

இன்று அநேக வீடுகளில் நம்மில் ஒரு உறவாக செல்லப் பிராணிகளை வளர்க்கிறோம். நாய், பூனை, கிளி, மீன்கள் என பல விதங்களில் பிராணிகள் நம் வீடுகளில் வளர்கின்றன. முன்பெல்லாம் திறந்தவெளி, வீடாக இருந்ததால் அவைகளை வளர்ப்பது சுலபமாக இருந்தது.
அவை நம் மீது பாசமாக இருப்பதுடன் நமக்கு ஒன்றென்றால் உயிரைவிட்டாலும் நம்மை காக்கும் வலிமை கொண்டவை. தோட்ட வீடுகளுக்கென்றே நாட்டு நாய்களான ராஜபாளையம், கோம்பை போன்றவை வளர்க்கபடுகின்றன. இவை அதிக மோப்ப சக்தியும், ஓடும் திறனும் கொண்டவை. பாதுகாப்பு காரணங்களுக்காக இன்றும் நம் தோட்டங்களில் அவை பாதுகாவலனாக வும், அரணாகவும் உள்ளன.
செல்லப் பிராணிகளை வளர்க்க பலவிதங்களில் நமக்கு நன்மை செய்யும். வீட்டிற்கு பாதுகாப்பு கிடைப்பதோடு, நம் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் உயிராக நம்மை நேசித்து நம்மை மகிழ்விக்கின்றன.
நாய்கள் அதிகமாக 10முதல் 14ஆண்டுகள் வாழக் கூடியவை. இவ்வுலகில் 400 மில்லியன் நாய்கள் உள்ளதாம்.நாய்களால் 200வார்த்தைகளின் சைகைகளை புரிந்துகொள்ள முடியும்.
நாய்கள் மனிதனின் முகத்தை வைத்தே அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என புரிந்துகொள்ளும். இவைகளால் 16கி மீ வேகத்தில் ஓட முடியும். மோப்ப சக்தியும், ஞாபக திறன் அதிகம் கொண்ட நாய்கள், கிளிகள் போன்றவற்றை அதற்கென்று உள்ள உணவுகளையே கொடுத்து வளர்க்கவேண்டும்.
நாய்களுக்கு நாம் சாப்பிடும் சாம்பார், காய்கறிகள், இனிப்புகள், சாக்கலேட்டுகளை கொடுத்து பழக்கக் கூடாது. பின்னாளில் அவற்றின் உடல் பலகீனத்திற்கு இவையே காரணமாகிவிடும்.
வீட்டில் அவைகளுக்கு சாப்பாடு வைக்கும் போதோ, அவைகள் தூங்கும்போதோ தொந்தரவு செய்யக்கூடாது. நம் வீட்டு செல்லம் தானே என அவற்றை கொஞ்ச முற்படும்போதுதான் அவை கடித்து விடுகின்றன.
நாய் மட்டுமன்றி, பூனை போன்றவையும் கடித்தாலோ, அதன் நகங்களால் பட்டாலோ மருத்துவம் செய்து கொள்வது அவசியம்.
வீட்டில் பிராணிகளை வளர்ப்பதால் அவைகளின் செயல்கள் நமக்கு ஆனந்தத்தைத் தருவதோடு, மன அழுத்தத்தை குறைக்கிறது. அவைகளின் விளையாட்டுகள் நம்மை மகிழ்விப்பதோடு, நம் கவலைகளையும் மறக்கச் செய்துவிடுகிறது. தனிமையில் இருப்போர்க்கு நல்ல வளர்ப்பு பிராணிகளே உற்ற தோழனாக துணைபுரிகின்றன.
நம் வீட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி போட்டு நல்ல விதமாக பராமரிக்க என்றும் நம் உறவாக மகிழ்ச்சி தரும். நாய் மட்டுமன்றி, கிளி, பூனை போன்றவைகளையும் அவற்றிக்கேற்ற உணவளித்து பராமரிக்க நல்ல துணையாக இருக்கும்.
அன்பை மட்டுமே காட்டும் பிராணிகளை வளர்க்க, நம் மன நலன் நன்றாக இருப்பதோடு, குழந்தைகளின் உற்ற நண்பனாக துணை நிற்கும்.
எங்கள் வீட்டில் நாய் இருந்தது. வாடகை வீட்டிற்கு வர நேர்ந்ததால் தற்போது கிளி, மீன் மட்டும் உள்ளது. மனச்சோர்வான நேரங்களில் அவை தரும் பாசம் எல்லாவற்றையும் மறக்க செய்துவிடும்.