

Plato Tips for Children: இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளைப் படிக்க வைப்பது என்பது பெற்றோர் களுக்கு ஒரு பெரிய சவாலாகவே மாறிவிட்டது. மார்க் வாங்க வேண்டும், ரேங்க் எடுக்க வேண்டும் என்று குழந்தைகளை நாம் பாடாய்ப்படுத்துகிறோம். ஆனால், எந்த ஒரு கட்டாயமும் இல்லாமல் குழந்தைகளை மிகச் சுலபமாகப் படிக்க வைக்க முடியும்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க நாட்டைச் சேர்ந்த மாபெரும் அறிஞர் பிளேட்டோ (Plato) இதற்கான ஒரு சூப்பர் ஐடியாவைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.
யார் இந்த பிளேட்டோ?
பிளேட்டோ ஒன்றும் சாதாரண ஆள் கிடையாது. கி.மு 420 காலகட்டத்தில் ஏதென்ஸ் நகரில் மிகவும் வசதியான ஒரு பெரிய ராஜ குடும்பத்தில் பிறந்தவர். இவ்வளவு பெரிய பின்புலம் இருந்தாலும், பிளேட்டோ தத்துவத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டு மாமேதை சாக்ரடீஸின் மாணவராக மாறினார். பின்னர்ப் புகழ்பெற்ற 'அகாடமி' என்ற கல்விக்கூடத்தை நிறுவி, உலகமே வியக்கும் அரிஸ்டாட்டில் போன்ற பல அறிஞர்களை உருவாக்கிய பெருமை இவரையே சேரும்.
கட்டாயக் கல்வியின் ஆபத்து!
குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி பிளேட்டோ சொன்ன ஒரு விஷயம் இன்றைக்கும் நூறு சதவீதம் பொருந்தும். ஒரு குழந்தையை மிரட்டியோ, அடித்தோ அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தோ ஒரு விஷயத்தைக் கற்க வைக்கவே கூடாது என்பதுதான் அவருடைய ஆணித்தரமான கருத்து. நீங்கள் கண்டிப்பு காட்டி ஒரு குழந்தையைப் படிக்க வைத்தால், அது பயத்தின் காரணமாக உங்களுக்குக் கீழ்ப்படியுமே தவிர, அந்தச் சின்னஞ்சிறு மூளைக்குள் இருக்கும் உண்மையான திறமை ஒருபோதும் வெளியே வராது.
திறமையைக் கண்டுபிடிக்கவும்!
ஒரு குழந்தைக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் இருக்கிறதோ, எது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ அதன் வழியாகக் கல்வியைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். அதாவது, விளையாட்டு அல்லது அவர்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளின் மூலமாகப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்போது, அவர்கள் எந்தவித அழுத்தமும் இன்றிப் படிப்பார்கள்.
அப்படி அவர்கள் ரசித்துப் படிக்கும்போதுதான், அந்தப் பிஞ்சு மனதுக்குள் ஒளிந்திருக்கும் தனித்துவமான திறமை அல்லது 'ஜீனியஸ்' என்ன என்பதைப் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் மிகத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.
ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித்துவமான திறமையோடுதான் பிறக்கிறது. எல்லோரையும் ஒரே வரிசையில் நிற்க வைத்து, ஒரே மாதிரியான கல்வியைக் கொடுத்து, அதை அப்படியே மனப்பாடம் செய்யச் சொல்வது அந்தத் திறமையைக் கொல்வதற்குச் சமம். பிளேட்டோ சொன்னது போல, கல்வியின் நோக்கம் குழந்தைகளை அவர்கள் விரும்பும் பாதையில் அன்பாக வழிநடத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களைக் கட்டாயப்படுத்துவதாக இருக்கக் கூடாது.
எனவே, உங்கள் குழந்தைகளின் கைகளில் புத்தகத்தை ஒரு சுமையாகத் திணிப்பதற்குப் பதிலாக, அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான கற்றல் முறைகளை உருவாக்குங்கள். அப்போதுதான் உங்கள் வீட்டிலும் ஒரு புதிய அறிவாளி உருவாவார்.