இந்த உலகில் பல வகையான மக்கள் உண்டு, எதிர்மறை எண்ணம் கொண்ட மக்களோடு பழகும்போது நமது சிந்தனைகள் அவர்களை பாதிக்கிறது. இந்தப் பதிவில் அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று பார்ப்போம்.
1. நேர்மறை உரையாடல்களை தேர்ந்தெடுக்கவும்;
எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் உங்களது நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்குவதை ஊக்கப்படுத்தக்கூடாது. மனதிற்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் தரக்கூடிய விஷயங்களைப் பற்றி பேசுவது மிகவும் அவசியம். அவர்கள் தொடர்ந்து எதிர்மறையாகப் பேசும்போது மிகவும் வலிமையாக நேர்மறை பேச்சுகளில் ஈடுபடவேண்டும். ஒரு கட்டத்தில் சலிப்படைந்து அவர்கள் விலகி செல்வார்கள்.
2. நேர்மறை உறுதிமொழி;
‘’இன்றைய நாள் மிக நல்ல நாளாக இருக்கப்போகிறது. நான் இன்று முழுவதும் உற்சாகமாக இருப்பேன்; செயல்படுவேன்’’ என்று தனக்குத்தானே நேர்மறையாக சொல்லிக் கொள்வது முக்கியம். அதை ஒரு உறுதிமொழி போல எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிர்மறை நபர்களிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும்.
3. சிந்தனைகளை கண்காணியுங்கள்;
எதிர்மறை எண்ணம் கொண்ட மக்கள் மிக சுலபமாக அவர்களுடைய எதிர்மறை பேச்சுக்கள் மற்றும் சிந்தனைகளை பிறர் மேல் திணிக்கக்கூடும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் தனக்கும் எதிர்மறை சிந்தனைகள் எழுந்தால், அவற்றை உடனடியாக மாற்றி விட்டு அதற்கு பதிலாக நேர்மறை எண்ணங்களை ஒருவர சிந்திக்க பழக வேண்டும். பயிற்சி செய்தால் இது சுலபமாக கைகூடும்.
4. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த பழக வேண்டும்;
யாராவது தன்னிடம் கோபமாகவோ அல்லது மனதை காயப்படுத்தும் விதமாகவோ பேசினால் உடனே அதற்கு ரியாக்ட் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும். தன்னுடைய உணர்வுகளை தானே கட்டுப்படுத்த பழக வேண்டும். பக்குவத்துடன் அவர்களுக்கு பதில் தரலாம். இல்லையெனில் சற்றே மௌனம் காத்து, பின்னர் பதிலளிக்கலாம்.
5. நேர்மறை சூழ்நிலை;
எப்போதும் நேர்மறை சிந்தனை உள்ள மக்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும். சூழ்நிலையும் நேர்மறையாகவே இருக்க வேண்டும். இது எப்போதும் ஒருவருக்கு மன மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் அளிக்கும்.
6. எதிர்மறையை தவிருங்கள்;
எதிர்மறை எண்ணம் கொண்ட நபர்களிடமிருந்து சற்றே தள்ளி இருங்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் பணியிடத்தில் உள்ளவர்கள் என எல்லா சூழ்நிலைக்கும் இது பொருந்தும்.
7. நல்லதையே பாருங்கள்;
பிறரிடம் இருக்கும் நல்ல குணங்களை பாராட்ட தெரிந்த அதே சமயத்தில் அவரிடம் இருக்கும் தீய குணங்களை வெறுக்காமல், குறைகளை பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும். இவர் இப்படிதான் என உடனடியாக தீர்ப்பு வழங்கக் கூடாது.
8. மறுத்து விடுங்கள்;
வேண்டுமென்றே வந்து எதிர்மறை எண்ணங்களையும் செயல்களையும் நம் மீது திணிக்கும் நபர்களிடம் உறுதியான குரலில், ‘இது போன்ற செயல்கள் என்னிடம் வேண்டாம்’ என்று மறுத்து விடுங்கள். எதிர்மறை எண்ணம் கொண்ட மக்களை எப்போதும் பொறுத்துக் கொண்டு, அவர்கள் கையில் பொம்மையாக இருக்க வேண்டிய அவசியம் எப்போதும் இல்லை.