

நம்மில் பெரும்பாலோர் குளியல் சோப்பு தேய்ந்து சிறிய துண்டாக மாறியவுடன் அதை தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் அந்த சிறு சோப்புத் துண்டுகள்கூட சில இடங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் அவற்றை மீண்டும் பயன்படுத்துவது பணத்தை மிச்சப்படுத்தலாம் மற்றும் வீணாவதைக் குறைக்கலாம்.
அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சில சிறிய பிரச்னைகளுக்கு இந்த சோப்பு துண்டுகள் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
துணி அலமாரிகள் ஈரப்பதம் போக்கும்
சில வீடுகளில், துணி அலமாரிகள் அல்லது ஈரப்பதம் காரணமாக துர்நாற்றம் வீசக்கூடும். இந்தப் பிரச்னையை எளிதில் தீர்க்க, ஒரு சிறிய துணியில் சில உலர்ந்த சோப்புக் கட்டிகளைச் சுற்றி அங்கே வைக்கவும். இது ஒரு இயற்கையான புத்துணர்ச்சியாக செயல்பட்டு, அலமாரியில் வாசனையைத் தக்க வைத்துக்கொள்ளும். இது ஒரு மலிவான மற்றும் எளிதான தீர்வாகும்.
ஷூ ரேக்குகளில் துர்நாற்றம் போக்கும்
ஷூ ரேக்குகளில் ஈரப்பதம் காரணமாகவும், சாக்ஸ்களில் உள்ள வியர்வை நாற்றம் காரணமாகவும் துர்நாற்றம் வீசக்கூடும். அங்கே சில சோப்புத் துண்டுகளை சிறு துணியில் அல்லது வலையில் சுற்றி ஷூ ரேக்குகளின் உள்ளே வைத்துவிட்டால் துர்நாற்றம் குறைந்துவிடும்.
ஸிப் பிரச்னையை எளிதாக்கும்
வீட்டில் ஜாக்கெட்டுகள், ஜீன்ஸ் அல்லது பைகளின் ஸிப் அடிக்கடி சிக்கிக் கொண்டு அவசர நேரத்தில் டென்ஷனை ஏற்படுத்துவது இயல்பே. பின்னர் அதோடு போராடுவதே பெரும் வேலையாக இருக்கும். அத்தகைய நேரத்தில், நீங்கள் ஒரு உலர்ந்த சோப்பை எடுத்து ஸிப்பின் பற்களில் லேசாக தேய்த்தால், அது ஒரு மசகு எண்ணெய் (Lubricating Oil) போல செயல்படும். இதை இரண்டு அல்லது மூன்று முறை தேய்த்த பிறகு ஸிப்பை இழுத்து பாருங்கள் – சீராக நகரத் தொடங்கும். எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்கும்.
தையல் வேலையில் பயன்பாடு
தையல் வேலையில் இந்த சோப்புக் கட்டிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வழக்கமாக தையல்காரர்கள் துணிகளில் அளவுகளை எழுதவும், அளவீடுகளை வரையவும் சுண்ணாம்பைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு சிறிய சோப்புத்துண்டிலும் இதைச் செய்யலாம். துணிகளில் கோடுகள் வரைவதற்கு இந்த பழைய சோப்பு துண்டுகள் பயன்படுத்தலாம். குறிப்பாக தைத்த பிறகு துணிகளைத் துவைத்தால், அளவீடுகள் கறைகள் முற்றிலும் இல்லாமல் மறைந்துவிடும்.
தோட்டத்தில் பூச்சி விரட்டி
தோட்டத்தில் உள்ள தாவரங்களை பூச்சிகள் தொந்தரவு செய்தால் சோப்புத் துண்டுகள் பயனுள்ளதாக இருக்கும். சிறிய சோப்புத் துண்டுகளை தண்ணீரில் கரைத்து ஒரு கரைசலை உருவாக்கி, தாவரங்களின் மீது தெளிக்கலாம். இது இயற்கை பூச்சிக்கொல்லியாக செயல்படும். ஆனால் கடுமையான இரசாயனங்கள் கொண்ட சோப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.
கிளீனிங் லிக்விட்
மீதமுள்ள சோப்புக் கட்டிகளை வெதுவெதுப்பான நீரில் கரைத்து ஒரு கரைசலைத் தயாரிக்கலாம். இந்தக் கரைசலை சிங்க் சுத்தம் செய்யவும், கைகளை கழுவவும் அல்லது சமையலறை கவுண்டர்டாப்புகளை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம்.
சிறிய சோப்புக் கட்டிகளை தூக்கி எறிவதற்குப் பதிலாக மேற்கண்ட முறைகளில் பயன்படுத்துவது உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் நல்லது.