நம் வாழ்வில் மனஉறுதி என்பது மட்டும் இருந்தால் போதும் எப்பேர்ப்பட்ட துன்பத்தையும் கடந்து வந்து விடலாம். அத்தகைய மனஉறுதியை வளர்த்து கொள்ள செய்ய வேண்டிய விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
* உங்களுக்கு என்ன வேண்டும், எதை அடைய ஆசைப்படுகிறீர்கள் என்பதை முதலில் எழுதுங்கள். உங்களுடைய இலக்கு என்ன என்பதை உங்களுக்கே நீங்கள் தெளிவாக சொல்லிக்கொள்ளுங்கள். திட்டமிடுதல், ஆரம்பித்தல், கட்டுப்படுத்துதல், இலக்கை நோக்கி செல்லுதல் போன்று இந்த முறை உங்களை கவனத்தை சிதற விடாமல் இலக்கை நோக்கி செல்ல உதவும். உடல்நிலை, வேலை, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை பற்றியும் தினமும் எழுதி, நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி ஒருபடி முன்னேறி செல்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
* நமக்காகவும், நம்முடைய தேவைக்காகவும் குரல் கொடுப்பது என்பது மிகவும் முக்கியம். மனதளவில் உறுதியாக இருக்க வேண்டும் என்றால் உணர்ச்சிகளுக்கு அடிமையாவதை நிறுத்த வேண்டும். எந்த இடத்தில் 'நோ' சொல்ல வேண்டுமோ அங்கே நிச்சயம் 'நோ' சொல்ல வேண்டும்.
* நாம் பழகும் நண்பர்களையும் மனதளவில் உறுதியாக இருப்பவர்களாக தேர்வு செய்வது நல்லது. அப்போதுதான் நாமும் மனதளவில் உறுதியாக முடியும்.
* நம்முடைய உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்க வேண்டியது என்பது மிகவும் அவசியமாகும். மனதளவில் உறுதியாக இருப்பவர்களுக்கு தன்னுடைய உணர்வுகளை எப்படி ஆரோக்கியமான வழியில் பார்த்து கொள்வது என்பதை அறிந்திருப்பார்கள்.
* நம்முடைய மனதில் இருக்கும் உணர்வுகளை டைரி போன்றவற்றில் அவ்வபோது எழுதி வைத்து அதில் தேவையானது எது, தேவையில்லாதது என்று பகுத்தறிய கற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது.
* வாழ்க்கையில் நம்மால் கட்டுப்படுத்த முடிவதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லதாகும். நம் கை மீறி போகக்கூடிய விஷயங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பது வீண் நேர விரயமாகும்.
* நம்மிடம் இல்லாத விஷயங்களை பற்றி வேதனைப் படுவதை நிறுத்தி விட்டு நம்மிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடைய வேண்டியது மிகவும் முக்கியமாகும். நமக்கு தேவையானதை நாமே உழைத்து அடைவதே உண்மையான வெற்றியாகும்.
* உடல் நலத்தில் அக்கறை காட்டுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உறுதியான மனம் வேண்டும் என்றால் உறுதியான உடல் இருப்பது மிகவும் அவசியமாகும்.
* எப்போதும் கம்பர்ட் ஸோனிலேயே இருந்தால், வளர்ச்சி என்பதே இருக்காது. வாழ்வில் சில இடையூறுகள் வருவது சசஜமேயாகும். அதை ஏற்றுக்கொண்டு செயலாற்ற வேண்டியது மிகவும் முக்கியம். அப்போதே வளர்ச்சியடைய முடியும்.
* இதுவரை நீங்கள் அடைந்த வெற்றிகளை பற்றி ஒரு அட்டவணையை உருவாக்குங்கள். அதை அடைவதற்கு நீங்கள் செய்த முயற்சி, உங்களுடைய குணம் போன்றவற்றையும் தெரிந்து கொள்வது அவசியமாகும்.