மனித மூளை BC 17ஆம் நூற்றாண்டில் இருந்து ஆய்வு செய்யப்பட்டு வந்தாலும், இன்றளவும் இந்த அற்புதமான கருவியை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இருப்பினும் சைக்காலஜி அடிப்படையில் மனித மூளையை புரிந்து கொள்வதற்கு சில விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை நாம் புரிந்து கொள்ளும்போது நம்முடைய மோசமான வாழ்க்கையை சிறப்பாக மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது. அப்படிதான் நமது வாழ்க்கையை எளிதாக மாற்றும் 4 சைக்கலாஜிக்கல் தந்திரங்கள்ப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பிறர் சத்தம் போட்டால் நீங்கள் அமைதியாக இருங்கள்: உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நாம் அனைவருமே வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் கோபப்பட்டு சத்தம் போட்டு பேசியிருப்போம். ஆனால் சத்தம் போட்டு கத்தி பேசுவது உறவுகளுக்கு மத்தியே ஆரோக்கியமானதல்ல. எந்த வகையிலும் இது ஒருவருக்கு நல்லது செய்யாது. ஒருவர் சத்தம் போட்டு கத்துகிறார் என்றால், அவர் உங்களை மட்டம் தட்ட நினைக்கிறார் என அர்த்தம். ஒருவரை கண்ட்ரோல் செய்வதற்கு சத்தம் போட்டு பேசினால் செய்து விடலாம் என நினைப்பது தவறு. அதே நேரம் தன்னை பெரியாளாகக் காட்டிக் கொள்ள சத்தம் போட்டு பேசுபவர்களும் இருக்கின்றனர். எனவே யாரிடமும் சத்தம் போட்டு பேசாதீர்கள், பிற சத்தம் போட்டு உங்களிடம் பேசினாலும் அதற்கு எதிர்வினை ஆற்றாதீர்கள்.
மன அழுத்தமான தருணங்களில் உங்களது எண்ணங்களை எழுதுங்கள்: நான் எழுத்துத் துறையில் பணியாற்றுகிறேன் என்பதால், எழுத்தின் ஆற்றல் என்னவென்று எனக்குத் தெரியும். நாம் ஆயிரம் விஷயங்களை ஆயிரம் விதமாக மனதில் நினைத்தாலும், அதில் ஒரு விஷயத்தை எழுதும்போது அதில் கிடைக்கும் தெளிவு அதிகம். எனவே நீங்கள் கோபமாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்ந்தால், அதற்கான காரணங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஒருமுறை எழுதிப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்.
சரியான தோரணை தன்னம்பிக்கையை அதிகரிக்கும்: நாம் அனைவருக்குள்ளும் வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்தை நினைத்து கவலை நிச்சயம் இருக்கும். சில நேரங்களில் நமக்கு தன்னம்பிக்கை இல்லாதது போல உணர்வோம். இது போன்ற தருணங்களில் உங்கள் உடலை மிடுக்காக வைத்திருந்தால், அது உங்களுடைய மனநிலையில் தன்னம்பிக்கையை கொடுக்கும் என உளவியல் சொல்கிறது. எனவே நீங்கள் நடக்கும் விதம், அசையும் தோரணை என அனைத்திலும் சிறப்பாக இருக்க முயலுங்கள். இது உங்களை பிறரிடம் சிறப்பாக வெளிக்காட்ட உதவும்.
உங்களுக்கானது வேண்டுமென்றால் பிறரை சிறப்பாக உணரச்செய்யுங்கள்: நீங்கள் பிறருடைய தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றால் மட்டுமே பிறரிடம் இருந்து உங்களுக்கான உதவிகள் கிடைக்கும். எனவே எல்லா தருணங்களிலும் நீங்கள் பிறருக்கு உதவும் தகுதியுடன் இருக்கிறீர்கள் அல்லது ஏதோ ஒரு விதத்தில் பிறருக்கு நீங்கள் பயன்படுவீர்கள் என்பதை புரிய வையுங்கள். அப்படி நீங்கள் புரிய வைத்தால் மட்டுமே உங்களுக்கான உதவியை செய்ய அவர்கள் முற்படுவார்கள். உங்களால் ஒரு நபருக்கு எந்த பலனும் இல்லை என்றால் யாரும் உங்களுக்கு உதவ மாட்டார்கள். எனவே உங்களை பிறருக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது தெரியப்படுத்துங்கள்.
இந்த நான்கு சைக்காலஜி ரகசியங்களும் உங்களது வாழ்க்கையை எளிதாக பார்க்க வைக்கும். இதை நீங்கள் கடைப்பிடிக்கும் போது வாழ்க்கை ஒன்றும் கடினமானது இல்லை என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும்.