
மனித வாழ்கையின் அடிப்படை கூடி வாழ்தலே. பிறர் உதவியின்றி நம்மால் வாழவே முடியாது. சமுக வாழ்க்கைக்கு மட்டுமல்ல. தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இது பொருந்தும்.
ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை கூட்டுக்குடும்ப வாழ்க்கை வெற்றிகரமாக இருந்தது. வாழ்வில் ஒரு பிரச்னை என்றால் ஓடி வந்து தோள் கொடுக்க நாலாபக்கமும் இருந்தும் உறவுகள் வரும். நமக்காக நாலுபேர் இருக்கிறார்கள் எனும் எண்ணமே மனதிற்கு வலிமை சேர்க்கும். ஆனால் தற்காலத்தில் நாம் வாழும் தனித்தீவுக் குடும்ப வாழ்வு முறையில் நம் பிரச்னைகளை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
தற்காலத்தில் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு வயதான காலத்தில் தனிமையில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு, பேசி மகிழ ஆட்கள் யாருமின்றி, பலர் வாழ்ந்து விரக்தியில் தற்கொலை வரை செல்லுவதை அவ்வப்போது செய்தித்தாள்களில் படித்து வேதனை அடைகிறோம். இத்தகையவர்களுக்கு ஒரு கட்டத்தில் தனிமையாகிவிடும் சூழலும் ஏற்படுகிறது.
பெற்ற பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் கூட ஸ்கைப்பிலேயே கொஞ்சி மகிழும் வாழ்க்கை என்ன வாழ்க்கை? மகனோ மகளோ கைநிறைய சம்பாதிக்கவேண்டும் என்பதற்காக பாடுபட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் வயதான பின்னரே அது தரும் நிரந்தர வலிகள் புரிய வரும். பெற்ற பிள்ளைகள் ஆளாளுக்கு ஒரு நாட்டில் வசிப்பதையும் அவர்கள் கைநிறைய சம்பாதிப்பதையும் உற்றார் உறவினர்களிடம் பெருமையாகச் சொல்லும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் நாம் பெற்ற செல்லங்கள் நம்முடன் இல்லையே என்ற ஏக்கம் நம்மை அணு அணுவாகக் கொல்லும். இதனால் வேதனைதான் மிஞ்சும்.
பணம், ஆடம்பர வாழ்க்கை இந்த இரண்டும் மட்டுமே வாழ்க்கையின் அச்சாணிகள் அல்ல என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணமிது. அன்பும் பாசமுமே வாழ்க்கை வண்டியின் அச்சாணிகள் என்பதை உணரவேண்டும். இதுவே நம் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்ச்சியானதாக மாற்றும். நமது வாழ்க்கைப் பயணம் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியானதாக அமையும்.
கூடுமானவரை பெற்றோர் மனைவி குழந்தைகளிடம் அன்பு பாராட்டி வாழுங்கள். உற்றார் உறவினர்களிடம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உரையாடி மகிழுங்கள். கிடைப்பதைக்கொண்டு கூடி வாழ்ந்து சிக்கனமாக செலவழித்து மெல்ல மெல்ல வாழ்க்கைத் தரத்தை உயர்த்துங்கள். ஏராளமான சொத்துக்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு பேசி மகிழ யாருமில்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை.
நம் நாடு நல்ல நாடு. நம் மக்கள் நல்ல மக்கள். நம் வாழ்க்கை நல்ல வாழ்க்கை. இந்த மந்திரச்சொற்கள் உங்கள் மனதில் நிரந்தரமாகப் பதியட்டும். உறவும் நட்பும் சூழ ஒன்றாய் கூடி அன்பாய் வாழ்வோம்.