
எழுத்தாளர், விஞ்ஞானி, அரசியல் வல்லுனர், கல்வியாளர், பத்திரிக்கையாளர், இசைக்கலைஞர், தத்துவஞானி, நாட்டின் உயர்பதவிகள் பலவற்றை அலங்கரித்தவர் என்றெல்லாம் ஒரே மனிதரைப் பற்றி சொல்ல முடியும் என்றால் அது பிரமிக்க வைக்கும் செய்தியே. ஏனென்றால் இவற்றில் சில ஒன்றுக்கு ஒன்று சிறிதும் சம்பந்தப்படாத நேர்மறையான துறைகளே. இத்தனை அடைமொழிகளுக்கும் பொருந்தக் கூடிய - ஒரு மனிதராக திகழ்ந்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின். அவர் சாதனை புரிந்த துறைகளாக வேறு சிலவற்றின் பெயர்களைக் கூடக் கூறலாம்.
அவர் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதிக் கையெழுத்திட்ட ஐவரில் ஒருவர். அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவர். இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர். மின்சாரம் குறித்த பல ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர். அர்மோனிகா என்ற ஒருவகைக் கண்ணாடியைக் கண்டுபிடித்தவர். பெனிசில்வேனியா பல்கலைக் கழகம் அமையக் காரணமாய் இருந்தவர். வயலின் மற்றும் கிடார் கலைஞர், சிறந்த செஸ் ஆட்டக்காரர், நிறைய விஷயங்களைப் பற்றி நிறைய எழுதியவர்... இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். ஒரு வாழ்க்கையில் இத்தனை முத்திரைகள் பதிக்க முடிந்தவர் தன் வாழ்க்கையில் மிக நல்ல மனிதர் என்றும் அறிந்தவர்களால் கருதப்பட்டார்.
அப்படிப்பட்ட வெற்றி வாழ்க்கை வாழ்ந்த மனிதர், தான் பின்பற்ற வேண்டிய பண்புகளாக 12 குணங்களை தன் இளமையிலேயே குறித்துக் கொண்டு வாழ்ந்தார். அவைகள் தான் இப் பதிவில்
1. மிதத்தன்மை :
உண்பதிலும், அருந்துவதிலும், மிதத்தன்மை முக்கியம். ஊக்கத்தைக் கெடுக்கும் அளவு உண்ணாதே. வெறிகொள்ளும் அளவு குடிக்காதே.
2. நாவடக்கம் :
பிறருக்கோ, உனக்கோ நலம்புரியும் சொற்களை அன்றி வேறு சொற்களைப் பேசாதே. வெறும் நேரம் போக்கும் பேச்சில் எப்போதும் கலந்து கொள்ளாதே.
3. ஒழுங்குமுறை :
உன் பொருள்கள் ஒவ்வொன்றையும் உரிய இடத்தில் வைக்கப் பழகு; உன் தொழிலின் ஒவ்வொரு பகுதிக்கும் உரிய ஒரு காலத்தை ஒதுக்கிவை.
4. உறுதியுடைமை :
செய்ய வேண்டியவற்றைச் செய்ய உறுதி கொள். உறுதி கொண்டவற்றை தவறாது செய்.
5. சிக்கனம் :
உனக்கோ, பிறருக்கோ, நன்மை செய்வதற்காக அல்லாமல் வேறெதற்காகவும் பணத்தை செலவழிக்காதே. அதாவது, வீண் செலவு செய்யாதே.
6. முறையான உழைப்பு :
காலத்தை சிறிதும் இழக்காதே. எப்போதும் பயனுள்ள எதையாவது செய்து கொண்டிரு. தேவையற்ற செயல்கள் யாவையும் ஒழித்துவிடு.
7. வாய்மை :
பிறரைப் புண்படுத்தும் சூழ்ச்சி செய்யாதே. இரண்டக மில்லாமலும், நேர்மையுடனும் சிந்தனை செய். பேசும்போது அப்படியே பேசு.
8.நேர்மை :
தீங்கு செய்து அதன் மூலம் யாருக்கும் தீமை உண்டாக்காதே. அதுபோல கடமைகளை செய்யாமல் விட்டும் அடுத்தவருக்கு தீங்கு செய்யாதே.
9. நடுநிலையுணர்வு :
எதிலும் அதீதத் தன்மையை விலக்கு. உனக்கு இழைத்த தீங்குகளுக்காகக் கூட நீ அடுத்தவரிடம் சினம் கொள்ளாதிரு.
10. துப்புரவு :
உடல்,உடை, இருக்குமிடம் ஆகியவற்றில் எத்தகைய துப்புரவுக் கேடுக்கும் இடம் அளிக்காதே.
11. மன அமைதி :
சின்னச் சின்ன விஷயங்களுக்காகவோ, தவிர்க்கமுடியாத மற்றும் தற்செயலாய் நிகழும் நிகழ்ச்சிகளுக்காகவோ மன அமைதி இழக்காதே.
12. ஒழுக்கமுடைமை :
அயர்வு அல்லது பலவீனம் அடையும் அளவுக்கோ, உன்னுடைய மற்றும் அடுத்தவருடைய அமைதிக்கோ, புகழுக்கோ கேடு உண்டாக்கும் அளவுக்கோ இன்பம் நுகராதே.