

சிலர் தங்களது வீடுகளில், ‘தொட்டது எதுவும் துலங்கவில்லை, செய்கின்ற தொழில்களில் லாபமில்லை, இரவில் தூக்கமில்லை, எல்லாமே தடங்கலாக உள்ளது’ என புலம்புவார்கள். இது பொதுவாக எதிர்மறை ஆற்றல் மற்றும் கண் திருஷ்டியின் அறிகுறி. அந்த வகையில் கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
* நேர்மறை ஆற்றலைப் பெற குலதெய்வ வழிபாட்டினை மறக்காமல் செய்ய வேண்டும். இது கண் திருஷ்டியை நீக்கும்.
* பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்வதோடு, நம் வீடே ஒரு கோயில் என்பதால் தினசரி நம் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதை கைவிடக் கூடாது.
* நம்மிடம் இருக்கும் மனித நேயம், நல்ல எண்ணம், பரோபகாரம், ஈவு, இரக்கம், நேர்மறை எண்ணங்கள் இறைவன் தந்த பெரிய வரம் என்பதால் அதை மனதில் வைத்து ஒவ்வொரு செயலையும் செய்ய நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
* தினமும் விடியற்காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் வாசலில் கோலமிட்டு பின்னர் பூஜை அறையில் அகல் விளக்கேற்றி மனதார வேண்ட கண் திருஷ்டி நீங்கும்.
* துளசி செடியை வீட்டு வாசலில் துளசி மாடம் கட்டி வளர்த்து பூஜை செய்ய கண் திருஷ்டி கண்கூடாக விலகும்.
* வாசலில் அரளிச்செடி வளர்ப்பது, கொல்லைப்புறத்தில் மணி பிளான்டு, ஓமவல்லி, சங்கு புஷ்பம் செடி, வெற்றிலை கொடி வளர்ப்பது நோ்மறை சக்தியை வீட்டிற்குள் வரவழைப்பதோடு, வீட்டில் சூழ்ந்துள்ள எதிா்மறை சக்திகளை விலக்கி வைத்து விடும்.
* ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி ஒவ்வொரு பக்கங்களிலும் தலா மூன்று கல் உப்பு மற்றும் மிளகை சொருகி வைப்பதோடு, இரண்டு மூடிகளிலும் குங்குமத்தை வைத்து சூடம் கொளுத்திக் காட்டி வாசல் நிலைப்படி இருபுறமும் வைக்க கண் திருஷ்டி நீங்கும்.
* நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பிரிஞ்சி இலைகளை வாங்கி வந்து சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மண் சட்டியில் பச்சை கற்பூரம் சூடம் கொளுத்தி அதில் பிரிஞ்சி இலைகளைப் போட்டு வீடு முழுவதும் புகை போட வீடெங்கும் தெய்வீக மணம் பரவி நேர்மறை சக்தி அதிகரிக்கும்.
* ஒரு பித்தளை பஞ்ச பாத்திரத்தில் தூய்மையான நீரைக் கொண்டு தினமும் உறங்க செல்வதற்கு முன் மூடி வைப்பதால் எதிர்மறை சக்தி அகன்று விடும்.
* காக்கைக்கு தினசரி உணவளிப்பது, கை கால் ஊனமான மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு வாரத்தில் ஒரு நாள் உணவு கொடுக்க நேர்மறை சக்தி அதிகரித்து கண் திருஷ்டி நீங்கும்.
* சுமங்கலி பெண் ஒருவருக்கு மாதத்தில் ஒரு நாள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ, ஜாக்கெட் பிட் உரிக்காத மட்டை தேங்காய் வாழைப்பழம் கொடுக்க நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்.
நல்லதையே நினைத்து, நல்லதையே செய்து, அனைவரும் நன்றாக வாழ வேண்டுமென ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்வது நேர்மறை ஆற்றலை அதிகரித்து கண் திருஷ்டி நீங்க மிக எளிய பரிகாரமாகும்.