வாழ்வில் பல விஷயங்களை நம்மால் பணத்தால் வாங்கவே முடியாது. அந்த விஷயங்களை நாம் சக மனிதர்களிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதிலிருந்து விதிமுறைகள் பிறக்கவில்லை. இப்படியெல்லாம் இருக்க கூடாது என்பதிலிருந்துதான் சில விதிமுறைகள் பிறந்தன.
உதாரணத்திற்கு மரியாதையில்லாமல் நடந்துக்கொள்ளக் கூடாது என்பதிலிருந்து பிறந்தவைதான் மற்றவர்களிடம் பேசும்போது கண்களைப் பார்த்து பேச வேண்டும் என்பதும், தவறுதலான வார்த்தைகளைப் பேசிவிடக் கூடாது என்பதும். இதனைத்தான் நாம் விதிமுறைகள் என்று கூறுகிறோம். இதுபோன்ற விஷயங்களை சக மனிதர்களிடமிருந்து அறிந்து, விதிகளைப் பின்பற்ற வேண்டும். அந்தவகையில் பணத்தால் வாங்க முடியாத விஷயங்கள் என்னவெல்லாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.
1. ஒழுக்கம்: இந்த ஒழுக்கத்தை நீங்கள் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும், பலருக்கு கற்றுக்கொடுக்கவும் வேண்டும். எப்படி சாப்பிட வேண்டும் என்பதிலிருந்து, பொது இடங்களில் மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதுவரை, இந்த ஒழுக்கம் அடங்கியிருக்கும். நண்பராக இருந்தாலும் மற்றவர்கள் முன்பு அவரை மரியாதையாக நடத்துவதும் ஒழுக்கம்தான்.
2. மரியாதை: ஒருவர் உங்கள் மேல் மரியாதையாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற ஒன்று உள்ளது. மரியாதையை கேட்டு வாங்கக் கூடாது, உங்களின் நடவடிக்கைகளின் மூலம் எதிரே உள்ளவர்கள் தானாக உங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
3. குணம்: நல்ல குணங்களை பணம் மூலம் பெற முடியாது. நல்ல குணம் கொண்ட ஒருவன் அதற்கேற்ற சுற்றுசூழலில் வாழ்ந்தவனாக இருப்பான். குணங்களைப் பற்றி சொல்லித்தரும் குடும்பம், பள்ளி, சமுதாயம் இவையனைத்துமே ஒருவனை நல்ல குணம் கொண்ட ஒருவனாக மாற்றுகிறது.
4. நம்பிக்கை: 'என் மீது நம்பிக்கை வை' என்று கூறியவுடனே உங்கள் மீது யாருக்கும் நம்பிக்கை வந்துவிடாது. உங்களின் செயலே அந்த நம்பிக்கையை வர செய்யும். அந்த செயலே நம்பிக்கையை வலுபெறவும் செய்யும்.
5. பொருமை: தியானம் மூலமும், மனதை ஒருநிலை படுத்துவதன் மூலமும் தான் இந்த பொருமை உங்களுக்கு வரும். பொருமையை பெற்றுவிட்டாலே கோபம் தானாக பின்தங்கி விடும்.
6. அன்பு: இந்த அன்பும், நம்பிக்கையும், நட்பும், பாசமும் ஒன்றுக்கொன்று சம்பதப்பட்டவை. ஒருவனால் இந்த அன்பை பணத்தால் வாங்க முடியாது, வாங்கினால் அது நிரந்தரமாகவும் நம்பிக்கையானதாகவும் இருக்காது.
7. நேர்மை: உண்மைக்கும் பணம் தேவையில்லை, உண்மையாக இருப்பவனுக்கும் பணம் தேவையில்லை. ஏனெனில் எவ்வளவு பணம் கொடுத்து நேர்மை வாங்க நினைத்தாலும் அந்த மனதுக்குத் தெரியும் எது உண்மை என்று. உண்மைக்கு சாட்சிகள், பாராட்டுகள் என எதுவும் தேவையில்லை, உண்மை மட்டுமே போதும். நேர்மைக்கு லஞ்சம் கொடுக்க முடியாது.
8. நடத்தை: எந்த மனிதர்களிடம் எந்த நேரத்தில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டுமென்பது உண்மையில் ஒரு கலை. அந்த கலையில் தேர்ச்சி பெற்றவன் எந்த விஷயங்களில் வேண்டுமென்றாலும் தேர்ச்சி பெற்றுவிடுவான்.
இவைதான் பணத்தால் வாங்க முடியாத விஷயங்கள். அதேபோல் ஏழை, பணக்காரன் என்ற எந்த பாரப்பட்சமும் இல்லாமல் அவர்களை வழிநடத்தும் விஷயங்களும் இவைத்தான்.