

பள்ளியில் படித்த காலத்தில் இருந்து நண்பர்களிடம் பழகுவது என்றால் எல்லோருக்கும் அலாதி பிரியம். ஒரு நாள் நண்பனைக் கண்டு பேசாவிட்டால் அவ்வளவுதான். எதையோ இழந்ததை போல் தவிப்போம்! பேசிய பிறகுதான் மனதில் ஒரு சந்தோஷம் நிலவும். அப்படி நட்பு பற்றிய உயர்வான சிந்தனைகளை இப்பதிவில் காண்போம்.
ஒரு நல்ல சிறந்த நண்பனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அவருடன் நன்றாகப் பழகவேண்டும். அவரின் நல்ல குணம், குறைபாடுள்ள குணம் இரண்டையும் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா மனிதரிடமும் குறை உண்டு என்பதை நன்றாக உணர்ந்த பின்பு நண்பனை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி தேர்வு செய்யும்போது தேர்வு செய்பவர் மிகவும் நல்ல நண்பனாக இருக்க வேண்டும்.
நட்பின் சிறப்பை அனைவரும் உணர்ந்து விட்டால் உலகத்தின் பாதி பிரச்சனை தீர்ந்து விட்ட மாதிரிதான்.
கார்ல் மார்க்ஸ்க்கு 'ஏங்கெல்ஸ்' என்ற ஒரு நண்பன் கிடைத்திராவிட்டால், அவர் எழுதிய பல்வேறு நூல்கள் வெளியிடப்படாமலே போயிருக்கும். கார்ல் மார்க்ஸின் பல்வேறு புத்தகங்கள் வெளியிட உதவி புரிந்தவர் அவரின் லைப் லாங் பிரண்ட் ஏங்கெல்ஸ் தான். இதுதான் நட்பின் சிறப்பு.
நண்பர்கள் இல்லாவிட்டால் பெரும்பாலோர் துன்பத்தின் தூணாகவே நின்று இருப்பர்.
நெப்போலியன் வெளியூரில் இருந்தபொழுது அவரது தாய் வறுமையில் வாடிக்கொண்டிருந்தார். தானும் உன் உடன் பிறந்தவர்களும் வறுமையால் வாடுவதாக எழுதிய கடிதத்தைப் படித்த நெப்போலியன் 'அனல் இடப்பட்ட புழுவாகத் துடித்தார்' அவருக்கு ஆறுதலாக எங்கிருந்தோ அவரைக் காண வந்த தெமாஸிஸ் என்ற நெப்போலியனின் நண்பன் விஷயம் அறிந்ததும் தன்னிடம் இருந்த 6 ஆயிரம் டாலரை தந்து உதவினார். அந்த நண்பனை 15 ஆண்டுகளாகத் தேடி அலுத்துப்போனார் நெப்போலியன். ஒரு நாள் தன் நண்பனைக் கண்டே விட்டார். அப்பொழுது அவருக்கு நெப்போலியன் திருப்பித் தந்தது 60 ஆயிரம் டாலர். இதுவல்லவோ நட்பு. காலத்தினால் செய்த உதவி என்பது இதுதான்
நட்பு என்பது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்துவிடும் வரை நாம் அதன் உண்மையான மதிப்பை உணர்வதில்லை:
உடல்நிலை சரியில்லாமல் போகும்போதுதான் அடடா! இதற்கு முன்பு எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தோம். இனி அந்த ஆரோக்கியத்தை பெற முடியுமா? என்ற ஒரு ஏக்கம், கவலை வரும். அதன் பிறகு முன்பிருந்த நிலையை பெற்று விட்டால் ஆனந்தமடைவோம். அதில் குறைவுபட்டால் மன நிம்மதி இன்றி தவிப்போம். அப்பொழுதே ஆரோக்கியத்தை மேம்படுத்தி இருக்கலாமே என்று சிந்தனையை சிதற விட்டுக் கொண்டே இருப்போம். அது போன்றதுதான் நட்பும். அப்படித்தான் நட்பு நல்ல நிலையில் இருக்கும் வரை அதைப்பற்றி எந்த சிந்தனையும் கொள்ள மாட்டோம். பிரிவு என்று வந்துவிட்டால் இடைவிடாது கலங்குவது, அதற்கு முன்பு அந்த நட்புடன் இருந்த நாட்களை நினைத்து நினைத்து ஏங்குவோம். அப்படி ஏங்க வைப்பது தான் உன்னதமான நட்பு. திரும்பவும் அதைப் பெற்று விட்டால் சொல்ல வேண்டுமா இன்பத்திற்கு.
நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்போம். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் சந்தோஷத்துக்கு ஏனைய அனைத்து விஷயங்களுக்கும் ஆத்மார்த்தமாக நம் உணர்வை பரிமாறிக் கொள்வது நட்பிடம் தான். உறவு முறைகளில் பேசிக்கொள்ள முடியாத சில சிக்கலான பிரச்சனைகளை மனம் விட்டு பேசி தெளிவு பெறுவது நட்பிடம்தான். நட்பை காப்பது, நல்ல நட்பை எப்பொழுதும் இழந்து விடாமல் உறுதுணையாக வைத்துக் கொள்வது என்றைக்கும் நமக்கு ஆறுதல் தரும் விஷயம்.