வைரஸ் மூலம் சுவாசப் பாதையில் ஏற்படும் தொற்று நோயே ஃப்ளூ காய்ச்சல் எனப்படும் கபசுரம். இது மழை மற்றும் குளிர்காலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, தும்மல், தலைவலி, உடல்வலி என பலவிதங்களில் தொல்லைகள் கொடுக்கக்கூடிய பிரச்னை. இதற்கு வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்தே தீர்வு காணலாம்.
* கால் டீஸ்பூன் திப்பிலிப் பொடியுடன் வெற்றிலை சாறும், தேனும் கலந்து உண்ணலாம்.
* அதிமதுரம், திப்பிலி, தாளீசம், சிற்றரத்தை சம அளவு எடுத்து பொடித்து அதில் கால் டீஸ்பூன் எடுத்து தேனில் கலந்து உண்ண கபசுரம், உடல் வலி போகும்.
* வல்லாரை, மிளகு, துளசி இலை சம அளவு எடுத்து அரைத்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.
* வில்வ இலை, வேர் இவற்றை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி, அது அரை டம்ளராக வற்றியதும் அருந்த கபசுரத்தின் தாக்கம் குறையும்.
* கண்டங்கத்திரி வேர் பொடி அரை டீஸ்பூன் எடுத்து நீர் விட்டு கொதிக்க விட்டு பின் இறக்கி தேன் கலந்து சாப்பிடலாம்.
* கருநொச்சி இலைச் சாற்றை மிளகு பொடியுடன் கலந்து சாப்பிட, கபசுரத்துக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
* கோரைக்கிழங்கு பொடியுடன் சீந்தில், சர்க்கரை சேர்த்து சம அளவு கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலந்து பருகலாம்.
* தர்ப்பைப் புல் கைப்பிடி அளவு எடுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து அதில் விஷ்ணு கிரந்தை பொடி கால் டீஸ்பூன் கலந்து அருந்த விரைவில் கபசுரத்துக்கு நிவாரணமாகவும், மறுபடியும் வராமலும் தடுக்கும்.