

ஒன்று முதல் மூன்று வயது வரையுள்ள சிறுகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்.
'விபத்துகள் திடீரென நிகழ்வதில்லை; அவற்றை முன்கூட்டியே தடுக்க முடியும்.'
குறுநடைப் பருவ (Toddler) குழந்தைகள் மிகவும் துறுதுறு என இருப்பர் என்பது இயற்கையே. அவர்கள் சுற்றியுள்ள அனைத்தையும் அறிந்து கொள்ளவும், தொடவும், வாயில் வைத்து சுவைக்கவும், ஏறவும், ஓடவும் முயற்சிப்பார்கள். எனவே வீடு மற்றும் பொது இடங்களில் பல்வேறு விபத்துகள் ஏற்படலாம். அவை என்னென்ன, அவற்றை எப்படி தடுப்பது என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
1. ஆபத்து ஒன்று
படிக்கட்டுகள், படுக்கை, சோபா, ஜன்னல், மாடிப்படி, பால்கனி முதலானவற்றிலிருந்து கீழே விழுதல்.
தடுப்பு முறைகள்
படிக்கட்டுகள் மற்றும் ஜன்னல்களுக்கு பாதுகாப்புக் கதவு அமைக்கவும். மற்றும் குழந்தையை உயரமான இடங்களில் தனியாக விடாதீர்கள்.
2. ஆபத்து இரண்டு
தொண்டையில் உணவு அல்லது மற்ற பொருட்கள் அடைத்துக் கொள்வது (Choking). வேர்க்கடலை, திராட்சை, மிட்டாய், நாணயம், பொத்தான், சிறிய விளையாட்டுப் பொருட்கள் முதலானவை.
தடுப்பு முறைகள்
சிறிய பொருட்களை குழந்தையின் கைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும். திராட்சை போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டி கொடுக்கவும். வயதுக்கேற்ற விளையாட்டுப் பொருட்களை மட்டும் வாங்கவும்.
3. ஆபத்து மூன்று
நச்சுப் பொருட்களை விழுங்கி விடுவது (Poisoning). மருந்துகள், சுத்திகரிப்பு, திரவங்கள், பூச்சிக்கொல்லிகள், மண்ணெண்ணெய் போன்றவற்றை தவறுதலாக குடித்து விடுவது.
தடுப்பு முறைகள்
மருந்துகள் மற்றும் ரசாயனப் பொருட்களை பூட்டிய அலமாரியில் வைக்கவும். குளிர்பான பாட்டில்களில் ரசாயனங்களை சேமிக்காதீர்கள்.
4. ஆபத்து நான்கு
தீக்காயம் மற்றும் சூடுநீர் காயம் ஏற்படுதல். சூடான பால், தேநீர், காபி, அடுப்பு, இஸ்திரி பெட்டி முதலானவற்றால் ஏற்படும் காயங்கள்.
தடுப்பு முறைகள்
சூடான பாத்திரங்களின் கைப்பிடிகளை உள்ளே தள்ளி வைக்கவும். குழந்தையைத் தூக்கிக் கொண்டு சூடான பானங்களை கையாளக் கூடாது.
5. ஆபத்து ஐந்து
மின்சாரத்தின் மூலம் ஏற்படும் விபத்துகள். திறந்த மின் அமைப்புகள், பழுதடைந்த வயர்கள் முதலானவை.
தடுப்பு முறைகள்
மின் சாக்கெட்களுக்கு மூடிகள் பயன்படுத்தவும். பழுதான மின் வயர்களை உடனே சரிசெய்யவும்.
6. ஆபத்து ஆறு
நீரில் மூழ்குவதால் ஏற்படும் ஆபத்துகள். தண்ணீர் நிரம்பிய வாளி, குளியல் தொட்டி, நீச்சல் குளம் முதலானவை.
தடுப்பு முறைகள்
பயன்படுத்திய வாளிகளை உடனே காலி செய்யவும். நீர்நிலைகளின் அருகே குழந்தையை தனியாக விடாதீர்கள்.
7. ஆபத்து ஏழு
விலங்கு கடிகளினால் ஏற்படும் ஆபத்துகள். நாய், பூனைகள், குரங்கு, பன்றி, எலி போன்ற விலங்குகள் கடிக்கலாம்.
தடுப்பு முறைகள்
தெரியாத விலங்குகளை தொடக்கூடாது என்று கற்றுக்கொடுக்கவும்.
8. ஆபத்து எட்டு
தற்காலத்தில் மறைமுக ஆபத்துகள். பட்டன் பேட்டரியை (Button Battery) குழந்தை விழுங்கினால் சில மணி நேரங்களிலேயே உணவுக்குழாயில் கடுமையான சேதம் ஏற்படலாம். உடனடி மருத்துவரை அணுக வேண்டும். காந்தங்களை (Magnets) விழுங்கினால் குடல் துளையாகும் அபாயம் உள்ளது. மொபைல் சார்ஜர்கள் மற்றும் பவர் பேங்க்கள் மூலம் மின்சார காயங்கள் மற்றும் தீ விபத்துகளை ஏற்படுத்தலாம்.
மேற்காணும் விபத்துகளில் இருந்து குழந்தைகளை பெற்றோர்கள் கீழ்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் எளிதில் காத்துவிடலாம்.
எச்சரிக்கை + கண்காணிப்பு = விபத்து தடுப்பு
என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் கொள்ள வேண்டும்.
1. குழந்தையை எப்போதும் கண்காணிக்கவும்.
2. ஆபத்தான பொருட்களை பூட்டி வைக்கவும்.
3. வீட்டை குழந்தையின் பார்வையில் இருந்து ஆய்வு செய்யவும்.
4. வயதுக்கேற்ற விளையாட்டுப் பொருட்களை தேர்வு செய்யவும்.
5. குழந்தை முதலுதவி மற்றும் CPR பற்றி கற்றுக் கொள்ளவும்.
6. பள்ளி மற்றும் வீட்டில் பாதுகாப்பு விதிகளை கற்பிக்கவும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் வீட்டிலேயே நடக்கின்றன. பாதுகாப்பான சூழல், பெற்றோரின் கவனம் மற்றும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பெரும்பாலான விபத்துகளைத் தடுக்க முடியும்.
Reference: