

குழந்தைகள் வளர்ப்பு என்பது சிரமமான விஷயம் தான். ஆனால் அவர்களின் எதிர்காலமே இதில் தான் அடங்கியுள்ளதை அனைத்து பெற்றோர்களும் புரிந்து கொள்ளவேண்டும். மனிதர்களின் வாழ்க்கை அன்பில் தான் அடங்கிவிடுகிறது. அதுவும் குழந்தை என்றால் சொல்லவா வேண்டும். புதிதாக பெற்றோர் ஆகும் நபர்களுக்கு குழந்தைகள் வளர்ப்பு பற்றி பெரிதாக தெரிந்திருக்காது. அதுவும், நவீன காலத்தில் பல பெண்கள் குழந்தைகளை பெரியவர்கள் துணையின்றி நகரத்தில் தனியாக வளர்க்கிறார்கள். அப்படி தனியாக குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் சில விஷயத்தை தெரிந்து கொள்வது கட்டாயமாகும்.
ஒரு பிறந்த குழந்தை சரியாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து அழுகும். அதற்கு பசியாற்றவேண்டும். இதை தாண்டி இயற்கை உபாதை கழித்தால் அழுகை குரல் கேட்கும். இதை தவிர எதற்கு அழுதாலும் ஒன்று அன்னையை தேடுவதற்காக இருக்கும் அல்லது வயிறு வலியாக இருக்கும். ஒரு பிறந்த குழந்தைக்கு எதுவுமே சொல்லத் தெரியாது என்பதால் அனைத்திற்கும் அழுகவே செய்யும். உடனே பதற்றமடையாமல் என்ன நடந்துள்ளது என்று பார்த்த பிறகு தான் அதை சரி செய்யவேண்டும்.
அதேபோல பிறந்த குழந்தைகள் தூங்கும் நேரத்தை சரியாக சொல்லிவிட முடியாது. அவர்கள் தோன்றும் நேரத்தில் தூங்குவார்கள். சில சமயங்கள் நீண்ட நேரம் கூட முழித்தே இருப்பார்கள். அதனால்தான் குழந்தை தூங்கும் நேரத்தில் அம்மா தூங்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
1 முதல் 3 வயதில் ஒரு குழந்தை வைத்திருக்கிறீர்கள் என்றால் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தை அதிக நேரம் மௌனமாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஏனெனில் குழந்தைகள் விபரீதமாக ஏதோ செய்தால் மட்டுமே அவர்கள் அமைதியாக இருப்பார்கள். உடனடியாக அருகில் சென்று பார்க்க வேண்டும். குறிப்பிட்ட வயது வரை அம்மாக்களுக்கு நிம்மதியே இல்லை. ஏனென்றால் குழந்தைகள் அம்மா அம்மா என்று காலை சுற்றியே வருவார்கள். பாத்ரூமிற்கு கூட செல்ல முடியாத சூழல் உருவாகும். அம்மாவின் அரவணைப்பிலேயே வாழவேண்டும் என்று அவர்கள் எண்ணுவதால் இப்படி செய்வது இயல்பே. ஆனால் ஒரு புதிய பெற்றோருக்கு இது மன உளைச்சலை தரலாம்.
சிறு வயது குழந்தைகள் உள்ள வீட்டில் எந்த பொருளும் இருக்கும் இடத்தில் இருக்காது. எதை எடுத்தாலும் வாயில் எடுத்து போடுவது, தூக்கி எறிந்து உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். அப்போது அவர்களை கத்தி கண்டிக்காமல் அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்வதே சிறந்ததாகும்.
குழந்தைகளின் செயல்கள் சமூகத்தில் உள்ள பிரதிபலிப்பே. அதனால் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். அதே போல் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள அவர்களுக்கு தைரியத்தை சொல்லி கொடுக்க வேண்டும்.