

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு விளையாட நேரமிருப்பதில்லை. இந்த கோடை விடுமுறையில் பிள்ளைகள் அனைவரும் கிரிக்கெட் விளையாடவே விரும்புவர். விளையாட தொடங்கிய சில நாட்களிலேயே உடல்வலி, தோள்பட்டை வலி என சிரமப்படுவர்.
தங்கள் குழந்தைகள் விளையாட்டுத் துறையில் புகழடைய வேண்டுமென பெற்றோர்கள் ஆசைப்படுவர். இதற்கென பிள்ளைகளை கோச்சிங் கிளாஸிலும் சேர்ப்பர். விளையாடத் தொடங்கிய சில மாதங்களிலேயே இடுப்பு, மூட்டு, தோள்பட்டையில் காயம், எலும்பு முறிவு வலி ஏற்படும். உடனே பெற்றோர் பயந்து கொண்டு தம் பிள்ளைகளை விளையாட்டு பயிற்சியில் இருந்தே நிறுத்திவிடுவர்.
கேரம், செஸ் போன்ற இன்டோர் விளையாட்டுகளில் சிறப்பான பங்களிக்கும் நம் பிள்ளைகள் அவுட்டோர் விளையாட்டுகளில் பிரகாசிக்க முடியாததற்கு பெற்றோர்களே காரணம்.
படிப்பை காரணம் காட்டியும், உடலில் அடி, காயம் ஏற்பட்டால் அதன் காரணமாகவும் விளையாட அனுமதிக்க மாட்டார்கள். இதற்கு தீர்வு என்னவெனில் விளையாட ஆரம்பிப்பதற்கு முன் செய்ய வேண்டிய ஆரம்பகட்ட உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு இல்லாததுதான். அதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
எந்தெந்த தசைகள் விளையாட்டுக்கு பயன்படுகின்றனவோ அவற்றை பயிற்சியின் மூலம் வலுப்படுத்திய பிறகே விளையாடத் தொடங்க வேண்டும். மேலும் தகுதியான பயிற்சியாளர்கள் மூலம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இது இல்லாமல் எடுத்தவுடன் நேரடியாக கிரவுண்டில் இறங்கி முழு மூச்சுடன் விளையாடுவதால் உடல் ஒத்துழைக்காமல் வலி ஏற்படுகிறது. இதை சரிசெய்ய நாளடைவில் உடலை ஸ்டிரெங்தன் பண்ண வேண்டும். புரோட்டீன் நிறைந்த பயறுகள், கோழி, மீன் முட்டை, பால் போன்ற உணவுகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
விளையாடத் தொடங்கும் முன் தசைகளை வலுவாக்கும் முன் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தகுதியான பயிற்சியாளர் மேற்பார்வையில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வர குறிப்பிட்ட விளையாட்டில் நல்ல பயிற்சி பெறுவதுடன் போட்டிகளில் வெற்றி பெறவும் வழிவகை செய்யும்.
தற்போது ஸ்போர்ட்ஸ் மெடிசின் படித்த மருத்துவர்கள் பலர் உள்ளனர். அவர்களிடம் ஆலோசனை பெற்று விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வர நல்ல பலன் கிடைக்கும். ஏதாவது காயம், தசைப்பிடிப்பு, மூட்டு தோள்பட்டையில் வலி என ஏற்பட்டால் ஸ்போர்ட்ஸ் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
டைம்பாஸுக்கு விளையாட்டை ஈஸியாக எடுத்துக்கொள்ளாமல் சிரத்தையுடன், கவனமுடன் பயிற்சி மேற்கொள்ள எந்த விளையாட்டிலும் சாதிக்கலாம்.