-நிதிஷ்குமார்
நம்மில் பலர் நாம் ஏதாவது ஒரு இலக்கை அடைந்து விடவேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம். ஆனால், சில மாதங்கள் அல்லது வருடங்கள் கடந்து நாம் அந்த இலக்கை மறந்துவிடுவோம்; அல்லது, வேறு ஏதாவது ஒரு இலக்கை தேர்வு செய்து அதை நோக்கி பயணிப்போம் ஆனால் அதுவும் சில காலம் வரைதான். பிறகு இதே போல் வேறு ஏதாவது ஒரு இலக்கை நோக்கிய பயணம் தொடரும். ஒரு காலகட்டத்திற்கு மேல், வாழ்க்கையை எப்படியோ ஓட்டினால் போதும் என்ற மன நிலைக்கு வந்து விடுகிறோம். ‘ஏன் நம்மால் நினைத்ததை அடைய முடியவில்லை?’ என்று பெரும்பாலும் நாம் சிந்திப்பது இல்லை. இப்போது சிந்திப்போமா? நாம் நினைத்த இலக்கை அடைய இதோ 4 வழிகள்:
1. குறிக்கோள் பற்றிய தெளிவு
தெளிவு இல்லாத குறிக்கோளாலே பலர் தெளிவாக குறிக்கோளை அடைவது இல்லை. எங்கு செல்ல வேண்டும் என்று தெரிந்தால்தானே அதற்குரிய பேருந்தில் ஏறி சென்று உரிய இடத்தை அடைய முடியும்? எங்கு செல்லுவது என்றே தெரியாமல் ஏதேதோ பேருந்தில் ஏறினால்? நிச்சயம் அந்த பேருந்தும் ஏதோ ஒரு இடத்திற்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும். ஆனால் அது நாம் நினைத்த இடமாக இருக்காது. அந்த பயணத்தின் மூலம் நாம் விரயம் செய்தது பணத்தையும் நேரத்தையும்தான்.எனவே நாம் எதையாவது அடைய வேண்டும் என்று எண்ணினால் முதலில் எதை அடைய வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும்.
2. இயலக்கூடியதான குறிக்கோள்
‘இலக்கு என்றாலே அதனை அடைய ஒரு வழி இருக்குமே! எனவே, இந்த இலக்கை அடைவது ஏன் இயலாமல் போகும்?’ என்று நமக்கு தோன்றும். ஆனால் முதுமை அடைந்த ஒருவர் ஒலிம்பிக்கில் நூறு மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வெல்லுவது சாத்தியமா என்பது போலதான் இது. நம்மால் நடைமுறைக்குச் சாத்தியமான ஒரு குறிக்கோளை தேர்வு செய்தால் நிச்சயம் அதனை அடைய முடியும்.
3. தேவையை தெரிந்து திறமையை வளர்த்தல் வேண்டும்.
நம்முடைய குறிக்கோளில் தெளிவு இருந்து, அது அடைய கூடியதுமாக இருக்கும் பட்சத்தில் அந்த குறிக்கோளினை அடைவதற்காக நமக்கு என்ன என்ன தேவை, என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து, அதற்கான திறமையை வளர்த்தல் வேண்டும். நாம் ஆசிரியர் ஆக வேண்டும் என்றால் அதற்கு உரிய படிப்பினை படித்து அதற்கு உரிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் போதுமா, அதனால் நாம் சிறந்த ஆசிரியர் ஆக இயலுமா என்றால் அது சந்தேகம்தான். சிறந்த ஆசிரியருக்கான தகுதி பாடம் நடத்துவது மட்டுமல்ல, அதனை மாணவர்களுக்கு புரியும்படி நடத்தவதும் மாணவர் களுக்கு படிப்பின் இன்றியமையாமையையும் வாழ்க்கைக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்த்துவதும் ஆகும். இதை போலதான் மற்ற துறைகளும், தொழில் தொடங்கி வெற்றி பெற வேண்டுமென்றால், அதை எங்கு துவங்கினால் சிறப்பாக இருக்கும், எங்கு பொருட்களை வாங்க வேண்டும், யாரிடம் விற்க வேண்டும், என்பன போன்ற தேவைகளை தெரிந்துகொண்டு நம் திறமையை வளர்த்தல் வேண்டும்.
4.தளராத மனம் வேண்டும்
நீங்கள் அடைய வேண்டிய இலக்கில் தெளிவு, அதை அடைவதற்கான வழிமுறைகள், உங்களுடைய திறனாய்வு என்று அனைத்தும் ஒன்றுகூடி வந்தாலும், உங்களுக்கே உங்களால் இது முடியுமா என்ற சந்தேகம் ஒரு நொடி பொழுது வந்தாலும்கூட, அது மேலும் உங்களை அந்த முயற்சிகளை செய்ய விடாது தடுத்துவிடும். எனவே, எதுவாக இருந்தாலும் சரி நிச்சயம் நம்மால் இது முடியும் என்று உறுதியாக போராட வேண்டும். இப்படி போராடினால் நீங்கள் நினைத்த இலக்கை அடைவது எளிது.