உங்க இ - பைக் வெடிக்காம இருக்க உடனே இதை செய்யுங்க...

E-Bike
E-Bike
Published on

சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கி செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக, உலகம் முழுவதும் மின் வாகனங்கள் விரைவாக வளர்ச்சி பெற்று வருகின்றன. இந்தியாவில் குறிப்பாக, இ-பைக்குகள் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாற்றாக இவை செயல்படுவதால், பசுமையை நோக்கி நகரும் சிறந்த முயற்சியாக கருதப்படுகின்றன. இருப்பினும், இவை தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் போதிய அளவில் பின்பற்றப்படவில்லை என்பதே உண்மை. இதன் காரணமாக பல்வேறு விபத்துகள் தொடர்ந்து நிகழ்கின்றன.

பேட்டரி விபத்துகளுக்கான முக்கிய காரணங்கள்:

இ-வாகனங்களில் ஏற்படும் விபத்துகளுக்குப் பெரும்பாலும் பேட்டரி சம்பந்தப்பட்ட கோளாறுகள் முக்கியக் காரணமாகின்றன. பேட்டரியை சரியாக பராமரிக்காதது, தரமற்ற பேட்டரிகளைப் பயன்படுத்துவது, சரியான முறையில் சார்ஜ் செய்யாதது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்படாதது போன்றவை விபத்துகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, வெயிலில் அல்லது காற்றோட்டமில்லாத இடங்களில் சார்ஜ் செய்வதால் பேட்டரி வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

தரச்சான்றிதழ் இல்லாத பேட்டரிகளை பயன்படுத்துவது

சில விற்பனையாளர்கள் மக்களிடம் விரைவில் விற்பனை செய்யும் நோக்கில் தரம் குறைந்த பேட்டரிகளை பயன்படுத்துகின்றனர். இவை பயனாளர்களின் உயிருக்கு நேரடி ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, வாடிக்கையாளர்கள் தரமான மற்றும் சரியான சான்றிதழ்களுடன் கிடைக்கும் பேட்டரிகளை தேர்வு செய்ய வேண்டும்.

சார்ஜ் செய்யும் முறைகள் கவனிக்க வேண்டியவை

சார்ஜ் செய்யும் போது சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வீடுகளில் காற்றோட்டமுள்ள இடங்களில் மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும். சார்ஜ் செய்யும் போது வெளியேறும் நச்சு வாயுக்கள் சில நேரங்களில் எரியும் தன்மையுடையவையாக இருக்கலாம். மழைக் காலத்தில் அதிக பவர் கொண்ட பேட்டரிகளால் மின் அதிர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வெயில்காலத்தில் ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக பேட்டரிகள் வெடிக்கும் அபாயம் அதிகமாகும்.

பேட்டரி பராமரிப்பு வழிமுறைகள்

  • மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை பேட்டரியை பரிசோதனை செய்து பராமரிக்க வேண்டும். காற்றோட்டமற்ற இடங்களில் வாகனத்தை வைக்கக்கூடாது.

  • எலி கடிப்புகள், தூசி, ஈரப்பதம் போன்றவை பேட்டரியை சேதப்படுத்தக் கூடியவை.

  • நவீன தொழில்நுட்பம் கொண்ட பாதுகாப்பான சார்ஜர்களையே பயன்படுத்த வேண்டும்.

விபத்து நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

விபத்து ஏற்பட்டால், குறிப்பாக பேட்டரி எரியும் போது, வாகனத்திற்கு அருகில் செல்லாமல் உடனடியாக விலகி நிற்க வேண்டும்.

ஒவ்வொரு இ-பைக் உரிமையாளரும் தீ அணைப்பானை வீட்டிலும் வாகனத்திலும் வைத்திருக்க வேண்டும்.

விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தீ அணைப்பானை வழங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

மின் வாகனங்கள் பசுமையான எதிர்காலத்திற்கான வழிகாட்டிகளாக இருப்பினும், அவற்றின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் நடைமுறைகளும் மேலும் பலப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, விற்பனையாளர்கள் தேவையான தகவல்களை தெளிவாக வழங்கும்போது மட்டுமே, இ-வாகனத்தின் பயணம் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் அமையும்.

இதையும் படியுங்கள்:
வெயில் கால வயிற்றுப் பிரச்சனைகள்… இதோ எளிய இயற்கைத் தீர்வுகள்!
E-Bike

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com