motivation image
motivation imageImage credit - pixabay.com

செய்யும் தொழிலில் சிறந்து விளங்க 3 மந்திரங்கள்!

-மரிய சாரா

சுயதொழில் என்பது முன்பெல்லாம் பலரின் கனவாகவும், எட்டாக்கனியாகவும் இருந்து வந்தது. முதலீடு, தொழில் பற்றிய தெளிவு, தொழில் பற்றி தெரிந்தவர்களின் வழிகாட்டுதல், வரவு செலவுகளைச் சரிபார்ப்பது... இப்படி பல சிக்கல்கள். அனைத்தையும் மீறி தொழில் செய்யவேண்டும் என முடிவு செய்தால், எதிர்மறையாக பேசும் நபர்களின் பேச்சுகள்.

இப்படி எல்லாவற்றையும் மீறி தொழில் ஆரம்பித்தாலும் அதில் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் அவ்வளவுதான். அதை தாங்கும் மன வலிமையும் அப்போது நிறைய பேருக்கு இல்லை. சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட மனமுடைந்து, முயற்சியைக் கைவிட்டுவிடுவர்.

ஆனால், இப்போதெல்லாம் அப்படி இல்லை. யார் வேண்டுமென்றாலும் அவர்கள் விரும்பிய தொழிலை செய்யலாம். அதற்கான முதலீடு குறித்த திட்டங்களையும் எளிதாகவே தீர்மானிக்கலாம். தொழில் கடன் வசதிகளையும் வங்கிகளில் பெறமுடிகிறது. தோல்விகள் நேரும்போது அவற்றை எதிர்கொள்ளும் துணிவும் இருப்பதை இப்போது தொழில் செய்யும் நபர்களிடம் பார்க்க முடிகிறது.

தொழிலில் நிலைத்து நிற்பது என்பது சாதனைதான். ஒரு முறை ஜெயிப்பது வெற்றியல்ல. ஆனால், ஒவ்வொரு முறையும் ஜெயிக்க வேண்டும். இதுதான் சுயதொழில் செய்யும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் நிதர்சனம். அப்படி ஜெயித்து நிலைத்து நிற்க தேவையான 3 முக்கியமான வழிகளைப்பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

1. தோல்விகளைக் கண்டு துவளாதே!:

சுயதொழில் என்றால் நிச்சயமாக அதில் உயர்வு, தாழ்வுகள் இருக்கும். வெற்றி, தோல்விகள் இருக்கும். சிலர் தோல்விகளைத் தழுவும்போது, மனமுடைந்து போகின்றனர். சிலர் தற்கொலைதான் தீர்வு என தங்களை மாய்த்துக்கொள்கின்றனர்.

உண்மையில் சாவதற்கு தைரியம் தேவை இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் வாழ்ந்து காட்டுவதற்குத்தான் உண்மையான தைரியம் வேண்டும். வலிகளைத் தாங்கி நிற்கும் கல்தானே சிற்பமாக ஜொலிக்கிறது? வாழ்க்கையும் அதேபோல்தான். தொழிலில் ஏற்படும் நஷ்டங்களும், பிரச்னைகளும் நமக்குப் பாடமாக அமைய வேண்டும். பல தடைகளைத் தாண்டி, தொழிலில் சிறந்து விளங்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
முதுகு வலியை முறியடிக்க செய்ய வேண்டியது என்ன?
motivation image

2. யோசித்து திட்டமிட்டு செயல்படு!

எந்தத் தொழிலானாலும் அது சிறியதோ, பெரியதோ அதற்கான திட்டமிடல் என்பது மிகவும் முக்கியம். தொழிலுக்கான முதலீடு எவ்வளவு? யாரெல்லாம் எந்த எந்தப் பணிக்காக தேர்ந்தெடுக்கப் போகிறோம்? எப்படி தொழிலைச் சந்தைப்படுத்தப் போகிறோம்? என்றெல்லாம் தொழிலைத் துவக்கும்முன்பே சரியாகத் திட்டமிட்டுத் துவக்கினால், தேவையற்ற பண விரயத்தை, நேர விரயத்தைத் தவிர்க்கலாம்.

3. முயற்சியைக் கைவிடாதே!

சொந்த வாழ்க்கையில் மட்டுமல்ல, சொந்த தொழிலிலும் கூட விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் மிக முக்கியம். எந்தத் தொழிலும் முதலில் எடுத்தவுடன் லாபம் கொடுத்து விடும் என்று சொல்லிவிட முடியாது. முதல் 6 மாதங்களுக்கு லாபம் என்பதை எதிர்பார்க்க முடியாது. அதேபோல் தொழிலில் வெற்றிகளை ஏற்றுக்கொள்வதைப் போலவே தோல்விகளையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தேவை.

அவ்வளவுதான். இன்று இங்கு இதோடு முடிந்தது என சில சூழ்நிலைகள் தோன்றும். அப்படித் தோன்றும் நேரங்களில் எல்லாம் மனதைத் திடமாய் வைத்துக் கொண்டு தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து செல்ல வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com