரியில்லை என்றால், மருத்துவரிடம் போகாமல், ஒரு சந்தன கட்டையில் மரப்பாச்சி பொம்மையின் ஒரு முனையால் நன்கு தேய்த்து அந்த விழுதினை உள்ளுக்கு சாப்பிடுவாள் அல்லது சருமத்தில் பூசிக்கொள்வாள். சர்வரோக நிவாரணியான மரப்பாச்சி பொம்மையை தாய் விட்டு சீதனமாகவே கொடுத்து வந்தார்கள்.
மேலும் ஜோடியாக மரப்பாச்சி பொம்மை வீட்டில் இருந்தால், கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். குழந்தைகளும் நல்லபடியாக பிறக்கும் என்கிற நம்பிக்கை இருந்து வருகிறது.
நவராத்திரிக்கு கொலுப்படிகளில் மண் பொம்மைகளை வைப்பது என்பதன் தத்துவம் என்ன? மனிதன், மண்ணிலே தோன்றி மண்ணிலே ஐக்கியம் ஆகிறான் என்பதுதான் மண் பொம்மைகளை வைத்து வழிபாடு செய்து வருவதின் தத்துவம் ஆகும்.