அன்றாட வாழ்வில் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய எளிய வீட்டுக் குறிப்புகள்!

Simple household tips
Simple household tips
Published on

மைதா மாவை அரிசி மாவு போல பலவிதமான பலகாரங்கள் செய்யப் பயன்படுத்தலாம். ஆனால், மைதா மாவை முதலில் ஆவியில் வேக வைத்து அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்துக் கொண்ட பிறகு அரிசி மாவு போல பயன்படுத்தலாம். ஆனால், மைதா மாவை தண்ணீர் விட்டு கிளறி விடாதீர்கள். பசையாகி விடும். ஆவியில் தண்ணீர் படாமல் வேக வைக்க வேண்டும்.

கைவசம் ஷூ பாலிஷ் இல்லாத நேரத்தில் தோல் செருப்புகளை மெருகூட்ட வாழைப் பழத் தோலின் உட்புறத்தை ஷூ க்கள் மீது மெதுவாக தேய்த்து விடுங்கள். தோலில் உள்ள எண்ணெய் பாலிஷாகி அழுக்கை நீக்கி பளபளப்பாக்கும்.

கையிலோ காலிலோ மைக்கறைபட்டு விட்டால் அந்த இடத்தில் வாழைப் பழத் தோலால் தேய்த்து விட்டால் அது போய் விடும். சிவப்பு, கருப்பு மைக்கறைகளைத் தவிர, மற்ற கறைகளையும் தக்காளிப் பழச்சாறு போக்கி விடும்.

வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது சோடா உப்பைக் கலந்து பிரிட்ஜ்யின் உள் அறைகளைக் கழுவினால் கறை நீங்கி சுத்தமாக இருக்கும். பிரம்பு நாற்காலிகளை சோப்பு நீரில் கழுவி பின்னர் உப்பு கலந்த நீர் ஊற்றிக் கழுவினால் பளிச்சென்று ஆகிவிடும்.

உருக்கு கத்திகளில் எவ்விதமான கறைகள் பிடித்திருந்தாலும் அந்த இடத்தில் செங்கல் பொடியை தூவி பச்சை உருளைக்கிழங்கால் தேய்த்தால் கறை போய்விடும். பட்டுத் துணிகளின் கறைகளைப் போக்க யூகலிப்டஸ் தைலம் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
தினசரி வாழ்க்கையை புத்துணர்ச்சியாக்கும் தியானப் பயிற்சி!
Simple household tips

பருப்பு வகைகளை பல நாட்கள் வீட்டில் வைத்திருந்தால் அவற்றில் பூச்சிகள் வந்து விடும். பூச்சிகள் வராமல் இருக்க பருப்பு வகைகளில் கொஞ்சம் விளக்கெண்ணெயை கலந்து காற்று புகாத தகர டின்களில் அடைத்து வையுங்கள்.

ஒரு பானையில் மணலைப் போட்டு அதில் எலுமிச்சை பழங்களைப் புதைத்து வைத்து விட்டால் எலுமிச்சை பழங்கள் விரைவில் கெடாது. எலுமிச்சை பழத்தைப் பகலில் குளிர்ந்த நீரிலும். இரவில் வெளியே எடுத்து காற்றோட்டமாக வைத்தால் எலுமிச்சை பழம் விரைவில் கெடாமலும், வாடாமலும் இருக்கும்.

பச்சை மிளகாய் காம்பை கிள்ளி எடுத்து விட்டால் அது விரைவில் பழுக்காது. வாடிய கொத்தமல்லி தழையை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு எடுத்தால் பிரஷ்ஷாக மாறும்.

பாலிதீன் பைகளில் தக்காளியை போட்டு வைத்தால் மறுநாள் பழுத்து விடும். தக்காளி பழங்களை உப்பு தண்ணீரில் போட்டு வைத்தால் சீக்கிரம் அழுகிப் போகாது.

பாத்திரங்களில் உள்ள நெய்யுடன் ஒரு துண்டு வெல்லம் போட்டு வைத்தால் நெய் விரைவில் கெட்டுப் போகாது.

இட்லிக்கு அரைத்த மாவில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து வைத்தால் இட்லி பூப்போல இருக்கும். தோசை மாவு புளிக்காமல் இருக்க மாவுடன் வெண்டைக்காய் காம்புகளை போட்டு வைத்தால் போதும்.

முருங்கைக்காய் விதைகளை நசுக்கி அசுத்தமான தண்ணீரில் போட்டு வைத்தால் அதிலுள்ள பாக்டீரியாக்களை அது உறிஞ்சி, அந்தத் தண்ணீரை சுத்தமாக்கி விடும்.

ஆப்பிள் பழங்களை வாங்கும்போது அது கனமாக இருக்கிறதா? என்று பார்த்து வாங்க வேண்டும். கனமான ஆப்பிள் நல்ல ஆப்பிள்.

இதையும் படியுங்கள்:
நாய் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகளும் பிரச்னைகளும்!
Simple household tips

கரையான் தொந்தரவு இருந்தால் அந்த இடத்தில் மண்ணெண்ணெய் விடலாம். மரங்களில் கரையான் இருந்தால் மஞ்சள் தூள் தூவினாலும் கரையான் ஒழிந்து விடும். வெள்ளை அடிக்கும்போது சுண்ணாம்புடன் டெட்டால் கலந்து அடித்தாலும் ஒழிந்து விடும்.

உங்கள் வீட்டில் பல்லிகள் தொல்லையா? புதிதாக தோட்டத்தில் எடுக்கப்பட்ட வெங்காய தழையை (பச்சை நிற துண்டு) நூலில் கட்டி வீட்டில் பல்லி தொல்லை அதிகமுள்ள இடங்களில் தொங்க விடுங்கள். அந்த வாடைக்கு பல்லிகள் வராது.

சமைக்கும்போது கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்க வேண்டுமானால் கீரையுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்து சமைக்க வேண்டும். கீரை மசியல் செய்யும்போது சிறிது சோறு வடித்த கஞ்சியை விட்டு வதக்க, நன்கு குழைவாக மசியும்.

முட்டை சமைத்த பாத்திரத்தில் அதன் வாடை இருக்கும். இதனைப் போக்க முட்டை சமைத்த பிறகு கழுவிய பாத்திரத்தை ஈரம் போக துடைத்து விட்டு ஒரு சின்ன துணியை நல்லெண்ணெயில் தோய்த்து பாத்திரத்தின் உட்புறம் முழுவதும் மிக லேசாய் தடவினால் போதும். எந்த வாடையும் வராது.

காலாவதியான மாத்திரைகளை தூக்கி எறிந்து விடாதீர்கள். அவற்றை நன்றாக கரைத்து நம் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு போட்டால் பூச்சிகள் தாக்குவதில் இருந்து அவற்றைப் பாதுகாக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com