ஒவ்வொருவரும் அவரவர் திறமைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற வகையில் ஒவ்வொரு குறிக்கோளுடன் வாழ் கிறார்கள். அதை அவர்கள் சரியாக நிறைவேற்றும்போது அவர்கள் வாழ்க்கை நிறைவடைகிறது. சமுதாயமும் அவர்களால் பயன்பெறுகிறது.
நாமும் நம்முடைய வாழ்க்கை என்ற புத்தகத்தை நமக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அதில் உள்ள உண்மையான கருத்தை உணர்ந்து செயல்படுத்த வேண்டும். அதை உருவாக்க ஒரு குறிக்கோளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
சரியான குறிக்கோளும் அமைப்பும் இல்லாத இயற்கை சக்திகள் கூட மனிதனுக்கு பயன்படாமல் போய் விடுகின்றன .அதனால்தான் மனிதன் இயற்கை தரும் ஆற்றல்களை கூட ஒரு குறிக்கோளுடன் ஒரு அமைப்புக்குள் கட்டுப்படுத்தி வைத்து பயன்படுத்துகிறான்.
மழை வெள்ளமாக பெருகி, தனக்கென பாதை அமைத்துக் கொண்டு பள்ளம் நோக்கி பாய்கிறது. அதையே நாம் நதி என்கிறோம். இதை இயற்கையின் போக்கிலேயே மனிதன் விட்டு விட்டால் மழை பெய்து முடிந்த பத்து நாட்களுக்குள் கடலுக்குள் சென்று வீணாகி கலந்து விடுகிறது. பிறகு விவசாயம் செய்வது எப்படி?
அதனால்தான் மன்னர்கள் காலத்திலேயே மலைப் பிரதேசங்களில் மழை அதிகமாக பொழியும் இடங்களில் காட்டாறாக பெருகிவரும் நீரை அணைக் கட்டி தடுத்து தேக்கி வைத்தார்கள். பிறகு விவசாயம் செய்ய வேண்டிய பருவ காலம் வரும்போது அணையிலிருந்து நீரை திறந்து விட்டு ஆற்றுப் பாசனம் மூலம் நீரை விவசாய நிலங்களுக்கு அனுப்பினார்கள்.
விவசாயி ஆற்று நீரை வாய்க்கால்கள் மூலம் தன் வயலுக்கு நீர் பாய்ச்சி, பயிர் விளைவித்து, தனக்கும் நாட்டுக்கும் பயன்படுமாறு செய்தான். ஆக இயற்கை பொழியும் மழை நீரைக் கூட, ஒரு குறிக்கோளோடு, ஒரு நோக்கத்தோடு, தேக்கி வைத்து பயன்படுத்தினால்தான் உலகம் பயன்பட முடியும். ஏரி குளங்கள் நிரம்பி ஊரும் உலகம் பெற முடியும்.
மனிதன் தன் அறிவையும், திறனையும், உழைப்பையும் தேக்கி சரியான வழியில் செலுத்தி அதன் மூலம் தானும் பிறரும் நலம் பெறும் வகையில் செய்ய வேண்டும். அதனால்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிக்கோள் தேவை என்று அறிஞர் உலகம் வலியுறுத்துகிறது.
நாம் இந்தியர்களாக இருந்தோம். இந்தியா என்றொரு நாடும் இருந்தது. அது நம்முடைய நாடு என்பதையும் அறிந்திருந்தோம். ஆனால் நாம் வெள்ளையர்களுக்கு அடிமையாக இருக்கிறோம் என்பதை உணர்த்தி அடிமை தளையில் இருந்து விடுபட்டு விடுதலை பெற்ற மனிதர்களாக நம்மை நாமே ஆளவேண்டும் என்ற குறிக்கோளை மகாத்மா காந்தி தானே நமக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.
இதற்கு ஏற்ற வகையில் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் தனது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டால் அதுவே நம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உரிய குறிக்கோளாக அமைந்துவிடும்.