ஆன்லைன் விளையாட்டில் மூழ்கும் இளைய தலைமுறையினர்: தடுக்க என்ன செய்யலாம்!

Online game
Online game

இன்றைய நவீன உலகில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியினால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்றால், நிச்சயம் அனைவருக்கும் மகிழ்ச்சி தான். ஆனால், எதிர்பாராத விபத்துகளும், தற்கொலை முயற்சிகளும் அதிகரித்து வருவது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. முன்னேற்றம் வேண்டும் தான் தான், உயிரை மாய்த்துக் கொள்ளும் முன்னேற்றம் வேண்டாம். உறவுகளை இழக்கும் முன்னேற்றம் வேண்டாம். 

இளைய சமுதாயம் முழுவதும் இன்று ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி, வாழ்க்கையையே அழித்துக் கொள்கின்றனர். நாளிதழில் தினந்தினம் ஒரு துயரச் செய்தியைக் காண நேரிடுகிறது. ஆன்லைனில் கேம் விளையாடி பணத்தை இழந்து இளைஞர் தற்கொலை; சிறுவன் மனநிலை பாதிப்பு, இதுபோன்ற பல துயரச் சம்பவங்கள் இன்றளவும் நடந்த வண்ணம் உள்ளது. இதைத் தடுக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் உடன் நேரத்தை செலவிடுவதே சிறந்த தீர்வாக அமையும்.

தங்கள் பிள்ளைகளின் மனநிலையை பெற்றோர்கள் அறிந்திருப்பது அவசியம். மொபைலை வைத்துக் கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பது மிக அவசியமான ஒன்றாகும். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் ஆன்லைன் கேம் விளையாடும் இளைஞர்களும் இங்கே இருக்கிறார்கள் என்பது மிகவும் வருந்தக்கூடிய தகவலாகும். பண்டைய காலத்தில் நண்பர்களோடு இணைந்து விளையாடுகையில், அதுவே உடற்பயிற்சியாக அமைந்தது. ஆனால், இன்றோ தனி அறையில், உணவு கூட உண்ணாது கேம் விளையாடி உடலை வருத்திக் கொள்கின்றனர். ஆன்லைனில் பணத்தை இழப்பதால், மனதளவில் பலவீனமாகி தற்கொலை முடிவை எடுத்து வாழ்க்கையையே அழித்துக் கொள்கின்றனர். இதனைத் தடுக்கவே, பப்ஜி என்ற ஆன்லைன் கேமை தடை செய்தது மத்திய அரசு. அதைத் தொடர்ந்து, கர்நாடக மாநில அரசும் ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்திலும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
சம்மர் சீசனில் மின் கட்டணத்தைக் குறைக்க இப்படி யோசித்துப் பாருங்க!
Online game

அரசு மட்டும் முயற்சி எடுத்து என்ன பலன் கிடைக்கப் போகிறது. பெற்றோர்கள் ஆகிய நீங்களும் தங்கள் பிள்ளைகளைக் காக்க முன்வர வேண்டும். பிள்ளைகளின் நட்புகள், செயல்பாடுகள், தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் மீது கவனம் இருக்கட்டும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் போதிய நேரத்தை செலவிடாமல் போவதே, ஆன்லைன் கேம்ஸ் மீதான மோகம் அதிகரிக்க காரணமாக அமைகிறது. நீங்கள் மட்டும் பிள்ளைகளுக்காக அடிக்கடி நேரத்தை ஒதுக்கிப் பாருங்கள். மாற்றம் அப்போதே ஆரம்பிக்கும். அடிக்கடி வெளியில் கூட்டிச் சென்று, இயற்கையின் அழகை ரசிக்கச் செய்யுங்கள். இயற்கையை ரசிக்க ஆரம்பித்து விட்டால், பிள்ளைகளின் ஆன்லைன் கேம்ஸ் மீதான மோகம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கும்.

பணத்தை இழந்தால் கூட மீண்டும் சம்பாதித்து விட முடியும். உயிரை இழந்தால் பிறகு புலம்புவதில் பயனில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com