காக்கா உங்களுக்கு தங்கம் கொண்டு வந்து கொடுக்குமா? ஆச்சரியமூட்டும் காகங்களின் ரகசியம்!

crow
crow
Published on

நம்ம ஊர் கலாச்சாரத்துல, காலையில சமைச்ச உடனே முதல் வாய் சோற்றை காக்காவுக்கு வைப்பது ஒரு முக்கியமான பழக்கம். "காக்காவுக்குச் சாப்பாடு வச்சிட்டுதான் நாம சாப்பிடணும்"னு பெரியவங்க சொல்வாங்க. அது பித்ருக்களின் வழிபாடுன்னு ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அது ஒரு ஜீவகாருண்யம். 

நாம தினமும் சோறு வைக்கிறோம், அது வந்து சாப்பிட்டு "கா... கா..."ன்னு கத்திட்டுப் போயிடுது. இதுதான் வழக்கமா நடக்கும். ஆனா, என்னைக்காவது அந்த காக்கா, சாப்பிட்ட சோற்றுக்குக் கைமாறா உங்களுக்கு ஏதாவது கொண்டு வந்து கொடுத்திருக்கா?

"என்னது... காக்கா கிப்ட் கொடுக்குமா?"னு நீங்க ஆச்சரியப்படலாம். ஆனா, உலகம் முழுக்க பல இடங்களில் காகங்கள் தங்களுக்கு உணவளிக்கும் மனிதர்களுக்குச் சின்னச் சின்னப் பரிசுகளைக் கொண்டு வந்து தரும் விசித்திரமான சம்பவங்கள் நடந்துக்கிட்டே இருக்கு. 

புத்திசாலி: பறவைகளிலேயே காகம் மிகவும் புத்திசாலி. விஞ்ஞானிகள் என்ன சொல்றாங்கன்னா, ஒரு ஏழு வயதுக் குழந்தைக்கு இருக்கிற மூளை வளர்ச்சியும், ஞாபக சக்தியும் காகங்களுக்கு இருக்காம். குறிப்பா, முகங்களை ஞாபகம் வச்சுக்கிறதுல காகங்கள் கில்லாடி. நீங்க தினமும் அதுக்குச் சாப்பாடு வச்சா, உங்க முகத்தை அது பதிவு பண்ணி வச்சுக்கும். உங்களை ஒரு நண்பரா ஏத்துக்கிட்ட பிறகுதான், இந்த "கிப்ட் கொடுக்குற" படலம் ஆரம்பிக்கும்.

இதையும் படியுங்கள்:
அப்பளம்! பப்படம்! பப்பட்! வித்தியாசம் என்ன தெரியுமா? 
crow

என்ன கொடுக்கும்? 

பெரும்பாலும் பளபளப்பா இருக்கிற பொருட்கள்தான் காகங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். சின்னக் கூழாங்கற்கள், கலர் கண்ணாடித் துண்டுகள், பாட்டில் மூடி, சின்ன இரும்புத் துண்டு, சில சமயம் தொலைஞ்சு போன தோடு அல்லது மோதிரம் கூட கொண்டு வரும்.

நமக்கு இதெல்லாம் குப்பையா தெரியலாம். ஆனா, காகத்தைப் பொறுத்தவரைக்கும் அது சேகரிச்சு வச்சிருக்கிற மிகப்பெரிய பொக்கிஷம் அதுதான். தனக்கு தினமும் பசி ஆற்றும் அந்த மனிதருக்கு, தன்னிடம் இருப்பதிலேயே மிகச் சிறந்ததைக் கொடுக்கணும்னு அது நினைக்குது. சாப்பிட்டு முடிச்ச இடத்துல, இந்த மாதிரியான பொருட்களை விட்டுட்டுப் போகும். இது ஒருவகையான "நன்றி தெரிவிக்கும் முறை".

இதையும் படியுங்கள்:
Abayomi dolls: அடிமையாய் இருந்தவர்களின் பாச அடையாளமான அபயோமி பொம்மைகள்!
crow

பாசமா... பரிவர்த்தனையா?

இது ஏன் நடக்குதுங்கறதுக்கு ஆராய்ச்சியாளர்கள் இரண்டு காரணங்கள் சொல்றாங்க. ஒண்ணு, இது ஒரு சமூகப் பிணைப்பு. காக்கைகள் கூட்டமா வாழும் பறவைகள். தங்களுக்குள்ளேயே உணவைப் பகிர்ந்துக்கும். உங்களையும் தன் கூட்டத்துல ஒருத்தரா நினைச்சு, உங்ககிட்ட அந்தப் அன்பைப் பரிமாறுது. இரண்டாவது, இது ஒரு பரிவர்த்தனை. "நீ எனக்குச் சாப்பாடு தா, நான் உனக்கு இந்தப் பொருளைத் தர்றேன்"ங்கிற ஒரு ஆதி காலத்து வியாபார முறை.

சில சமயம் காக்கா கொண்டு வர்ற பொருள் நமக்கு உபயோகமா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்குப் பின்னாடி இருக்கிற அந்த அன்பு ரொம்பப் பெருசு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com