வெறும் படிப்பு மட்டும் போதாது! பிள்ளைகளை வெற்றியாளராக்கும் அந்த 7 ரகசியங்கள்!

Parenting tips
Parenting tipsAI Image
Updated on

ன்றைய சூழலில் குழந்தைகளை வெறும் படிப்பாளிகளாக வளர்ப்பதைவிட, சுயசார்பும் நற்பண்புகளும் கொண்டவர்களாக உருவாக்குவதே பெற்றோரின் மிகச் சிறந்த கடமையாகும். எதிர்காலத்தில் பிள்ளைகள் சிறந்து விளங்குவதற்குத் தேவையான ஏழு முக்கியமான குணங்களைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

சோம்பலுக்கு முற்றுப்புள்ளி!

விடுமுறை நாட்கள் என்றாலே பிள்ளைகளை மதியம் வரை தூங்க வைப்பதும், அவர்கள் படுக்கையிலேயே சோம்பலாகக் காலத்தைக் கழிப்பதும் பல வீடுகளில் நடக்கும் வழக்கமான ஒன்றாகும். இந்த பழக்கத்தை முதலில் மாற்ற வேண்டும். மற்ற நாட்களைப் போலவே விடுமுறை நாட்களிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் படுக்கையை விட்டு எழவேண்டும் என்ற விதியை உருவாக்குங்கள். காலையிலேயே சுறுசுறுப்பாக எழுவது அவர்களது உடலையும் மனதையும் எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

வீட்டுப் பாடங்களை அலட்சியப்படுத்தக் கூடாது!

பள்ளிப் பாடங்களையும் வீட்டுப் பாடங்களையும் சாதாரணமாகவோ அல்லது அலட்சியமாகவோ நினைக்கக் கூடாது. கல்வியை ஒரு சுமையாகக் கருதாமல், குழந்தைகள் தங்களது வீட்டுப் பாடத்தைச் சரியாகச் செய்கிறார்களா என்று கண்காணித்து, அவர்களுக்குத் தெரியாதவற்றைச் சொல்லித்தர வேண்டும். விடுமுறை நாட்களிலும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைப் படிப்பதற்கென ஒதுக்குவதைப் பிள்ளைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும்.

இளமையிலேயே தனித்திறமைகளை வளர்த்தல்!

பிள்ளைகளைப் படிப்புடன் மட்டும் நிறுத்திவிடாமல், அவர்களின் மற்ற தனித்துவங்களையும் வளர்ப்பதற்குப் பெற்றோர் உதவவேண்டும். ஓவியம், இசை, கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற பல்வேறு தனித் திறமைகளை மிக இளைய வயதிலேயே பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி, அவற்றில் அவர்கள் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். இளமையிலேயே இத்தகைய கலைகளைக் கற்றுக்கொள்வது அவர்களின் சிந்தனைத் திறனையும் ஆளுமையையும் பல மடங்கு உயர்த்தும்.

இதையும் படியுங்கள்:
கூட்ட நெரிசலுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்களே... கோயிலாக இருந்தாலும் தவிருங்கள்!
Parenting tips

வன்முறையற்ற நன்னடத்தை!

நண்பர்களுடனோ அல்லது வீட்டிலோ சண்டைகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும்போது கத்துவதோ, அடிப்பதோ, மற்றவர்களைக் காயப்படுத்துவதோ கூடாது என்பதை ஆணித்தரமாக அவர்களுக்கு உணர்த்தவேண்டும். கோபம் அல்லது ஏமாற்றம் போன்ற உணர்வுகளை அமைதியான முறையில் வெளிப்படுத்தவும், பிரச்சினைகளைப் பேசித்தீர்க்கும் கலையையும் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுத்தர வேண்டும். மேலும், பிள்ளைகளுக்கு நல்ல முன்னுதாரணமாகப் பெற்றோரே திகழவேண்டியது அவசியமாகும்.

அடிப்படை நற்பண்புகளும் நாகரிகமும்!

குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயதிலேயே அடிப்படை நற்பண்புகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். "தயவு செய்து", "நன்றி" மற்றும் "மன்னிக்கவும்" போன்ற சொற்களைச் சரியான இடங்களில் பயன்படுத்திப் பேச அவர்களுக்குப் பழக்க வேண்டும். பிறரின் உணர்வுகளுக்கும் உடைமைகளுக்கும் மதிப்பளிக்கும் பழக்கம் இந்த சிறுவயதிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

வீட்டு வேலைகளின் முக்கியத்துவம்!

பிள்ளைகளுக்குப் புத்தக அறிவு எவ்வளவு முக்கியமோ, அதேபோலக் கைவேலைகளும் வீட்டு வேலைகளும் மிக முக்கியமாகும். செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது, சாப்பிட்ட தட்டைக் கழுவுவது, துணிகளை மடித்து வைப்பது மற்றும் வீட்டைப் பெருக்குவது போன்ற வேலைகளை அவர்கள் செய்யக் கற்றுக்கொடுக்க வேண்டும். இது அவர்களுக்கு உழைப்பின் மதிப்பை உணர்த்துவதோடு, பெற்றோர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தையும் தரும். இதனால் இளம் வயதிலேயே எந்த ஒரு வேலையையும் தாழ்வாக நினைக்காத மனப்பான்மை அவர்களிடம் வளரும்.

இதையும் படியுங்கள்:
மார்க் குறைய இதுதான் காரணம்! உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்கும் எளிய வழிகள்!
Parenting tips

சுத்தம் செய்தல்!

குழந்தைகள் விளையாடும்போதோ அல்லது ஏதேனும் வேலை செய்யும் போதோ அறையை அசுத்தம் செய்வது இயல்பு. அவ்வாறான நேரங்களில் பெற்றோரே அதைச் சுத்தம் செய்ய முனையாமல், பிள்ளைகளையே அவற்றைச் சுத்தம் செய்யச் சொல்லவேண்டும். விளையாடி முடித்த பொம்மைகளையும், கலைத்துப்போட்ட புத்தகங்களையும் அவர்களையே எடுத்து உரிய இடத்தில் வைக்கப் பழகவேண்டும். தரையில் ஏதேனும் கொட்டி விட்டால், அதை அவர்களையே சுத்தம் செய்ய வைக்க வேண்டும்.

இந்த ஏழு நற்பண்புகளையும் சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் ஆழமாக விதைத்து விட்டால், அவர்கள் பின்நாளில் சமூகத்தில் மிகச்சிறந்த குடிமக்களாக உயர்ந்து விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

logo
Kalki Online
kalkionline.com