

எவர் தமக்கு மட்டுமே சமைத்துக் கொள்கிறார்களோ, அவர்கள் பாவத்தை உண்கிறார்கள்.
-கீதை
படையலிட்டு பூஜை செய்பவனைக் காட்டிலும், நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்த கொள்பவன் ஆண்டவனுக்கு அதிகப் பிரியமானவன்.
-யூதர்கள் வேதம்
எல்லா மனிதர்களையும் சமமாகக் கருதுபவன் எவனோ, அவனே பக்தன் என அழைக்கப்பட தகுந்தவன்.
-சீக்கிய வேதம்
பிரார்த்தனை துன்பங்களை விழுங்கிவிடும். தர்மம் நோயை விழுங்கிவிடும். பொய்- உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை விழுங்கிவிடும். புறம் இறை வழிபாட்டை விழுங்கிவிடும். கவலை மனிதனின் வயதை விழுங்கிவிடும்.
தனது சொந்தக் குடும்பத்தாருக்கு மிகவும் நல்லவனாக நடப்பவனே-இறைவன் முன்னிலையிலும், இறைவனுடைய படைப்புகளின் முன்னிலையிலும்-உங்களில் மேலானவனாவான்.
-நபிகள் நாயகம்
தாய் நாட்டை நேசிப்பது இயல்பு. மனித குலம் முழுவதையும் நேசிப்பது சிறப்பு.
-பஹாயி மதக் கொள்கை
பிரபஞ்சம் வேறு, நீ வேறு அல்ல. உள்ளது ஒன்றே.
-அத்வைதம்
எந்த உயிரையும் நான் கொல்லமாட்டேன், பிறரைக் கொண்டு எந்த உயிரையும் கொல்லமாட்டேன். எந்த உயிரும் கொல்லப்படுவதற்கு உடன்படவும் மாட்டேன்.
உண்மையாக நடந்து வரும் மனிதனுக்கு எந்த உபதேசமும் வேண்டியதில்லை.
-மகாவீரர்
"எனக்கு தீங்கு செய்யும் சகோதரனை எத்தனை முறை மன்னிக்கச் சொல்கிறீர்கள்? ஏழு முறையா? " ஏழு முறை அல்ல, எழுபது முறை உனக்கு அவன் தீங்கு இழைத்தாலும், நீ அவனை மன்னிக்கவேண்டும் "
-ஏசுநாதர்
பேசாமல் உட்கார்ந்து இருப்பவர்களையும் திட்டுகிறார்கள், அதிகம் பேசுபவர் களையும் திட்டுகிறார்கள். திட்டப்படாத மனிதனே உலகத்தில் இல்லை! எப்போதுமே திட்டப்படுபவனாகவோ, போற்றப்படுகிறவனாகவோ ஒரு மனிதன் இருந்ததும் இல்லை; இருக்கவுமில்லை; இருக்கப்போவதுமில்லை.
சுகத்திலிருந்துதான் வேதனை பிறக்கிறது. சுகத்திலிருந்துதான் பயம் பிறக்கிறது. சுகத்திலிருந்து விடுபட்டவன் வேதனையையோ, பயத்தையோ அறியமாட்டான்.
முட்டாளுடன் கூடி வாழ்வதை விடத் தனியாக வாழ்வதே மேல். ஆயிரம் வீண் வார்த்தைகளை விட கேட்பவர்களுக்கு இதமளிக்கும் ஒரு நல்ல வார்த்தை நல்லது. எவனும் மற்றொருவனை புனிதமாகக் முடியாது.
கோபத்தை மனிதன் அன்பாலும், தீமையை நன்மையாலும், கஞ்சத்தனத்தைத் தாராளதன்மையாலும், பொய்யை உண்மையாலும் வெல்க.
-புத்தர் அருள் மொழி
நீசர்கள் இடையூறு வந்து விடுமோ என்ற பயத்தினால் ஒரு காரியத்தையும் ஆரம்பிப்பதில்லை. மத்தியஸ்தர்கள் , காரியத்தை துணிந்து ஆரம்பித்து விட்டு இடையூறு வந்தபோது நிறுத்திவிடுவர். உத்தமர்களோ என்ன நேர்ந்தாலும் சரி ஆரம்பித்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார்கள்.
சரீரத்தைப் போஷிப்பதில் தாயாருக்கு நிகரும். தேகத்தை சந்தோஷப் படுத்துவதில் மனைவிக்கு நிகரும், உடலை அலங்கரிப்பதில் கல்விக்கு நிகரும். சரீரத்தை இளைக்கச் செய்வதில் கவலைக்கு நிகரும் வேறில்லை.
வயதான தாய் தந்தையையும், நற்குணமுடைய மனைவியையும், குழந்தைகளையும் செய்யக்தகாத காரியத்தைச் செய்தாகிலும் காப்பாற்ற வேண்டியது மிக மிக அவசியம்.
-மனு நீதி சாஸ்திரம்
மனமானது உலக இச்சைகளில் விருப்பம் கொண்டிருக்கும் போது உடலை வருத்தும் தவங்களையோ, தியாகத்தையும், யோகத்தையோ செய்வது வீணாகிவிடும். அதைப் போலவே விரதங்கள் இருந்து உடலை வருத்திக்கொள்வதும் உண்மையான தவம் ஆகி விடாது. மனித உள்ளத்தில் தீமையான வேட்கைகள் நிலைத்திருக்கும் வரையில் எத்தகைய பக்தி மார்க்கமும் பயனில்லாமல் போய்விடும்.
- மகான் ஏசுநாதர்.
நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், நல்ல நண்பன் இதயத்தின் நடுவில் தான் இருப்பான். பொய்யான நண்பன் வீட்டின் முற்றத்தில் இருந்தாலும் ஏழு கடல்களுக்கு அப்பால் இருப்பது போலத்தான்.
-கபீர்தாசர்.
வெவ்வேறு மதங்கள் மற்றும் மகான்களின் போதனைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை அறிந்து, சாதி-மதக் கடந்து தர்மங்கள் மனிதநேயத்துடன் வாழும் தெளிவு கிடைக்கும்.