இளமையிலேயே நரை முடி ஏற்படுவது தற்காலத்தில் பெரிதும் அதிகரித்துக் காணப்படுகிறது. இள நரைக்குக் காரணமாக, உடலுக்குச் சரியான உட்டச்சத்தின்மை, கெமிக்கல் நிறைந்த ஷாம்புக்களைப் பயன்படுத்துவது மற்றும் தலை முடியை சரியான முறையில் பராமரிக்காமல் விடுவதுதான் என்று கூறப்படுகிறது. ஹேர் டை போடுபவர்கள் அவசியம் கவனத்தில் வைத்துக்கொள்ள சில ஆலோசனைகளைக் காணலாம்.
• ஹேர் டை போட்ட முதல் நாளே அலர்ஜி தென்பட்டால் அதை உபயோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
• ஹேர் டை உபயோகித்து சில நாட்கள் கழித்து பக்க விளைவுகள் தென்பட்டாலும் அதனைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டியது அவசியம்.
• ஹேர் டை பயன்படுத்தியதும் அலர்ஜி தென்பட்டால் உடனடியாக, பயன்படுத்திய ஹேர் டை பாக்கெட்டுடன் தகுந்த மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம்.
• பெண்கள் கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் ஹேர் டை அடிப்பதைத் தவிர்க்கவும்.
• தற்போது கெமிக்கல் கலப்பில்லாத இயற்கையான ஹேர் டை பிராண்டுகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உபயோகிக்கலாம்.
• இயற்கை முறையிலான ஹேர் டை வகைகளை பயன்படுத்தி சரும நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்வது நல்லது.
• மருத்துவரின் ஆலோசனைப்படி தலை முடிக்கு ஏற்ற டையை வாங்கிப் பயன்படுத்துவது சிறப்பு.
• குறிப்பாக, பிபிடி ஃப்ரீ மற்றும் அமோனியா ஃப்ரீ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஹேர் டை வகைகளை உபயோகிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது.
இவை மட்டுமின்றி, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைபிடிப்பது, மன அழுத்தத்துக்கு இடங்கொடுக்காமல் இருப்பது, வைட்டமின் பற்றாக்குறை இருப்பின் அதற்கேற்றவாறு சத்தான காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்வது, தலை முடியை மாசு படாமல் சுத்தமாக வைத்திருப்பது இள நரையை தவிர்ப்பதற்கான வழிகளாகும். இவை அனைத்தையும் விட இளநரை தென்பட்டால் உடனே உரிய மருத்துவரை கலந்தாலோசிப்பதால் அது தீவிரமாகாமல் தடுக்கலாம்!