
நாம் தினமும் பலவிதமான அறிவுரைகளை கேட்டிருப்போம். அத்தகைய அறிவுரைகள் அனைத்தும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் நமக்கு பொருந்துவதில்லை. சிலருக்கு அந்த அறிவுரைகள் ஒத்துப்போகும், சிலருக்கு சரிப்பட்டு வராது. எனவே, எல்லா அறிவுரைகளையும் பொதுவாக எடுத்துக் கொள்வது சரியாகாது. அறிவுரைகளை கூட நேரம், காலம், இடம் பார்த்துப் பயன்படுத்த வேண்டும். இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒருவர் ஒரு புத்தகத்தில் இப்படியொறு அறிவுரையை படித்தார். ‘நாய் நம்மை துரத்தும்போது அதைப் பார்த்து பயந்து ஓடுவதால்தான் நாய் நம்மை இன்னும் வேகமாக துரத்திக்கொண்டு வருகிறது. இதுவே, நாயை பார்த்து நின்று கையிலே ஒரு கல்லை எடுத்துக் கொண்டு நாயை பார்த்து முறைத்தால் அது பயந்து ஓடிவிடும்’ என்று போட்டிருந்தது. அவருக்கு இந்த அறிவுரை மிகவும் பிடித்துப் போய்விட்டது.
சில நாட்கள் கழித்து அவரை நாயும் துரத்தியது. முதலில் இவருக்கு இந்த அறிவுரை நியாபகம் வரவில்லை. வேகமாக நாயைக் கண்டு பயந்து ஓடிக் கொண்டேயிருந்தார். திடீரென்று இவருக்கு அந்த அறிவுரை நினைவுக்கு வந்தது. உடனே ஓடாமல் நின்றார். கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்துக்கொண்டு தைரியமாக திரும்பி நாயை பாரத்து முறைத்தார்.
ஆனால், அந்த நாய் அவரை பார்த்து பயப்படவும் இல்லை. திரும்பி போகவும் இல்லை. நேராக வந்து அவரை கடித்து வைத்துவிட்டது. ஏனெனில் அது ஒரு வெறிப்பிடித்த நாய். அன்று அவருக்கு ஒரு விஷயம் புரிந்தது. அந்த புத்தகத்தில் அவர் படித்த அறிவுரை எல்லா நாய்களுக்கும் பொருந்தாது என்று உணர்ந்துக்கொண்டார்.
இந்தக் கதையில் வருவதுபோல, நாமும் நிறைய அறிவுரைகளை படிக்கிறோம், நிறைய அறிவுரைகளை கேட்கிறோம். ஆனால், எல்லா அறிவுரைகளும் எல்லா இடங்களுக்கும் பொருந்திப் போவதில்லை. எனவே, இடம், பொருள், காலம் பார்த்து அறிவுரையை செயல் படுத்துங்கள். இதை புரிந்துக்கொண்டு நடந்தால், நலமாக வாழலாம். முயற்சித்துப் பாருங்கள்.