ஒரு செயலை தொடங்கி விடுவார்கள். ஆனால் அதை சரியாக முடிப்பது எப்படி என்று தெரியாமல் பாதியிலேயே விட்டுவிடுவார்கள். சிலருக்கு ஸ்டார்டிங் ட்ரபுள் இருப்பது போல சிலருக்கு பினிஷிங் டச் பற்றி சரியாக தெரியாது. இந்தப் பதிவு ஒரு செயலை சரியாக தொடங்கி எப்படி முடிப்பது என்பதைப் பற்றி விளக்குகிறது.
1. என்ன செய்ய வேண்டும் என்பதில் ஒரு தெளிவு வேண்டும் தெளிவான இலக்குகளை அமைக்க வேண்டும். அந்த இலக்கை ஏன் அடைய விரும்புகிறீர்கள் என்பதற்கான தெளிவான நோக்கமும் இருக்க வேண்டும். அதேபோல அது அடையக்கூடிய இலக்காக இருப்பது அவசியம்.
2. ஒரு செயலை செய்து கொண்டிருக்கும்போதே இதை அப்புறம் செய்யலாம் என்று அதை தள்ளிப் போடக்கூடாது. தள்ளிப் போடும் மனப்பான்மை எப்போதுமே ஆபத்தானது. அது சோம்பேறித்தனத்துக்கு வழி வகுத்து செயலை முடிக்க விடாமல் செய்து விடும். எனவே ஒரு செயலை செய்ய முடிவெடுத்தால் உடனே அதை செய்து முடிக்க வேண்டும்.
3. நேர மேலாண்மையை கற்றுக் கொள்ள வேண்டும். இந்த நேரத்திற்குள் இந்த வேலையை செய்து முடிப்பேன் என்கிற மன உறுதி வேண்டும். ஒரு வேலையை செய்ய இரண்டு மணி நேரம் என தீர்மானித்தால் அதற்குள் அந்த பணியை முடிக்கும் சிறந்த நேரமேலாண்மை திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4. சுய ஒழுக்கம் ஒருவருக்கு மிக அவசியம். இதைப் பின்பற்றினால் மட்டுமே ஒருவரால் தன்னுடைய இலக்குகளை அடைய முடியும். அந்த இலக்குகளை அடைவதற்கான திட்டங்களை தீட்டி அதை நோக்கி செயல்படவும் முடியும்.
5. ஒரு (ரொட்டீன்) வழக்கத்தை உருவாக்க வேண்டும். இந்த நாளன்று இந்த வேலையை நான் செய்து முடிப்பேன் என்று உறுதி எடுத்துக் கொண்டு கவனத்தையும் நேரத்தையும் அதில் செலவழித்து அந்த வேலையை எப்பாடுபட்டாவது முடிக்க வேண்டும்.
6. கவனச் சிதறல்களை கவனமாக கையாள வேண்டும். தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கும்போது தேவையில்லாத கவனச் சிதறல்கள் ஏற்படும். மொபைல் அரட்டைகள், முகநூலில் இன்ஸ்டாவில் நேரத்தை செலவழிப்பது அல்லது நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடிப்பது போன்றவற்றை விட வேண்டும்.
7. ஒருவர் தன்னைத்தானே சுயமாக உற்சாகப்படுத்திக் கொண்டு வேலை செய்ய வேண்டும். தன்னைத்தானே மோட்டிவேட் செய்து கொள்ளும்போது அவருக்கு எல்லையில்லாத ஆற்றல் கிடைக்கும். தன் பணியை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.
8. ‘’ஐயோ இத்தனை வேலைகள் இருக்கா?’’ என்று மலைக்காமல் அந்த வேலைகளை சிறு சிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும். சரியான நேரம் அமைத்து அதற்குள் அந்த சிறு சிறு இலக்குகளை முடித்தால் பணிகள் சுலபமாகும். பெரிய இலக்குகளை இவ்வாறு சிறு சிறு இலக்குகளாக பிரிப்பதன் மூலம் அடைய முடியும்.
9. விடாமுயற்சி ஒருவருக்கு மிகவும் அவசியம். தான் செய்யும் பணியில் சில தோல்விகளோ அல்லது பின்னடைவுகளோ ஏற்படலாம். அதை பெரிதாக கருதாமல் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
10. இலக்குகளை அடைய நினைப்பவர்களுக்கு பொறுப்புணர்வும் அர்ப்பணிப்புணர்வும் மிகவும் அவசியம். இந்த வேலையைத்தான் செய்து முடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பொறுப்பாக வேலை செய்ய வேண்டும். அதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு இலக்கை நோக்கி பயணித்தால் ஒரு செயலை தான் திட்டமிட்டபடி மிகவும் நேர்த்தியாக செய்து முடிக்க முடியும்.