பந்தா எதுக்குடா… கொஞ்சம் அடக்குடா.. நேத்துவர நாயர் கடை பன்னு தானே!
நம் சமூகத்தில் பணம், செல்வத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பணக்காரராக இருப்பது ஒருவித அந்தஸ்தாகக் கருதப்படுகிறது. ஆனால், அனைவரும் தங்கள் உண்மையான நிதி நிலையை வெளிப்படுத்துவதில்லை. சிலர் தங்கள் சமூகநிலையை உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற ஆசையில், தங்கள் நிதி நிலை பற்றி பொய் சொல்கின்றனர். இதனால் நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் தொழில் போன்ற விஷயங்கள் பாதிக்கப்படலாம். இந்தப் பதிவில் ஒருவர் பொய்யாக பணக்காரர் போல நடிக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
பொய்யாக பணக்காரர் போல நடிப்பவர்களின் 7 அறிகுறிகள்!
அவர்கள் வாழ்க்கை முறை மிகவும் ஆடம்பரமாக இருக்கும். ஆனால், அவர்களின் வருமானம் அந்த வாழ்க்கையை பராமரிக்கும் அளவுக்கு போதுமானதாக இருக்காது. அவர்கள் விலை உயர்ந்த கார்கள், வீடுகள், பிராண்டட் பொருட்களை வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால், அவர்களிடம் அதற்கு ஏற்ற வருமான ஆதாரங்கள் இருக்காது.
தங்கள் வாழ்க்கை முறையை பராமரிக்க அவர்கள் பல கடன் சிக்கல்களில் மாட்டிக்கொண்டிருப்பார்கள். கிரெடிட் கார்டு கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் வீட்டுக் கடன் போன்றவை அதிகமாக இருக்கும்.
அவர்களது நிதி நிலைமையைப் பற்றி கேள்விகேட்டால் தவிர்க்கிறார்கள் அல்லது மழுப்பும்படியான பதில்களை அளிக்கிறார்கள் என்றால், அவர்கள் பணக்கார வேஷம் போடுகிறார்கள் என அர்த்தம்.
உண்மையான பணக்காரர்கள் தங்களின் செல்வத்தை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்ய மாட்டார்கள். பொய்யாக நடிப்பவர்களே பிறரிடம் தங்கள் செல்வத்தை ஒப்பிட்டுப் பார்த்து பெருமை பேசுவார்கள்.
தங்களது செல்வத்தைப் பற்றி வெளிப்படுத்தும்போது அவர்களிடம் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். பிறர் தன்னை சிறப்பாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே பொய்யாக பல விஷயங்களைச் சொல்வார்கள்.
எல்லா விஷயங்களையும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவார்கள். ஆனால், உண்மையில் அவர்களது வாழ்க்கை சமூக ஊடகங்களில் காட்டுவது போல இருக்காது.
அதிகமாக பொய் சொல்வதால் அவர்களின் நெருங்கிய உறவுகளில் பல பிரச்சனைகள் ஏற்படலாம். இத்தகைய நபர்கள் மீது யாருக்குமே நம்பிக்கை இருக்காது. பெரும்பாலும் மனக்கசப்பு மட்டுமே மிஞ்சியிருக்கும்.
ஒருவர் பொய்யாக பணக்காரன் போல நடிக்கிறார் என்பதை அறிவது எளிதானது அல்ல. ஆனால், மேற்கண்ட அறிகுறிகளை கவனிப்பதன் மூலம், நாம் சில அனுமானங்களை செய்ய முடியும். பிறரிடம் பொய்யாக பணக்காரன் போல நடிப்பது தற்காலிகமான மகிழ்ச்சியை மட்டுமே அளிக்கும். உண்மையான மகிழ்ச்சி மற்றும் மன நிறைவு என்பது, பணம், பொருள், செல்வத்திலிருந்து வருவதில்லை. அது நம்முடைய உறவுகள், ஆரோக்கியம் மற்றும் நம்மை நாமே திருப்திப்படுத்துவதில் இருந்து வருகிறது. இது பொய்யாக பணக்கார வேஷம் போடுபவர்களுக்குப் புரிவதில்லை.