

வீடுகளுக்குள் எப்படி எறும்பு வருகிறது? அது எந்தெந்த வழிகளை பயன்படுத்துகிறது தெரியுமா? எறும்புகள் நுழையும் வழிகளை எப்படி தெரிந்து கொள்ளலாம்?
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், எறும்புகள் ஒன்றும் எதேச்சையாக வரும் விருந்தினர்கள் அல்ல. அவை ஏற்கனவே அங்குள்ள சிறிய இடங்களில் கூட்டமாக வாழ்ந்திருக்கும். தேவைப்படும் நேரங்களில் அந்த கூட்டத்தின் வழிகாட்டியாக இருக்கும் எறும்புகள், மனிதர்களுக்கு தெரியாத சில இரசாயன ஃபெரோமோன்(pheromone) தடயங்களை உருவாக்கும். இவைதான் அந்த கூட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான எறும்புகளை உணவு அல்லது தண்ணீர் இருக்கும் இடங்களை நோக்கி வழிநடத்துகின்றன.
சமையலறைகள், இனிப்புகள் உள்ள பூஜை அறைகள் மற்றும் ஈரமான மூலை முடுக்குகள் ஆகியவை அவற்றின் முக்கிய இலக்குகளாகின்றன. ஏப்ரல் மாதத்தின் வெப்பம், எறும்புகளை ஈரப்பதம், குளிர்ச்சியான சூழலை தேடி போக வைக்கின்றன. இதனால் எறும்புகள் அவை இருக்கும் நிலத்தடிக் கூடுகளிலிருந்து வீடுகளுக்குள் நுழைகின்றன. குறிப்பாக சமையலறைகளே அவற்றின் நுழைவுப் பகுதியாக அமைகின்றன.
எறும்புகள் நுழையும் வழிகளை எப்படி தெரிந்து கொள்ளலாம்?
எறும்புகள் ஜன்னல்களில் உள்ள விரிசல்கள், டைல்ஸ்களுக்கு இடையேயான இடைவெளிகள் மற்றும் வீட்டின் நீர் தேவைக்காக சுவற்றின் உள் வழியே செலுத்தப்பட்டிருக்கும், குழாய்களை சுற்றியுள்ள இடைவெளிகள் மூலம் உள்ளே நுழைகின்றன. இவற்றை உன்னிப்பாக கவனித்தாலே அதன் கூட்டம் இருக்கும் இடத்தை கண்டறியலாம்.
சில சமயம் இரவு நேரங்களில் ‘ஆழ்ந்த அமைதியில்’ வீட்டின் சுவர்களுக்குள் கேட்கும் மெல்லிய சலசலப்புச் சத்தங்கள் அல்லது மழைக்கால மாலை வேளையில் லைட் வெளிச்சத்தின் அருகில் சுற்றும் பூச்சிகள்(பறக்கும் எறும்புகள்)ஆகியவை உங்கள் வீட்டில் மறைந்திருக்கும் எறும்பு கூட்டங்களின் தெளிவான அறிகுறிகளாகும் என்று ரென்டோகில் பிசிஐ (Rentokil PCI) நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எறும்புக்கு பின்னால் உள்ள அறிவியல் உண்மை:
'Current Opinion in Insect Science' இதழில் வெளிவந்த சமீபத்திய ஆய்வுகள், நகரமயமாக்கல், நுண்ணுயிரிகளின் இருப்பு(microbial interactions) மற்றும் மரபணு மாறுதல்கள் ஆகியவை எறும்புகளை நகரங்களில் கூட்டமாக இருக்க வைக்கின்றன என்பதை இந்த இதழ் வெளிப்படுத்துகிறது. சமூக ரீதியாகவும், அவற்றின் நடத்தைகள் ரீதியாகவும், எறும்புகள் மாற்றி அமைத்துக் கொள்ளும் திறன்களை பெறுகின்றன. இதனால் நம் வீட்டுச் சூழ்நிலை எப்படி இருந்தாலும், நம்மை விட அவற்றை இன்னும் வசதியாக இருக்க அனுமதிக்கிறது. எனவே, எறும்புகள் வெறும் பூச்சிகள் அல்ல; மனிதனால் உருவாக்கப்பட்ட வாழ்விடங்களுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்கள் என்பதை இது நிரூபிக்கிறது.
