டெல்லிக்கு மாற்றலாகி சென்ற பொழுது இரவு 11 மணிக்கு பால் காய்ச்சினோம். அதில் போட்டு குடிக்க சர்க்கரை இல்லை. குழந்தைகளோ பாலுக்கு தவிக்கிறார்கள். சர்க்கரை இல்லாமல் எப்படி கொடுப்பது? கடையெல்லாம் பூட்டியாயிற்று. என் கணவரோ, எப்படியோ சமாளி. இப்பொழுது கடையில் போய் எதுவும் வாங்க முடியாது என்று கூறிவிட்டார்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அமைதியாக இருந்து விட்டேன். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டு பெண்மணி ஒரு கிண்ணம் நிறைய சீனியுடன் வந்து, நீங்கள் இன்று வருவீர்கள் என்று தெரிந்திருந்தால் ஸ்வீட் வாங்கி வைத்திருந்திருப்பேன். நீங்கள் வருவது தெரியாததால் வீட்டில் எந்த வித ஸ்வீட்டும் இல்லை. ஆதலால் முதன் முதலாக பார்க்க வருபவர்களுக்கு இனிப்பு கொடுக்க வேண்டும் என்பது வழக்கம். வீட்டில் சர்க்கரை மட்டும்தான் இருந்தது. தவறாக நினைத்துக் கொள்ளாமல் இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார் அந்தப் பார்சி பெண்மணி. 'திக்கற்றவர்க்கு தெய்வமே துணை' என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். மனம் நிம்மதியாகி அவருக்கு அடி மனதின் ஆழத்திலிருந்து நன்றியை நவின்றேன்.
பிறகு ஒரு வழியாக குழந்தைகளுக்கு பால் கொடுத்து தூங்க வைத்தேன். இந்தச் சம்பவம் கீழ்வரும் இந்த கதையை பிரதிபலிப்பதாக இருந்தது. இதோ அது.
மனதை தங்கமாக மாற்றுவது எப்படி என்று தியானிக்க ஆரம்பித்தார் குரு.
வாழ்வில் வளர நினைப்பவர்கள் தங்களது செல்வங்களை பாதுகாப்பாக வைத்திருக்கப் பாடுபடுகிறார்கள். சிறந்தவர்கள் செல்வத்தை சிறப்பு செல்வமாகவே மாற்றி விடுகிறார்கள். அதனால் நன்கு பயன்படுகிறார்கள். பிறருக்கும் பயன்படுத்துகிறார்கள்.
பெர்சியாவில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட பார்சிகள் பலர் அடைக்கலம் இன்றித் திரிந்தார்கள். நம் நாட்டிற்கு வந்து மும்பை பகுதியில் ஒரு கிராமத்தில் உள்ள தலைவரிடம் அடைக்கலம் யாசித்தார்கள்.
அவ்வளவு பேருக்கும் அடைக்கலம் தர நினைத்தாலும், அதற்கான வசதி இல்லையே என்று தயங்கினார் கிராமத் தலைவர். அதை வெளிப்படையாகச் சொல்வது விருந்தோம்பலுக்கு இழுக்கு என்று கருதிய அவர் சூசகமாக தெரிவித்தார்.
ஒரு கிண்ணம் நிறைய பால் எடுத்து வரச் செய்து, அவர் அதை குழு தலைவரிடம் கொடுத்தார்.
அவரது கருத்தைப் புரிந்து கொண்ட பார்சித் தலைவர் ததும்பும் கிண்ணத்தில் சிறிது சர்க்கரையை விட்டார். அதை கரைத்து கிண்ணத்தை தலைவரிடமே சிந்தாமல் திருப்பித் தந்தார்.
'உங்கள் நாட்டின் மேன்மைக்கு மெருகூட்டுபவர்களாகவே நாங்கள் இருப்போம். சுமையாக அல்ல' என்பதை அவர் இதன் மூலம் காட்டினார்.
உடனே கிராமத்தலைவர் மகிழ்ந்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். பார்சிகளும் நம் பாரம்பரியத்தோடு ஒன்றிக் கலந்து விட்டனர்.
இன்பத்திற்கும், துன்பத்திற்கும், நன்மைக்கும் தீமைக்கும், இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும், பாவத்திற்கும் புண்ணியத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும், என அனைத்துக்கும் காரணம் மனம்தான். மனதின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன. பகுத்தறிவையும் மனமாக்கிரமித்துக் கொண்டு வழிநடத்துகிறது. கருணை உள்ளம் கொண்டவனை குற்றவாளியாக்குவதும், குற்றவாளியை ஞானியாக்குவதும் இதே மனம்தான். அது நோக்கிச் செல்லும் பாதைகளில் அனுபவத்தை பெற்று பேதலிக்கின்றபோதுதான் அறிவு வேலை செய்கின்றது. எல்லா அனுபவங்களையும் கொண்டு வருவது மனம்தான். -கவியரசு கண்ணதாசன்
கூடி வாழ்வோம் கோடி நன்மை பெற!