மரியாதை என்பது வாழ்க்கையில் விலைமதிப்பற்ற விஷயங்களில் ஒன்றாகும். நாம் அனைவருமே பிறரால் மதிக்கப்பட விரும்புகிறோம். இது மனிதத் தொடர்புகளின் அடிப்படையில் உருவாகிறது. இது தானாக ஒருவருக்கு வந்துவிடாது. பிறர் உங்களை மதிக்க, அத்தகைய நற்பெயர்களை நீங்கள் சம்பாதிக்க வேண்டும். மிகவும் மரியாதைக்குரிய நபர்களுக்கு இது நன்கு தெரியும். எனவே மற்றவர் உங்களை மதிக்க, எத்தகைய பண்புகளை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
1. குறை கூறாதீர்கள்: ஒரு விஷயத்தைப் பற்றி புகார் செய்வது எளிது. ஆனால் அந்த விஷயத்தை நீங்களாகவே மாற்ற முயற்சிப்பது மிகவும் கடினம். பிறரை குறை கூறுபவர்கள், குறைந்த மனோதிடம் கொண்டவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். உண்மையிலேயே தன் வாழ்வில் சில விஷயங்களை மாற்ற நினைப்பவர்கள் ஒருபோதும் பிறரை குறைகூற மாட்டார்கள். யாரையும் குறை கூறாமல் தனது வேலையை சிறப்பாக செய்யும் நபர்களின் மீது அனைவருக்கும் மரியாதை உண்டாகும்.
2. எப்போதும் தன்னம்பிக்கை கொண்டவராக இருங்கள்: தன்னம்பிக்கையுடன் இருப்பது என்பது உங்களை பிறர் முன்னே மிகச் சிறந்தவராக வெளிப்படுத்தும். உங்களுடைய தன்னம்பிக்கையை சுமந்து கொண்டு, எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பது முக்கியம். நீங்கள் உங்களை மதித்து நடந்தாலே, பிறர் உங்களை தானாக மதிப்பார்கள்.
3. உங்களது தவறுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்: சில நபர்கள் தான் என்னதான் தவறு செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல், தனது தோல்விக்கு பிற விஷயங்களையே காரணமாக சொல்வார்கள். ஆனால் தவறை ஏற்றுக் கொள்பவர்களால் மட்டுமே, அதிலிருந்து மீண்டு வந்து சிறப்பான விஷயங்களை செய்ய முடியும். தன் தவறை ஏற்றுக் கொள்ளும் நபர்களை எப்போதுமே மக்கள் மரியாதைக்குரிய நபராகப் பார்ப்பார்கள்.
4. உங்கள் வார்த்தைக்கு உண்மையாக இருங்கள்: எப்படி உங்களுடைய முதலாளி வேலைக்கு ஒரு மணி நேரம் முன்னாடி வந்துவிடு எனக் கூறினால், எதைப் பற்றியும் சிந்திக்காமல் அதை செய்து முடிக்கிறீர்களோ, அதேபோல நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற முடிவெடுத்த விஷயங்களிலும் சரியாக இருங்கள். அதேபோல பிறருக்கு நீங்கள் கொடுக்கும் நம்பிக்கையையும் இறுதிவரை காப்பாற்றுங்கள்.
5. வெளிப்படையாக இருங்கள்: உள்ளே ஒரு மாதிரியும் வெளியே ஒரு மாதிரியும் நடந்து கொள்ளும் இரட்டை வேஷம் வேண்டாம். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை தைரியமாக பேசுங்கள். எப்போதும் எதார்த்தமாக இருப்பவர்களை மக்களுக்கு என்றுமே பிடிக்கும்.
இந்த 5 விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டு, அந்த பண்புகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள முயற்சித்தாலே, உங்கள் மீது பிறருக்கு மரியாதை தானாக ஏற்படும். இந்தப் பண்புகள் நிச்சயம் உங்களை சிறப்பான நபராக உணர வைக்கும். பிறரிடமிருந்து மரியாதையையும் பெற்றுத் தரும்.