கலாச்சார மற்றும் அறிவியலின் கண்ணோட்டம்:
இந்திய பாரம்பரியத்தில், எறும்புகள் சில சமயங்களில் விடாமுயற்சி, குழுப்பணியின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. அறிவியல் ரீதியாக பார்த்தால் ‘எறும்புகள் வீடுகளுக்குள் இருந்தால்’ வீட்டின் கட்டமைப்பு சமநிலையில் இல்லை(Imbalance) என்பதை குறிக்கிறது. அதாவது விரிசல்கள், நீர் கசிவு, உணவு பொருட்களின் விரயம் போன்றவற்றை இது காட்டிக்கொடுக்கிறது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை, "இயற்கையை ஆழமாகப் பாருங்கள், அப்போது நீங்கள் எல்லாவற்றையும் சிறப்பாகப் புரிந்துகொள்வீர்கள்" என்று குறிப்பிட்டார். இது எறும்புகளைக் கண்டறிவதோடு ஒத்துப் போகிறது: அவற்றின் இயற்கையான தடங்களையும், நடத்தைகளையும் தெரிந்து கொள்வதன் மூலம், அவை நமது வீடுகளை எவ்வாறு கொஞ்சமாக கொஞ்சமாக சுரண்டுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
எறும்புகளின் சிறப்பம்சங்கள்:
எறும்புகள் வெறும் பூச்சிகள் மட்டுமல்ல, அவை பொறியாளர்களும் கூட. சாதாரணமாக அவை கல்லை மண்ணாக மாற்றம் செய்கின்றன, இது தாவரங்களைப் பாதுகாக்கின்றன. அதோடு அவற்றின் வலிமை மிகவும் வியக்கத்தக்கது; எறும்புகளால் தங்கள் உடல் எடையை விட 10 முதல் 50 மடங்கு வரை சுமக்க முடியும். ஆசிய நெசவு எறும்பு(Asian weaver ant) போன்ற இனங்கள் 100 மடங்கு வரை தூக்கி சுமக்கின்றன. அவற்றின் வெளி எலும்புக்கூடும், தசை அமைப்பும்தான் இந்த எடையை தூக்க சாத்தியமாக்குகின்றன.
எறும்புகள் vs மனிதர்கள் – யார் சிறந்தவர்?
அப்படி பார்த்தால் எறும்புகள் பல பரிமாணங்களில் மனிதர்களை மிஞ்சுகின்றன.
வலிமை: மனிதர்களுக்கு எறும்பு அளவிலான வலிமை இருந்தால், நம்மால் கார்களையே(Car) தூக்க முடியும்.
கூட்டுப்பணி: எறும்புக் கூட்டங்களுக்குள் இருக்கும் தடையற்ற ஒத்துழைப்பு, அவற்றுக்குள்ளான வேலைப் பகிர்வு; எரும்பை ஒரு சிறப்புமிக்க உயிரினங்களாக செயல்பட வைக்கின்றன.
மீண்டெழும் திறன்: எறும்புகள் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு விரைவாகத் தங்களைத் உருமாற்றி கொள்கின்றன; அதற்கேற்றார்போல் பணிகளையும், வழிகளையும் மறுபகிர்வு செய்கின்றன.
இந்த தகவல்களைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் சமையலறை மற்றும் பூஜை அறைகளில் எறும்புகள் நுழைவதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சுவர்களில் உள்ள விரிசல்களை அடைத்து வீட்டை எப்போதும் தூய்மையாகவும் எறும்புத் தொல்லை அற்ற சூழலாகவும் பராமரிக்க முடியும்.