

நாம் எந்த ஊரில் வாழ்ந்தாலும், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், மற்றவர்கள் நம்மை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே நமது நிம்மதி அமைகிறது. பணம் இருந்தால் மரியாதை தானாக வந்துவிடும் என்று பலரும் தப்புக் கணக்கு போடுகிறார்கள். ஆனால், உண்மையான மரியாதை என்பது கடையில் காசு கொடுத்து வாங்கும் பொருள் கிடையாது. அது நம்முடைய குணத்தாலும், செயல்களாலும் மற்றவர்கள் மனதில் தானாக உருவாக வேண்டிய ஒன்று.
சிலரை பார்த்தால் எந்தக் காரணமும் இல்லாமல் நமக்கு ஒரு மரியாதை தோன்றும் அல்லவா. அப்படிப்பட்ட ஒரு மரியாதையான இடத்தைப் பிடிக்க பெரிய அளவில் எந்த மாயாஜாலமும் செய்யத் தேவையில்லை.
உங்கள் அன்றாட வாழ்க்கையில் மிகச் சாதாரணமான ஐந்து பழக்கங்களை மாற்றிக்கொண்டாலே போதும், சமூகத்தில் உங்களுக்கான அந்தஸ்து தானாக உயரும். அந்த ஐந்து விஷயங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
1. சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது!
ஒருவர் மீது நமக்கு நம்பிக்கை வர மிக முக்கியக் காரணம் அவர்களின் வார்த்தைதான். என்ன நடந்தாலும் இவர் சொன்னதைச் செய்வார் என்ற பெயர் உங்களுக்கு வந்துவிட்டால், உங்களை அறியாமலேயே மக்கள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். உங்களால் ஒரு காரியத்தைச் செய்ய முடியும் என்றால் மட்டும் வாக்குக் கொடுங்கள். முடியாத விஷயங்களை ஆரம்பத்திலேயே நாசூக்காக மறுத்துவிடுவது உங்களின் மதிப்பை எப்போதுமே குறைய விடாது.
2. மற்றவர்கள் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்பது!
இன்றைய வேகமான உலகில் எல்லோருக்கும் தாங்கள் பேசுவதை மட்டுமே மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஒருவர் உங்களிடம் பேச வரும்போது, மொபைலை நோண்டிக்கொண்டோ அல்லது அவர்கள் பேச்சை பாதியில் வெட்டிவிட்டோ உங்கள் கருத்தைத் திணிக்காதீர்கள். அவர்கள் சொல்வதை முழுமையாகக் காதுகொடுத்துக் கேட்பவர்களுக்குச் சமூகத்தில் எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு. நாம் பிறருக்குக் கொடுக்கும் முக்கியத்துவமே மரியாதையாகத் திரும்பக் கிடைக்கும்.
3. கோபத்தைக் கட்டுப்படுத்துவது!
எடுத்ததற்கெல்லாம் கோபப்படுபவர்களைப் பார்த்தால் மக்கள் பயப்படுவார்களே தவிர ஒருபோதும் மனதார மதிக்க மாட்டார்கள். ஒரு மோசமான சூழ்நிலை வரும்போது, யார் தங்களை அமைதியாக வைத்துக்கொண்டு நிதானமாகச் செயல்படுகிறார்களோ அவர்கள் தான் உண்மையான தலைவர்கள் ஆவர். அமைதியாக இருந்து பாருங்கள், உங்கள் மௌனமே மற்றவர்களுக்கு உங்களின் ஆளுமையைப் புரிய வைக்கும்.
4. எதிர்பார்ப்பில்லாத உதவிகள்!
நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளைப் பிறருக்குச் செய்வது மனித குணம். ஆனால், அந்த உதவியைச் செய்துவிட்டு எனக்கு நீ என்ன செய்வாய் என்று எதிர்பார்ப்பதும், செய்த உதவியை ஊரெல்லாம் தம்பட்டம் அடிப்பதும் உங்களின் ஒட்டுமொத்த மரியாதையையும் கெடுத்துவிடும். நீங்கள் செய்யும் உதவி யாருக்கும் தெரியாமல் அமைதியாக இருந்தால், அது உங்களை ஒரு மிக உயர்ந்த மனிதராகச் சமூகத்தில் நிலைநிறுத்தும்.
5. உங்களை நீங்களே அப்டேட் செய்வது!
காலம் மாற மாற நாமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். எனக்கு எல்லாமே தெரியும் என்ற கர்வம் இல்லாமல், உங்கள் துறை சார்ந்த அறிவையும் பொது அறிவையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளுங்கள். ஒரு கூட்டத்தில் ஆழமான அறிவோடு நீங்கள் பேசும்போது, அனைவரின் கவனமும் உங்கள் பக்கம் திரும்பும். அறிவும் திறமையும் உள்ளவர்களை இந்த சமூகம் எப்போதுமே ஒரு படி மேலாகத் தான் பார்க்கும்.
இந்த ஐந்து விஷயங்களும் ஒரே நாளில் நடந்துவிடாது. ஆனால், இதைத் தொடர்ந்து உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தொடங்கினால், காலப்போக்கில் மக்கள் உங்களைப் பார்க்கும் விதம் அடியோடு மாறுவதை நீங்களே கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here