முடியும் என்ற நல்ல எண்ணத்தோடு துவங்குங்கள், தொடருங்கள்.
பிறரிடமிருந்து நல்ல பழக்க, வழக்கங்கள் மற்றும் நல்ல சிந்தனைகள், யோசனைகள் (good ideas), பண்புகளைக் கிரகித்துக்கொண்டு பழக முற்படுங்கள். தொடர்ச்சி முக்கியம் என்பதை மறக்காதீர்கள்.
நன்றியுணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். (gratitude)
உதவி பெறுங்கள். உதவியவர்களையும், உதவி பெற்ற சூழ்நிலைகளையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் பாடம் கற்றுக்கொடுகின்றது. அதுபோல்தான் பெறும் உதவிகளும் என்பதை மறக்காதீர்கள்.
உதவி செய்ய முயலுங்கள். பிறருக்கு தக்க சமயத்தில் உதவி செய்யும் சந்தர்ப்பம் எல்லோருக்கும், எப்பொழுதும் கிடைப்பது இல்லை. உதவி செய்யமுடிந்தால் மகிழ்வோடு செய்யுங்கள். அந்தத் தருணத்தைப் பாக்கியமாக கருதுங்கள்.
நன்றி கூறவும், மன்னிப்பு கோரவும் தயங்காதீர்கள். மிக முக்கியமாகத் தாமதிக்காதீர்கள். இந்த இரண்டு செயலும் உங்களின் நற்பண்புகள், பிறருக்கு தெரிய வழி வகுக்கும். நீங்கள் நன்றி கூறுவதாலும், மன்னிப்பு கேட்பதாலும் ஒன்றும் குறைந்துவிட மாட்டீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள், செயல் படுத்துங்கள். அதன் மூலம் கிடைக்கும் மனநிம்மதி (satisfaction) எவ்வளவு ரூபாய்கள் கொடுத்தாலும் கிடைக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் சக்திக்கு ஏற்ப முன்னேற முயலுங்கள். அகல கால் வைத்துவிட்டு, முடியாமல் அவதிபட்டு நம்பிக்கை இழப்பதைவிட, படிப்படியாக முன்னேற முயலுங்கள். நேர்மறை எண்ணங்கள், வாழ்க்கை முறை எல்லாம் சரிதான். ஆனால், நீங்கள் பயணிக்கப்போவது கரடு, முரடான, ஏற்ற, தாழ்வு மிக்க நிஜ வாழ்க்கை பாதை. இந்தப் பாதையில் எதிர்பாராத தடங்கல்கள், திருப்பங்கள் இவற்றைச் சந்திக்க வேண்டியிருக்கும். அவற்றை எதிர்கொள்ள மன திடம், தேவைக்கு ஏற்ப சிந்திக்கும், செயல்படுத்தும் திறன்களை வளர்த்துக்கொள்ள மறக்காதீர்கள்.
பலவகை குணங்கள் நிறைந்த மனிதர்களுடன் பழக, எதிர்கொள்ள வேண்டிய தருணங்கள் கட்டாயம் வந்துசெல்லும். எனவே, அதற்கு ஏற்ப தயார் நிலையில் இருப்பதும் அவசியம்.
முன்னேறுவது என்பது முடிவு அல்ல. அது ஒரு தொடர் நிகழ்வு. அதை மனதில்கொண்டு, தன்னம்பிக்கையோடு முயன்று வந்தால் உங்களுடைய முன்னேறும் திறமை உங்களுக்கே தெரிந்து, அதுவே உந்துக்கோலாக (motivation ) மேலும் முன்னேற பெரிதும் உதவும். உங்கள் மீதும், உங்கள் திறமைகள் மீதும் முழு நம்பிக்கை வைத்து துவளாமல், விடாமல் செயல்படுங்கள். முன்னேற்றம் நடக்கும்.