
பச்சிளம் குழந்தைகளை வளர்ப்பது என்பது சவாலான விஷயம். அதில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும், எவ்வளவு புரிதலோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. குழந்தை வளர்ப்பில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
சிறு குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேகவைத்து சாதத்துடன் பிசைந்து தினமும் கொடுக்கலாம்.
வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாக வெட்டி கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலை விட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.
சிறு குழந்தைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு நாம் வீடு பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டைப் பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளை தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும்.
வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் போய்விடும். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலைக் கலந்து வைத்து, அதன் மூடியில் 4, 5 துவாரங்கள் போட்டு, தேவைப்படும்போது அப்படியே தெளித்துத் துடைத்தால் வீட்டில் வாசனை மணக்கும்.
விழாக்கள் மற்றும் பொழுதுபோக்கு போன்ற நிகழ்ச்சிகளுக்கு இரவு நேரங்களில் சிறிய குழந்தைகளுடன் செல்லும்போது டிபன் பாக்ஸில் உணவை எடுத்துச்சென்று குழந்தைகளுக்குக் கொடுத்து விடலாம். இதனால் குழந்தைகள் சாப்பிடாமல் உறங்கி விடுவதைத் தவிர்க்க முடியும்.
உங்கள் சிறு குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், கால்சியம் சத்தை உடல் கிரகித்துக்கொள்ளும் திறனைக் குறைக்கிறது.
வசம்பு துண்டு ஒன்றை சிறு குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது. பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்கு இதைக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.
கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈ தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.
குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன்பு சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். இதனால் எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும்.
குழந்தைகள் அழும்போது காதுப் பக்கம் கையைக் கொண்டுபோய் வைத்துக் கொண்டால் அது காது வலியினால் இருக்கலாம் என யூகிக்கலாம்.
குழந்தைகளுக்கு அடிக்கடி தொண்டைப் புண் வருகிறதா? உங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை போன்ற ஏதேனும் வளர்க்கிறீர்களா? அப்படியானால் மிருக வைத்தியரிடம் அப்பிராணிகளைப் பரிசோதித்துப் பார்க்கச் சொல்லவும். பல நேரங்களில் வீட்டு வளர்ப்பு மிருகங்களிடமிருந்து குழந்தைகளுக்குத் தொண்டைப்புண் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால் உடனே அதை கவனியுங்கள். பேசாமல் விட்டுவிட் டால் சீழ் மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.