

நம்மில் பலரும் வீட்டில் துளசி செடியை துளசி மாடம் அல்லது தொட்டியில் வைத்து வளர்க்கிறோம். துளசிக்கு தினமும் காலையில் தண்ணீர் ஊற்றி பூஜை செய்யும் வழக்கம் பலரிடம் உள்ளது. துளசி செடி வீட்டின் மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டுக்குள் வரும் எதிர்மறை ஆற்றலை தடுத்து, செல்வமும் அதிர்ஷ்டமும் வர உதவுகிறது. துளசி செடி நாள் முழுவதும் ஆக்சிஜனை வெளியிடுகிறது.
துளசி ஆன்மீக முக்கியத்துவம் இருப்பதோடு, உடல்நலத்திற்கும் பல நன்மைகள் அளிக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்திலும் இது பயன்படுத்தப்படுகிறது. இத்தனை நன்மைகள் உள்ள துளசி செடி காய்ந்துவிட்டால் அதை அசுபமாகக் கருதுகிறோம். எனவே, உங்கள் வீட்டில் இருக்கும் துளசி செடி காய்ந்துவிடாமல் பசுமையாக இருக்க என்ன வழி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
சரியான அளவு தண்ணீர்
துளசி செடிக்கு சரியான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். செடி தொட்டியில் இருந்தால், கூடுதல் தண்ணீர் வெளியேற தொட்டியின் அடியில் துளைகள் இருக்கவேண்டும். இல்லையென்றால், தண்ணீர் தேங்கி வேர் அழுகும். தொட்டியின் மேல் மண் முழுவதும் காய்ந்தது போலத் தோன்றும்போது தண்ணீர் ஊற்றவும். கோடையில் தினமும் ஒரு முறை, குளிர்காலத்தில் 3–4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றினால் போதும்.
வளமான மண்
ஒரு செடி நன்றாக வளர மண் வளமானதாக இருக்க வேண்டும். தோட்ட மண், இயற்கை உரம், கொஞ்சம் மணல், தேங்காய் நார் ஆகியவற்றை சேர்த்து நல்ல மண் கலவையை தயார் செய்யலாம். பிளாஸ்டிக் தொட்டியைவிட களிமண் தொட்டி துளசிக்கு நல்லது. மண் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்கவேண்டும்.
போதுமான சூரிய ஒளி
துளசி செடியை தினமும் 5–6 மணி நேரம் சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கவேண்டும். வீட்டின் நிழல் பகுதிகளில் வைக்கக்கூடாது. சூரிய ஒளி சரியாகப்படவில்லை என்றால், ஒளிச்சேர்க்கை முறையாக நடைபெறாது. அதனால் செடி வாடி, இலைகள் உதிரத்தொடங்கும். அடுக்குமாடி வீட்டில் இருப்பவர்கள், துளசி தொட்டியை பால்கனியில் சூரிய ஒளி நன்றாகப் படும் இடத்தில் வைக்கவேண்டும்.
அடர்த்தியாக வளரச் செய்தல்
துளசி செடி நீளமாக வளராமல், புதர் மாதிரி அடர்த்தியாக வளர வேண்டும். செடி 5–6 அங்குலம் உயரம் வந்த பிறகு, மேலே இருக்கும் கிளைகளை கொஞ்சம் வெட்டிவிட வேண்டும். இதனால் பக்கக் கிளைகள் அதிகமாக வளர்ந்து, செடி புதர் போலத்தோன்றும். மஞ்சள் நிற இலைகள் அல்லது காய்ந்த இலைகள் இருந்தால், அவற்றை அடிக்கடி அகற்றவேண்டும்.
இயற்கை உரம்
துளசி செடி நன்றாக வளர, இயற்கை உரம் பயன் படுத்துவது நல்லது. முதலில் மாட்டுச் சாண உரம் போடலாம். துளசி செடிக்கு வெண்பூஞ்சை மற்றும் சிறிய பூச்சிகள் எளிதில் தாக்கும். இவை தெரிந்தவுடன், வேப்பெண்ணெய் மற்றும் மஞ்சள் கலந்து தெளிக்கவும். எந்த இரசாயன மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம்.
அடிக்கடி கவாத்து செய்தல்
துளசி செடியில் பூ வந்தவுடன், அதை உடனே வெட்டிவிட வேண்டும். செடியில் அதிகமாகப் பூ விட விட்டால், செடி தனது சக்தியை விதை உருவாக்குவதற்கே பயன்படுத்தும். அப்போது இலைகள் சுருங்கி, செடி விரைவில் காய்ந்துவிடும். மண்ணில் வேர்களுக்கு காற்றோட்டம்
வாரத்திற்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை, தொட்டியின் மேல் மண்ணை ஒரு சிறிய குச்சியால் மெதுவாகக் கிளறி விடுங்கள். இதனால் துளசி செடியின் வேர்களுக்கு காற்றோட்டம் நன்றாக கிடைக்கும், தண்ணீரும் மண்ணுக்குள் சரியாக ஊடுருவும்.
இந்த ஆறு எளிய வழி முறைகளை பின்பற்றி உங்க வீட்டின் மங்களத்தின் அடையாளத்தை எப்போதும் பசுமையாக வைத்துக்கொள்ளலாம்.