

பல பெண்களுக்கு இருக்கும் ஒரு பொதுவான ஏக்கம், ‘என் கணவர் கொஞ்சம் மாறமாட்டாரா?’ என்பதுதான். ஒருவரை வற்புறுத்தி மாற்ற முயன்றால், சண்டைகளும் விரிசல்களும்தான் அதிகமாகும். அதற்குப் பதிலாக, பெண்கள் தங்களின் அணுகுமுறையிலும், சுய சிந்தனையிலும் சில சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தாலே போதும்; கணவர்களின் போக்கில் அசாத்தியமான நேர்மறை மாற்றங்கள் நிகழத்தொடங்கும். அதற்கு உதவும் 10 எளிய வழிகளை இக்கட்டுரையில் காண்போம்.
கணவரே உங்களின் மொத்த உலகமல்ல: கணவரையே உங்களின் உலகமாக மாற்றி, அவர்தான் உங்களின் வாழ்வின் மையம் என்று நினைப்பதை முதலில் நிறுத்துங்கள். உங்கள் வாழ்க்கையின் கதாநாயகி நீங்கள்தான். உங்களின் மகிழ்ச்சி, லட்சியம், தனித்தன்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் உங்களை நேசித்து வாழத் தொடங்கும்போது, கணவர் உங்களை இன்னும் அதிகமாக மதிக்கத் தொடங்குவார்.
தனிமை: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. எப்போதும் கணவருக்குப் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்காமல், அவருக்கென்று கொஞ்சம் தனிப்பட்ட நேரத்தைக் கொடுங்கள். உங்களுக்கும் ஒரு தனி உலகத்தை உருவாக்குங்கள். இந்தச் சிறிய இடைவெளிதான் இருவருக்குள்ளும் இருக்கும் ஈர்ப்பையும் பாசத்தையும் எப்போதும் புதுப்பித்துக்கொண்டே இருக்கும்.
ஃப்ரீயாக இருங்கள்/ ஃப்ரீயாக விடுங்கள்: அவர் வேலை நிமித்தமாக வெளியே இருக்கும்போது நாள் முழுவதும் தொடர்ந்து போன் செய்வதையோ, மெசேஜ் அனுப்புவதையோ குறையுங்கள். அதேபோல், ‘நான் இந்த உடை உடுத்தலாமா?’, ‘என் ஹேர்ஸ்டைல் நன்றாக இருக்கிறதா?’ என ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் அவரது அங்கீகாரத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் தேர்வுகளில் தன்னம்பிக்கை இருக்கட்டும்.
சுய சம்பாத்தியம்: ஒவ்வொரு சின்னச் சின்னத் தேவைக்கும் கணவரிடம் கையேந்தும் நிலையை மாற்றி, உங்களுக்கென்று ஒரு சுய சம்பாத்தியத்தை உருவாக்குங்கள். பொருளாதார ரீதியாக நீங்கள் யாரையும் சார்ந்து இருக்கவில்லை என்கிற நிலை, உங்களை இன்னும் கம்பீரமாகக் காட்டும்
குறைகூறுவதை விடுத்துப் பாராட்டுங்கள்: கணவரிடம் இருக்கும் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டி நச்சரித்துக் கொண்டிருக்காமல், அவர் செய்யும் சின்னச் சின்ன நல்ல விஷயங்களையும், உதவிகளையும் மனதாரப் பாராட்டுங்கள். இது அவர் உங்களுக்காக இன்னும் பல நல்ல காரியங்களைச் செய்யவேண்டும் என்கிற எண்ணத்தைத்தூண்டும்.
நேரடியாகவும் தெளிவாகவும் பேசுங்கள்: ஆண்களுக்குப் பொதுவாகப் பெண்களின் மறைமுகக் குறிப்புகள் புரிவதில்லை. எனவே, உங்களுக்கு என்ன தேவை என்பதைப் புலம்பலாகவோ, கோபமாகவோ வெளிப்படுத்தாமல், தெளிவாகவும் நேரடியாகவும், அதே சமயம் இதமாகவும் எடுத்துச்சொல்லுங்கள்.
உங்கள் மகிழ்ச்சி உங்களிடம்: அவர் உங்களை வெளியில் அழைத்துச் சென்றால்தான் மகிழ்ச்சி, அவர் பேசினால்தான் நிம்மதி என்று உணர்வுப்பூர்வமான சாவியை அவர் கையில் கொடுக்காதீர்கள். பிடித்த பாடல்களைக் கேட்பது, புத்தகம் படிப்பது, தோழமைகளுடன் நேரம் செலவிடுவது என நீங்களே மகிழ்ச்சியாக இருக்கலாம்.
எல்லைகள்: அன்பு செலுத்துவது வேறு, அடிமையாக இருப்பது வேறு. சுயமரியாதையைக் காயப்படுத்தும் தேவையற்ற கோபங்களுக்கும், தவறான நடத்தைகளுக்கும் உடன்படாதீர்கள். எதை சகித்துக் கொள்ளலாம், எதை சகித்துக்கொள்ளக் கூடாது என்பதில் தெளிவான எல்லைகளை வகுத்துக்கொண்டு, அதை அமைதியாகவும் உறுதியாகவும் கணவருக்குப் புரியவையுங்கள்.
ஒப்பீடு வேண்டாம்: அடுத்த வீட்டுக்காரரைப் பாருங்கள், மனைவியை எப்படித் தாங்குகிறார்!" என்று மற்ற ஆண்களுடன் உங்கள் கணவரை ஒருபோதும் ஒப்பிடாதீர்கள். அது அவரது ஈகோவை காயப்படுத்தும். அதற்குப் பதிலாக, உங்கள் கணவரிடம் இருக்கும் தனித்துவமான நல்ல குணங்களைக் கண்டறிந்து அதைக்கொண்டாடுங்கள்.
நிறைய அன்பு; கொஞ்சம் சண்டை: கணவர் வீட்டில் இருக்கும்போது அவரிடம் அன்பாகவும் இதமாகவும் நடந்துகொள்ளுங்கள். அதேசமயம், குடும்பத்தில் நடக்கும் எல்லாச் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் சண்டை போட்டுக்கொண்டிருக்கக் கூடாது. எந்த விஷயத்திற்கு வாதாட வேண்டும், எந்த விஷயத்தைக் கடந்துபோக வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்
மேற்கண்ட உளவியல் ரகசியங்களை கடைப்பிடித்தால், உங்கள் குடும்ப வாழ்க்கை என்றும் மகிழ்ச்சிப் பூங்காவாகத் திகழும்.