
வெற்றி என்பது ஒரு விபத்தல்ல, திடீரென யாருக்கும் அது கிடைத்துவிடாது. இடைவிடாத முயற்சி, தொடர்ந்த தளராத உழைப்பு மற்றும் உள்ளார்ந்த ஈடுபாடு இவை அனைத்தும் வெற்றிக்கு மிக அவசியம். வாழ்வில் வெற்றி பெற விரும்பும் மனிதர்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய காலை நேர பழக்க வழக்கங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. மௌனமாக சில நிமிடங்கள்;
நல்ல ஆழ்ந்த இரவு தூக்கத்திற்குப் பிறகு விழித்தெழுந்ததும் மனமும் உடலும் புத்துணர்ச்சியோடு இருக்கும். அந்த நேரத்தில் பத்திலிருந்து 20 நிமிடங்கள் மௌனமாக எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக அன்றைய நாளை திட்டமிட வேண்டும். அமைதியாக சிந்திக்கும்போது அதில் தெளிவு கிடைக்கும்.
2. நன்றியுணர்வு;
அன்றைய நாளை தொடங்கும்போது நன்றி உணர்வோடு தொடங்குதல் நல்லது. நல்ல விதமாக கண்விழித்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லலாம். காலை நேர கமகமக்கும் காபிக்கும், அதை தயாரித்தவருக்கும் நன்றி சொல்லலாம் நேற்றைய நாளில் யாரெல்லாம் உதவி செய்தார்கள் நேற்றைய பொழுதை அழகாக்கினார்கள் என்று சிந்தித்து அவர்களுக்கு மனதார நன்றி சொல்லலாம். நன்றியுணர்வு பயிற்சி மனதை ஆரோக்கியமாக வைப்பதோடு இலக்குகளை நோக்கி கடுமையாக உழைக்கவும் ஒரு உந்து சக்தியாக அமைகிறது.
3. உடற்பயிற்சி;
உடலையும் மனதையும் உறுதியாக வைக்கும் உடற்பயிற்சிக்காக 20 நிமிடங்கள் ஒதுக்கவேண்டும். அன்றைய நாள் முழுவதும் செய்ய வேண்டிய வேலைகளுக்கான உற்சாகத்தை தரும். உடல் எண்டார்ஃபின்கள் என்கிற ஹார்மோனை வெளியிட்டு, நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
4. கவனத்துடன் உண்ணுதல்;
செய்யும் எல்லாவற்றிலும் மிகுந்த கவனம் செலுத்தி, அன்றைய தருணத்தில் வாழ்தல் மிக முக்கியமானது. உண்ணுவதைக் கூட கவனமாக பிரார்த்தனைபோல செய்வதால், பிற வேலைகளில் மனமொன்றி ஈடுபட முடியும். ரசித்து ருசித்து மனதை முழுக்க முழுக்க சாப்பிடுவதில் மட்டும் செலுத்தி உண்ணவேண்டும்.
5. திட்டமிடல்;
நேர மேலாண்மையை மிகச்சரியாக கையாள்வதற்கு திட்டமிடல் மிகவும் அவசியம். அன்றைய நாளில் செய்யவேண்டிய வேலைகளை திட்டமிட்டு அவற்றை ஒரு நோட்டில் குறித்துக்கொள்ள வேண்டும். அவசியமற்றதை விலக்கிவிட்டு தேவையானவற்றில் கவனம் செலுத்தலாம். வெற்றியை நோக்கிய பயணத்தில் இருப்பவர்களுக்கு திட்டமிடல் மிகவும் உதவியாக இருக்கும்.
6. செல்போனைத் தவிர்த்தல்;
பெரும்பான்மையானோர் காலையில் எழுந்ததும் சோசியல் மீடியாவில் நேரம் போவது தெரியாமல் மூழ்கிக்கிடப்பார்கள். செல்போனை உபயோகித்து நேரத்தை வீணடிக்காமல் இலக்கை அடைவதற்கான திட்டமிடல், வழிமுறைகள் போன்றவற்றை செயல்படுத்த வேண்டிய யோசனையில் மூழ்கலாம். அன்றைய நாளை மிகவும் வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவும்.
7. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள்;
காலை நேரத்தில் எழுதுவது, ஓவியம் வரைவது, இசைக்கருவி வாசிப்பது சத்தான உணவை சமைப்பது என்று அந்த நாளை ஆக்கப்பூர்வமாக தொடங்குவது பல நன்மைகளை தரும். மூளையை கிக்ஸ்டார்ட் செய்து ஆக்கப்பூர்வமான சிந்தனையைத் தூண்டுகிறது. படைப்பாற்றலை எத்தனை அதிகமாக பயன் படுத்துகிறோமோ அத்தனைக்கு அது வலிமையாக மாறுகிறது.
8. நீர் அருந்துதல்;
காலையில் கண்விழித்ததும் பிரஷ் செய்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் உடலில் நீரேற்றம் சரியாக இருக்கும். தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து அதை அருந்தினால் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இது ஆற்றல் நிலைக்கும் மூளை செயல்பாடுகளையும் அதிகரிக்கும்.
9. சுய உறுதிமொழிகள்;
சுய உறுதிமொழிகள் என்பது நேர்மறையான அறிக்கைகள் ஆகும். சவால்கள், சுயசந்தேகம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை சமாளிக்க உதவும். அவை சுயமரியாதையை அதிகரித்து, ஒருவரை ஊக்குவித்து இலக்கை நோக்கி பயணப்பட உந்துதலாக அமையும். தாம் திறமையானவர், தகுதியானவர், என தனக்குத்தானே ஒருவர் சொல்லிக் கொள்ளும்பொழுது அன்றைய நாள் வெற்றிகரமான நாளாக அமையும்.