

சாலைகளில் மேடுபள்ளம் இருப்பது போல், தோட்டத்தில் முட்செடிகள் முளைப்பது போல், வயலில் களைகள் வளர்வது போல் உங்கள் சாதனைப் பயணத்தில் உங்கள் வேகத்தைக் குறைக்கவும், உங்களை திசை திருப்பவும் எத்தனையோ சக்திகள் எதிர்ப்படும் எச்சரிக்கையுடன் செயல்படாவிட்டால் சாதனைகள் சாத்தியமாகாது. நீங்கள் மேற்கொள்ளவேண்டியது என்ன தெரியுமா?
குறிக்கோளில் அலட்சியம்
குறிக்கோளை அடைவதில் தீவிரம் இல்லாவிட்டால் குறிக்கோளை அடையத் தேவையான உந்து சக்தி மிகவும் பலவீனமாக இருக்கும்.
சோம்பல்
உடலில் சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் இல்லையென்றால் எதையும் செய்யத் தோன்றாது. செய்யும் செயல்கள் எல்லாம் மந்த கதியில் நடக்கும். பிறகு செய்யலாம் என்று தள்ளிப் போடத் தோன்றும்.
அரைகுறை ஞானம்
அடைய வேண்டிய குறிக்கோள் சம்பந்தமான விரிவான நுணுக்கமான அறிவின்றி அரைகுறை அறிவோடு இருப்பது ஆபத்து.
அலைபாயும் மனம்
ஒருமுகப்பட்ட மனமும் சிந்தனையும் இன்றி எதையும் மேலோட்டமாகப் செய்தாலும், மனம் இங்குமங்கும் அலைபாய்ந்தாலும் வெற்றி விலகித் தான் போகும்.
கண்மூடித்தனமான உழைப்பு
மூளையை உபயோகிக்காமல் வெறும் செக்குமாட்டு உழைப்பு எந்த முன்னேற்றத்தையும் தராது.
கேளிக்கைகள்
பயனற்ற பொழுதுபோக்குகளிலும் கேளிக்கைகளிலும் அதீதமாக ஈடுபடுவது நேரத்தைப் போக்குவது வாழ்க்கையை வீணடிப்பதாகும்.
தீய பழக்கங்கள்
குடி, சூதாட்டம், போதைப்பொருள், அளவு மீறிய பெண் வேட்கை போன்ற தீய பழக்கங்கள் தீமையையே தரும்.
தீய நண்பர்கள்
உங்களை தீய பழக்கத்தில் இழுத்துச் செல்கிற நண்பர்கள் நஞ்சைவிட கொடிய விரோதிகள்.
உடல் பராமரப்பு
உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மருத்துவ பரிசோதனைகள் இவற்றில் காட்டும் அலட்சியம் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். இதனால் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும்.
உறவில் விரிசல்
மனித உறவுகளை சரியாக கையாளாமல் எல்லோரையும் படைத்துக் கொள்வது நல்லதல்ல.
விமர்சனங்கள்
பிறரின் விமரிசனங்களை ஏற்று பயந்து குறிக்கோள், திட்டம், செயல்முறைகளை மாற்றுவது உங்களை சாதனையாளர் ஆக்காது.
அவநம்பிக்கை
தன்னம்பிக்கையும், துணிவும் இல்லாமல் சாதனைகள் சாத்தியமாகாது.
எதையும் நம்புவது
நீர் விசாரிக்காமல் ஒருவரின் பின்னணி தெரியாமல் எவரையும் எளிதாக நம்பிவிடுவது பல இழப்புகளை ஏற்படுத்தும்.
செயலின்மை
ஒன்று தலைவனாக இருந்து நாலு பேரை வழிநடத்த வேண்டும். அல்லது சாதனையாளர் ஒருவரை தலைவராக ஏற்று அவர் வழி நடக்க வேண்டும். எதுவுமே இல்லாமல் நடப்பதை பார்த்தும் விமர்சித்தும் இருப்பவர்கள் செயலற்றவர்கள். இவர்களால் சாதனையாளர் ஆக முடியாது.
காலத்திற்கேற்ப மாறாமை
சவால்களை சமாளிப்பது குறிக்கோள் சம்பந்தமாக நாட்டில் நிகழும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதும் அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வதும் சாதனையாளர்களுக்கு அவசியம். இல்லாவிட்டால் உலகம் ஓடுகிற ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கிணற்றுத் தவளையாக இருக்க வேண்டியதுதான்.
எந்த ஒரு மனிதனுக்கும் நண்பர்கள் இருப்பது போலவே எதிரிகளும் போட்டியாளர்களும் இருக்கத்தான் செய்வார்கள் அவற்றை முன்னதாகவே உணர்ந்து தெளிந்து எச்சரிக்கையுடன் செயல்படாவிட்டால் சாதனைகள் சாத்தியமாகாது. எவன் ஒருவன் தனக்கு நேரும் சவால்களை எதிர்கொண்டு சமாளிக்கிறானோ அவனே சாதனையாளன் ஆகிறான்.