துடைப்பத்தைத் தாண்டலாமா?

துடைப்பத்தைத் தாண்டலாமா?

நாம் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்யும் துடைப்பத்தில் கூட சாஸ்திர சம்பிரதாயங்கள் நிறையவே அடங்கியுள்ளன. வீட்டைப் பெருக்கும் துடைப்பம்தானே என்று சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். துடைப்பத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. லட்சுமி வாசம் செய்யும் 108 பொருட்களில் துடைப்பமும் ஒன்று. அந்த துடைப்பத்தை எப்படி எல்லாம் உபயோகித்தால் நமக்கு நன்மைகள் கிடைக்கும்?

*காலையில் எழுந்ததும் முதல்வேலையாக நீங்கள் வீட்டைப் பெருக்கும்பொழுது வீட்டில் இருக்கும் அனைவரும் எழுந்து இருக்க வேண்டும். அதாவது ஒருவர் தூங்கிக்கொண்டு இருக்கும்பொழுது நீங்கள் வீட்டைப் பெருக்கக் கூடாது. அதேபோல ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது அந்த இடத்தைப் பெருக்கக் கூடாது.

*துடைப்பத்தால் வீட்டைக் கூட்டும்பொழுது பெரிய பொருட்கள் வைத்திருந்தால் அதனை அகற்றிவிட்டு அல்லது அதற்கு அடியில் கட்டாயம் துடைப்பத்தை வைத்துப் பெருக்கிவிட வேண்டும். நீங்கள் பெருக்கும்பொழுது உள்ளிருந்து வெளிப்புறமாக குப்பைகளை அள்ளுவதுபோல பெருக்க வேண்டும். வெளியிலிருந்து உள்ளே வருவதுபோல குப்பையை தள்ளக்கூடாது.

*துடைப்பத்தை கையில் வைத்துக்கொண்டு யாரிடமும் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. அதேபோல துடைப்பத்தை கையில் வைத்துக்கொண்டு சமைப்பது கூடாது. சமையல் பொருட்கள் மட்டுமில்லாமல், குழந்தைகளைக்கூட நீங்கள் தொடக்கூடாது. துடைப்பத்தை ஒருமுறை கையில் எடுத்துவிட்டால் நீங்கள் அதை வைத்துவிட்டு நன்கு கைகளை கழுவிவிட்டு, பின்னர்தான் மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.

*வாசலை கூட்டி பெருக்குவது, வீட்டை கூட்டி பெருக்குவது போன்ற செயல்களை ஒருவர் வீட்டை விட்டு வெளியில் சென்ற உடனேயே செய்யக்கூடாது. சிறிது நேரம் கழித்த பிறகு இந்த வேலைகளை எல்லாம் செய்யலாம்.

*துடைப்பத்தை எப்பொழுதும் படுக்க வைக்கக் கூடாது. துடைப்பத்தை மற்றவர்கள் கண் பார்வையில் படும்படி வைக்கவும் கூடாது. துடைப்பத்தை படுக்க வைத்தால் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அதிகமாக கோபம் வருமாம்.

*துடைப்பத்தை எப்பொழுதும் நம் உயரத்தைவிட அதிகமான உயரத்தில் ஆணி அடித்து மாட்டக்கூடாது. கதவுக்குப் பின்னால் மறைவாகத்தான் வைக்க வேண்டும். நீங்கள் ஆணி அடித்து மாட்டி வைப்பதாக இருந்தால் உயரம் குறைவாக ஆணி அடித்துக்கொள்ளுங்கள்.

*துடைப்பத்தைக் கொண்டு வீட்டை பெருக்கும்பொழுது யார் மீதும்  துடைப்பம் பட்டுவிடக் கூடாது. இது அமங்கலம் தரும் செயலாகும். மேலும், துடைப்பத்தைக் கொண்டு பெருக்கிக் கொண்டிருக்கும்போது முடிகள் ஏதாவது தெரிந்தால் அதனை கைகளால் எடுத்து வெளியில் போட்டுவிட்டு பின்னர் பெருக்க வேண்டும்.

*துடைப்பத்தை எப்பொழுதும் ஒருவர் தாண்டி செல்லக்கூடாது. லட்சுமி இருப்பதால் துடைப்பத்தைத் தாண்டி சென்றால் வந்த லட்சுமி வாசலிலேயே சென்றுவிடுவதாக ஐதீகம்.

*நீங்கள் வீட்டைக் கூட்டும்பொழுது பூஜை அறையைத் துடைப்பத்தைக் கொண்டு கூட்டக் கூடாது. எப்பொழுதும் துணியால் சுத்தம் செய்ய வேண்டும். அப்படி பூஜை அறையை பெரிதாக வைத்திருந்தால் நீங்கள் அதற்கென தனியாக ஒரு துடைப்பத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

*துடைப்பத்தை வைத்து நீங்கள் பெருக்கும்பொழுது உள்ளங்கைகளை கொண்டு முழுமையாக அழுத்தம் கொடுத்து பிடிக்க வேண்டும். அதேபோல நின்று கொண்டே பெருக்கக்கூடாது. சற்று குனிந்து நிமிர்ந்து பெருக்க வேண்டும். இதனால் உங்களுக்கு இயற்கையாகவே அக்குபிரஷர் கிடைத்து உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும்.

டிப்ஸ்..டிப்ஸ்...

*துடைப்பம் வாங்கியவுடன் அதன் நுனியை ஒன்றுபோல வெட்டிவிட்டால் நன்றாக பெருக்க முடியும்.

*துடைப்பத்தை நீரில் நனையாமல் வைக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com