கோடைகாலம் வந்துவிட்டாலே நம்மை வெயில் வாட்டி எடுக்கத் தொடங்கிவிடும். அச்சமயங்களில் வீட்டில் புழுக்கமாக இருப்பதால், குழந்தைகளும் முதியவர்களும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். சிலரது வீடுகளில் ஏசி இருந்தாலும் அதை அதிகமாக பயன்படுத்துவது நல்லதல்ல. இதனால் உடலுக்கும் கெடுதல் மற்றும் கரண்ட் பில்லும் அதிகரிக்கும். எனவே உங்கள் வீட்டை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருக்க சில குறிப்புகளை இந்த பதிவில் உங்களுக்கு சொல்லப் போகிறேன்.
கோடைகாலத்தில் நமது வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க முதலில் வெப்பம் உள்ளே நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு கதவு மற்றும் ஜன்னல்களுக்கு அருகே செடிகளை வைக்கலாம். போதிய இடவசதி இல்லாதவர்கள் சிறு சிறு தொட்டிகளில் செடி வைத்து ஜன்னல் அருகே வைப்பது நல்லது. அதே நேரம் வீட்டில் போதிய காற்று வசதி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே சூரிய வெப்பத்திலிருந்து வீட்டைப் பாதுகாக்க முடியும்.
அதிக வெப்பமான சமயங்களில் வீட்டின் ஜன்னல்களைத் திறந்து வைப்பது நல்லது. குறிப்பாக மாலை நேரத்தில் ஜன்னலைத் திறந்து வைத்தால், வெப்பம் வெளியேறி இரவில் வீடு குளிர்ச்சியாக இருக்க உதவும். ஜன்னலைத் திறந்தால் வெப்பம் உள்ளே வந்துவிடும் என பலர் ஜன்னலை மூடிவிட்டு வீட்டுக்குள்ளேயே இருக்க விரும்புவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் காற்று வெளியேறாத சூழலில்தான் வெப்பம் மேலும் அதிகரிக்கும்.
நமது வீட்டை குளிர்விப்பதில் மின்விளக்குகள் அதிகம் பங்கு வருகின்றன. அதிக பிரகாசமான விளக்குகள் வெப்பத்தை வெளியிடுவதால், வெப்பம் வெளியிடாத எல்இடி பல்புகளுக்கு மாறுவது நல்லது. அதேநேரம் அதிக வெப்பத்தை உருவாக்கும் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்களைப் படுக்கை அறையிலிருந்து தள்ளி வைக்க வேண்டும்.
வீட்டில் இருப்பவர்களும் அடர் நிறங்களில் உடை பயன்படுத்தாமல், வெளிர் நிற உடைகளைப் பயன்படுத்தினால், வீட்டின் உள்ளே வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். வெள்ளை நிற ஆடைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது மூலமாக, வெப்பம் பிரதிபலிக்கப்பட்டு, உங்களை வெப்பத்திலிருந்து காக்கும். மேலும் கதவு மற்றும் ஜன்னல்களில் வெள்ளை நிற ஸ்கிரீன் பயன்படுத்துவது மூலமாகவும் வெப்பம் உள்ளே நுழைவதைக் குறைக்கலாம்.