

பிப்ரவரி மாதம் காதலர் வாரமாக கொண்டாடப்படுகிறது. காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் தனித்துவமான முக்கியத்துவம் உண்டு. இது அன்பை மதிக்கும் அனைவருக்கும், அது நண்பர்களாக இருந்தாலும் சரி, குடும்பத்தினர்களாக இருந்தாலும் சரி பிணைப்பை வலுப்படுத்தி மகிழ்ச்சியை பரப்பும் வாரமாகும்.
பிப்ரவரி 7 ரோஸ் டே (Rose Day) என்று அழைக்கப்படும். அன்று நம் அன்புக்குரியவர்களுக்கு விருப்பமான பூக்களை பரிசளித்து நம் அன்பை வெளிப்படுத்தும் நாளாகும். ரோஜாக்கள் அன்பு, அழகு மற்றும் பாசத்தை அடையாளப்படுத்தக் கூடியது. இது உணர்வுகளை வெளிப்படுத்த ஏற்ற பூவாகும்.
பிப்ரவரி 8ம் தேதி ப்ரொபோஸ் டே (Propose day) நம் உணர்வுகளை நேரடியாக சொல்லும் நாளாகும். 'எனக்கு உன்னைப் பிடிக்கும்' என்று நமக்கு விருப்பமானவர் களிடம் நம் இதயபூர்வமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த தைரியத்தை அளிக்கின்ற நாளாகும்.
பிப்ரவரி 9ஆம் தேதி சாக்லேட் டே (Chocolate Day) இனிப்பின் மூலம் அன்பை வளர்க்கும் நாள் இது. அன்பின் அடையாளமாக சாக்லேட்டுகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. சாக்லேட்டுகள் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்றும், மன அழுத்தத்தை குறைக்கும் என்றும் அறிவியல் பூர்வமாகக் கூட நிரூபிக்கப் பட்டுள்ளது. இப்படி சாக்லேட்டுகளை பரிமாறிக் கொள்வதன் மூலம் பிணைப்புகளை வலுப்படுத்தவும், அன்புக்குரியவர்களை சிறப்பாக உணரவைக்கவும் முடியும்.
பிப்ரவரி 10ஆம் தேதி டெடி டே (Teddy Day), மென்மையான பொம்மைகளை பரிசளித்து அன்பை வெளிப்படுத்தும் நாள். கரடி பொம்மையை பரிசளிப்பது அக்கறை, அரவணைப்பு மற்றும் ஆறுதலை குறிப்பதாக உள்ளது.
பிப்ரவரி 11ஆம் தேதி (Promise Day), உறவுகளை உறுதிப்படுத்தும் நாள் இது. உறவுகளில் நம்பிக்கை மற்றும் உறுதியை வெளிப்படுத்தும் அர்த்தமுள்ள நாளாகும். இது அன்பிற்கான வலுவான மற்றும் ஆழமான அடித்தளத்தை உருவாக்குவதற்கு உதவுகிறது.
பிப்ரவரி 12ஆம் தேதி ஹக் டே (Hug Day) நெருக்கத்தை அதிகரிக்கும் நாளாக கருதப்படுகிறது. கட்டிப்பிடித்தல் என்பது அன்பையும், அரவணைப்பையும் வெளிப்படுத்தும் உணர்வாகும். இது மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியை அதிகரித்து, நேசிக்கப்படுவதை உணரவைக்கிறது.
பிப்ரவரி 13ஆம் தேதி (Kiss Day) காதலர்கள் தங்களுக்குள் உள்ள அன்பை முத்தங்கள் மூலம் வெளிப்படுத்துகிற நாளாகும். இது வார்த்தைகளைவிட அன்பையும் நெருக்கத்தையும் அதிகப்படுத்தி உறவை வலுப்படுத்தும்.
பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தம்பதிகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அன்பையும், பரஸ்பர கவனத்தையும் வெளிப்படுத்தும் சிறந்த நாளாக கருதப்படுகிறது.
வாழ்வின் தொடக்கப் புள்ளியாக ஆரம்பித்த காதல் ஆயுள் முழுவதும் நீடித்து நிலைக்க காதலை வெளிப்படுத்தும் நாளாக அறியப்படுகிறது. அப்படி வெளிப்படுத்திய காதலை மகிழ்வுடன் கொண்டாடும் நாளாகவும், காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பரிசுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியாக கொண்டாடும் இனிய நாளாகவும் இது அமைகிறது. காதலர் தினம் என்பது அனைத்து வகையான அன்பையும் போற்றி அழகான நினைவுகளை உருவாக்குகிறது.
கிறிஸ்மஸ் தினத்திற்கு அடுத்தபடியாக வாழ்த்து அட்டை அனுப்புவதில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்த வேலண்டைன்ஸ் டே தினம். இன்றைய தினத்தில் உலகம் முழுவதிலும் வருடத்திற்கு ஏறத்தாழ ஒரு பில்லியன் வாலண்டைன் அட்டைகள் அனுப்பப்படுவதாக அமெரிக்க வாழ்த்து அட்டை அமைப்பு கணக்கிட்டுள்ளது.