
- லாரா
ஒருநாள் என் பிள்ளையிடம் இன்லேண்ட் லெட்டரை(Inland letter) கையில் கொடுத்தேன், அதை பார்த்தவுடன் ஆச்சரியமாக, என்னம்மா இது கலரா இருக்கு பேப்பர் என்று கேட்டாள்.
80களிலும் 90களிலும் எண்ணங்களையும், அன்பையும், பாசத்தையும் சுமந்து சென்ற அந்தத் தாளின் மதிப்பு இன்றுள்ள பிள்ளைகளுக்கு ஒரு விளையாட்டுப் பொருளாகத்தான் தெரிகிறது.
என்னுடைய பழைய கடிதங்களையும் என் அப்பாவின் கடிதங்களையும் எடுத்துக் காட்டினேன். கண்களில் கண்ணீர் மல்க படித்து முடித்தாள்.
அன்றிலிருந்து அவளுக்கும் தெரிந்தது, நினைவுகள் எழுத்துக்களின் வடிவில் அழியாதது என்பது. அவளுடைய இனிமையான நினைவுகளையும் கசப்பான அனுபவங்களையும் எழுதும் பழக்கத்தை துவங்கினாள்.
அன்று முதல் அவளும் அவள் உடன்பயிலும் சக மாணவிகளுக்கும் இந்தப் பழக்கத்தை அவள் துவக்கி வைத்திருக்கிறாள்.
அதுமட்டுமல்ல, எங்கள் குடும்பத்தில், 4 முதல் 15 வரையில் உள்ள அனைத்து பிள்ளைகளும் எழுதும் பழக்கத்தைத் துவங்கி இருக்கிறார்கள். அந்த மழலை எழுத்துக்களில் பிழையுடன் இருக்கும் அன்பை படிப்பதற்கு பெற்றோருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எங்கள் வீட்டுச் சிறு பிள்ளை தவறு செய்த போது, சிறிய பேப்பரை எடுத்து, ‘சாரி’ என்பதை ‘சரி’ என்று எழுதிக் கொடுத்து, அத்தனை உச்சப் கோபத்தில் இருந்த எங்கள் அனைவரையும் சிரிக்க வைத்தது.
நான் எங்கெல்லாம் சிறு பிள்ளைகளைக் கைப்பேசியுடன் காண்கிறேனோ, அப்போதெல்லாம் எனது மனம் மிகுந்த வேதனைக்கு உள்ளாகிறது. என்னால் முடிந்த இடங்களிலெல்லாம் அவர்களது கையில் உள்ள கைபேசியை விளக்கிவிட்டு கையில் ஒரு சிறு தாளையும் எழுதுகோளையும் கொடுத்து அவர்களைத் திசைத்திருப்பிய பிறகே எனது கால்கள் நகர்கின்றன.
நமது அடுத்த சமுதாயத்தை உருவாக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
இன்று நானும் எனது குடும்பமும் விதைக்கும் சிறுவிதை கட்டாயம் பெரிய ஆலமரமாக மாறும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நீங்களும் உங்களால் முடிந்த வரை சிறு பிள்ளைகளை கைபேசியிலிருந்து காப்பாற்ற உதவுங்களேன்.
அன்புள்ள உணர்வுள்ள சமுதாயத்தை உருவாக்குவதில் ஆர்வமுள்ள உங்களின்
அன்பு தோழி லாரா.