அணுகுமுறை மிகவும் முக்கியமான ஒன்று. ஒருவருக்கு சிக்கல்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டாலும் அதை எப்படி அவர் அணுகுகிறார், கையாள்கிறார் என்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது. நேர்மறை அணுகுமுறை கொண்ட ஒருவர் இவற்றை மிக எளிதாக கையாள்வார். நேர்மறை அணுகுமுறையின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
அணுகுமுறை என்பது ஒருவரின் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. ஒருவரின் வாழ்வையே வடிவமைப்பதில் அணுகுமுறை முக்கிய இடம் பிடிக்கிறது. நேர்மறை அணுகுமுறை மூலம் அவர் தன் மனநிலையை மாற்றி அதிக வெற்றியையும் நிறைவையும் அடைய முடியும்.
அணுகுமுறையில் தான் எல்லாமே அடங்கி இருக்கிறது. ஒருவர் தன்னுடைய திறனையும் தன்னையும் வெகுவாக நம்ப வேண்டும். அது அவர்களுக்கு தன்னம்பிக்கையின் அளவை அதிகரிக்கும். சவால்களையும் பிரச்சனை களையும் சமாளித்து இலக்கை அடைய உதவும்.
நேர்மறையான அணுகுமுறை கொண்ட ஒருவர் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை அழகான வாய்ப்புகளாக மாற்றுவார். கடினமான சூழ்நிலைகளில் கூட அவற்றில் உள்ள நேர்மறையான விஷயங்களைக் கண்டறிந்து அதை செயல்பாடுகளில் பயன்படுத்துவார்.
இவர்கள் தங்களது நேர்மறையான அணுகுமுறை மற்றும் மனப்பான்மையால் தங்களை சுற்றி உள்ளவர்களை கூட நேர்மறையாக மாற்றும் சக்தி படைத்தவர். அதனால் இவருக்கு பிரச்சனை தருபவர் கூட ஒரு கட்டத்தில் மனம் மாறி இவருக்கு நன்மை செய்யக்கூடும்.
நேர்மறை அணுகுமுறை, சம்பந்தப்பட்ட நபரை கம்பீரத்தோடும் தன்னம்பிக்கையோடும் செயல்பட வைக்கும். இவரது முகத்தில் புன்னகை எப்போதும் இருக்கும். இதனால் பிறருடன் தகவல் தொடர்பில் ஈடுபடும் போது பிளஸ் பாயிண்ட்களாக செயல் படுகின்றன. இவருக்கு தேவைப்படும் தகவல்களை கேட்பவர்கள் தயக்கமின்றி தருகிறார்கள். உதவிகளையும் மனம் உவந்து செய்கிறார்கள்.
இவரது சொற்கள் எப்போதும் நேர்மறை தன்மையோடு அமைந்திருக்கும். எடுத்துக்கொண்ட வேலையை எப்பாடுபட்டாவது முடிக்கலாம் என்கிற உறுதி இருக்கும். சிரமங்களை கூட மிக எளிதாக சமாளிப்பார்கள். நேர்மறை அணுகுமுறையினால் நிறைய நண்பர் களையும் பெற்று விடுவார்கள். பிறரை எளிதில் வசீகரிக்கவும் செய்வார்கள். அதனால் இவர்கள் வாழ்வில் மிக விரைவில் வெற்றி அடைந்து விடுவார்கள்.