
எந்த ஒரு மனிதனுக்கும் சுயமரியாதை என்பது மிகவும் அவசியம். கண்ணியமான மனிதராக இந்த சமூகத்தில் திகழ வேண்டும் என்று தான் எல்லா மனிதர்களும் நினைப்பார்கள். ஒருவர் தன்னுடைய கண்ணியத்தையும் சுயமரியாதையையும் அதிகரித்துக்கொள்ள உதவும் 7 முக்கியக் குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. நம்பிக்கையை புரிந்து கொள்ளுதல்;
தனக்கு எந்த விஷயத்தில் நம்பிக்கை இருக்கிறது என்பதைப் பற்றி ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். நல்ல விஷயங்கள், நேர்மையான நடத்தை, சிறந்த கொள்கை கோட்பாடுகள் போன்றவற்றில் நம்பிக்கை உள்ள ஒருவர் தனது சுயமரியாதையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
2. சுய கவனிப்பு;
பிறரை உற்றுக் கவனிப்பதை விட தன்னை ஒருவர் உற்றுக் கவனிப்பது மிக முக்கியம். தனது உடல், மனம் மற்றும் உணர்ச்சி போன்றவற்றை கவனித்து அவற்றை சீர்படுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு உடற்பயிற்சி செய்வது, போதுமான தூக்கம், ஓய்வெடுப்பது போன்றவை உடலுக்கு தரும் சிறந்த கவனிப்பாகும். மனதும் உணர்ச்சிகளும் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதையும் கூர்ந்து கவனித்து சரி செய்ய வேண்டும். இவையே அவரது நல் வாழ்விற்கு அவரை இட்டுச்செல்லும்.
3. ஆரோக்கியமான எல்லைகள்;
தனது சுயமரியாதையை காத்துக்கொள்ள நினைக்கும் ஒரு மனிதர் எல்லைகளை நிர்ணயிப்பது மிக முக்கியம். பிறர் அவற்றைத் தாண்டாமல் இருக்குமாறு பாத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படுகின்ற இடங்களில் வேண்டாம் என்று சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். உங்களது வரம்புகளை மற்றவர்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும். இதனால் அவர்கள் உங்களை எப்படி நடத்துவது என்று கற்றுக்கொள்வார்கள். இதனால் மனக்கசப்பு அல்லது அவமானப்படுதல் போன்றவை தவிர்க்கப்படும்.
4. உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருத்தல்;
தனது பலம், பலவீனங்கள் போன்றவற்றை முறையாக எடை போட்டு தனக்குத்தானே ஒருவர் நேர்மையாக இருக்கவேண்டும். தனது உணர்வுகளையும் எண்ணங்களையும் தீர்ப்பின்றி அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த நேர்மை உணர்வு தன்னைப் பற்றிய ஆழமான புரிதலை ஒரு மனிதனுக்கு வளர்க்கிறது. இது சுயமரியாதைக்காண அடித்தளத்தையும் உருவாக்குகிறது.
5. சுய மன்னிப்பு;
இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுமே தவறு செய்கிறார்கள். ஆனால் அந்தச் செய்த தவறுகளை நினைத்து வருந்திக் கொண்டிருந்தால் குற்ற உணர்வு ஆட்டுவிக்கும். சுயமரியாதையை குறைக்கும். தவறுகளை தைரியமாக ஒப்புக்கொண்டு அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறிச் செல்வதன் மூலம் ஒருவர் தனக்குத்தானே சுயமன்னிப்பை அளிக்க முடியும். தன்னை சுயமாக மன்னிக்கும் ஒரு மனிதன் சுயமரியாதையை மேம்படுத்த முடியும். இதனால் தனிப்பட்ட வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.
6. எதிர்மறை சுய பேச்சுக்கு தடா;
தனக்குத்தானே பேசிக்கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை சுய பேச்சுக்கள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். நேர்மறையான உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். தன்னுடைய சுய விமர்சனம் மற்றும் சுயபேச்சில் தனது சாதனைகள் மற்றும் நல்ல குணங்களைப் பற்றிய மதிப்பீடுகள் இருக்க வேண்டும்.
சாதனைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அவற்றைக் கொண்டாட வேண்டும். தனது தனித்துவமான குணத்தை பாராட்ட வேண்டும். தனது மதிப்பை தானே ஒப்புக் கொண்டால் தான் பிறரிடம் மரியாதையும் மதிப்பும் கிடைக்கும்.
7. நேரம் ஒதுக்குதல்;
தன்னுடைய சுயவளர்ச்சிக்காக நேரத்தை முதலீடு செய்வது மிகவும் முக்கியம். புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு அவற்றை திறம்பட செயல்படுத்த வேண்டும். சவாலான தனிப்பட்ட இலக்குகளை அமைத்துக்கொண்டு அதை நோக்கி பயணப்பட வேண்டும்.