சிலர் வீட்டிற்கு அலங்கார மரங்களை வளர்க்கும் பொழுது அந்த மரங்களை வைத்ததற்கான காரணம் வித்தியாசமானதாக இருக்கும். அதுபோல், ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தை இப்பதிவில் காண்போம்.
பத்து வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ளவர்களின் வீட்டை ஒட்டிய தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்து விட்டது. இதைப் பார்த்தவர்கள் அனைவரும் பதறிப் பயந்து போய் அர்ஜூனா, இந்திரன் என்று பிரார்த்தித்துக் கொண்டு நடுநடுங்கி போயிருந்தனர்.
இதைக் கேள்விப்பட்ட அவர்களின் உறவினர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்து இடி விழுந்த வீட்டில் இருக்கக் கூடாது. வாஸ்துபடி அது முறையல்ல. ஆதலால் எங்கள் வீட்டிற்கு வந்து விடுங்கள். வீட்டை பூட்டிவிட்டு போய்விடுவோம் என்று அழைத்தனர். 72 வயதான அந்த பெரியவர் என் பிள்ளைகள் எல்லாம் படித்து, மகன் திருமணம் முடித்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
மகளும் திருமணமாகி நன்றாக செட்டில் ஆகிவிட்டார். அவருடன் தான் நாங்கள் இங்கு தங்கி இருக்கிறோம். என் ஓய்வூதிய பணத்தில் பார்த்து பார்த்து கட்டிய வீடு இது. ஆதலால் இதை விட்டு எங்கும் வரமாட்டோம். இவ்வளவு நல்ல காரியம் நடந்த வீட்டை விட்டு வருவதற்கு எங்களுக்கும் பிடித்தமில்லை. எங்களை அழைத்ததற்கு மிக்க நன்றி என்று கூறி அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.
பிறகு, வாஸ்து நிபுணரை அழைத்து வந்து அவரிடம் கேட்ட பொழுது, வீட்டில் எந்த விதமான வாஸ்து குறைபாடும் இல்லை. இடி விழுந்த மரம் இருந்த இடத்தை தோட்டமாக பச்சை புல்வெளி ஏதும் வைக்காமல் அவற்றினை சேர்த்து இரண்டு அறைகள் கட்டி விடுங்கள். வேறொன்றும் செய்ய வேண்டாம். குடியிருக்கலாம். பயப்பட வேண்டியதில்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
எல்லாம் சரி! என்றாலும், வீட்டை அடையாளம் கூறுபவர்கள் "இடி விழுந்த வீடு" என்று கூறியது பெரியவருக்கு மிகவும் மன வருத்தத்தை அளித்தது. அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து முன் வாசலில் அழகாக ஊஞ்சல் வைத்தார். அதனை சுற்றிலும் பவளமல்லி, சரக்கொன்றை, செவ்வரளி, நந்தியாவட்டை போன்ற மரங்களையும் நட்டு வைத்தார். அதனை ஒட்டி ஒரு அடி பம்பு பைப்பையும் போட்டுவிட்டார்.
அதன் பிறகு அந்த வீட்டை இப்பொழுது அடையாளம் கூறும் பொழுது அலங்கார மரங்கள் இருக்குமே அந்த வீடு தானே என்று அடையாளம் கேட்டு வருகிறார்கள். இப்பொழுது பெரியவருக்கு 82 வயது நிறைவடைந்துவிட்டது. என்றாலும், மனைவி, மக்களோடு நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்.
சீசனுக்கு தகுந்தாற்போல் அந்த அலங்கார மரங்கள் மலர் பூத்து, மணம் பரப்பி வருவோர், போவோர் அனைவருக்கும் உதவி புரிந்து வருகிறது.
அனைவரும் அடையாளமாக அலங்காரச் செடி, மரங்களை கூறி வருவதால் பெரியவருக்கு மன நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்கிறது. ஆதலால் நல்ல அடையாளத்தை கூற வேண்டுமானால் இதுபோல் ஏதாவது தர்சம்பந்தமான நிகழ்வு நடந்திருந்தால், அதற்கு இதுபோன்ற மரங்களை வளர்த்தும் பெயர் மாற்றம் செய்யலாம்.