இல்லறம் நல்லறமாக கணவர்களுக்கான சில யோசனைகள்!
கணவன், மனைவி இருவரும் அவசியம் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலையில், சில சமயங்களில் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்ட தவறும்போது அவர்களின் வாழ்க்கையில் புயல் மையம் கொண்டு விடுகிறது. அன்பு இல்லாத பட்சத்தில் அவர்கள் விவாகரத்து வரை சென்று விடுகின்றனர். அதன் பிறகு அவர்கள் இருவரின் வாழ்வுமே திசை மாறி போய் விடுகிறது. இதில் குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆகவே, மனைவியின் அன்பை பெற கணவர்களுக்கான சில ஆலோசனைகளைக் காண்போம்.
* மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்துக் கூறுங்கள்.
* மனைவியை பார்க்கும்போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது.
* மனைவி முக்கியமான வேலைகளில் ஈடுபடும்போது தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசிக்கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட வாய்ப்பு உண்டு. இதனால் இரண்டு பேரின் ‘மூடு அவுட்’டாக வாய்ப்பு அதிகம்.
* வேலைக்குச் செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும்போது அவர்களின் அனுபவங்களைக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.
* மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். அதனை சற்று கொஞ்சலாகக் கூறினாலும் தவறில்லை. நாம் செய்யும் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். இதன் மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.
* மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்துகொண்டு, அதனை குத்திக்காட்டி பேசக் கூடாது. மேலும், சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்டக் கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
* வேலைக்குச் செல்லாத மனைவியாக இருந்தால், நேரம் கிடைக்கும்போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டிச் செல்ல மறக்க வேண்டாம்.
* மனைவி விரும்பி ஏதாவது பொருட்களைக் கேட்கும்போது, பணம் இருந்தால் வாங்கிக் கொடுக்கலாம். இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்துக் கூறலாம்.
* கணவனும் மனைவியும் பேசும்போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக்கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கத் தவறாதீர்கள்.
* மனைவி செய்த சமையல், தோட்ட வேலைகள், வீட்டை அலங்கரிப்பது உள்ளிட்ட பணிகளைப் பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாகக் கூறிவிட்டு, மாற்றத்தை பணிவாகத் தெரிவிக்கலாம்.
* மற்றவர்களின் முன்பு மனைவியை கேவலமாகப் பார்ப்பது, பேசுவது, திட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையை உணர்ந்து தாய்வீட்டு நினைப்பு வந்து விடுகின்றது.
* வீட்டில் இருக்கும்போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.
இவ்வாறு ஒவ்வொரு கணவன்மார்களும் மனைவியிடத்தில் நடந்து கொண்டால் வாழ்க்கையில் வசந்தம் வீசும். சண்டை சச்சரவுகள் காணாமல் போகும். எண்ணம் தெளிவாகும். அதனால் நீங்கள் வாழ்வில் உயர்ந்த இடத்தை வெகு சீக்கிரமே எட்டிப் பிடிப்பீர்கள்.
- ம.வசந்தி