
இன்றைய நவீன வாழ்க்கையில் மனிதர்களின் அன்றாட சவால்களாக மன அழுத்தம், பதற்றம் மற்றும் தனிமை உணர்வு போன்றவை இருக்கின்றன. இவற்றிற்கு மருத்துவர்களையும் சிகிச்சையையும் நாடுவதை விட செல்லப்பிராணிகளை நாடுவது மிகச் சிறந்த உயிரோட்டமான, எளிய தீர்வாக இருப்பதாக உளவியல் ஆலோசகர்களும் சமீபத்திய மருத்துவ உளவியல் ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. அந்த வகையில், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் மன அழுத்தத்திற்கு எப்படி மருந்தாகின்றன என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
உளவியல் ரீதியானப் பிணைப்பு: ஒருவர் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாயையோ, பூனையையோ கொஞ்சும்போது அல்லது தொடும்போது மனித உடலில் காதல் ஹார்மோன் அல்லது பிணைப்பு ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஆக்சிடோஸின் (Oxytocin) என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. இந்த ஹார்மோன் மகிழ்ச்சி உணர்வை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தை குறைத்து ஆறுதல் தருகிறது. மேலும், மன அழுத்தத்திற்குக் காரணமான கார்டிசால் (Cortisol) என்ற ஹார்மோனின் சுரைப்பையும் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தனிமையைக் குறைத்தல்: நகரங்களில் வசித்து பணிக்குச் செல்லும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே காணப்படும் தனிமை உணர்வையும், தனிமையில் வாழும் முதியோர்களுக்கும் செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் பூனையோ, நாயோ எப்போதும் அவர்களுடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதோடு, பாதுகாப்பு மற்றும் நேசத்தை செல்லப்பிராணிகள் வழங்குகின்றன.
உடல் இயக்கத்தை அதிகரித்தல்: நாயை நடைப்பயிற்சிக்கு தினமும் அழைத்துச் செல்வது நாய் வளர்ப்பவர்களின் அன்றாட வேலையாக உள்ளது. ஆகவே, செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு உடல் இயக்கம் அதிகரித்து உடல் பருமன் மற்றும் இதய நோய் வரும் அபாயம் குறைகிறது.
சமூகத் தொடர்பு: செல்லப் பிராணிகளுடன் பூங்காக்களிலும் பொது இடங்களிலும் நடப்பவர்களுக்கு மற்றவர்களுடன் எளிதாக உரையாடும் வாய்ப்பு கிடைப்பதோடு, சமூகத் தொடர்புகளை மேம்படுத்தி பதற்றம் மற்றும் சமூக பயத்தை குறைப்பதோடு, மன அழுத்தத்தைக் குறைத்து, மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
வாழ்வின் நோக்கம்: செல்லப் பிராணிகளை வளர்ப்பதனால் பொறுப்புணர்வு அதிகரித்து யாரோ ஒருவருக்கு நாம் தேவைப்படுகிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த உணர்வு வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தையும் நோக்கத்தையும் அளிக்கிறது.
ஆகவே, செல்லப் பிராணிகளை வளர்ப்பது இயற்கையான வழியில் மனநலத்தை பாதுகாப்பதோடு, மருத்துவ செலவை குறைத்து நாய்கள் மற்றும் பூனைகள் அளிக்கும் நிபந்தனையற்ற அன்பு மற்றும் பாசம் ஒரு சிறந்த மன அழுத்தத்திற்கான மாற்று சிகிச்சை முறையாக உள்ளது.